Tuesday, May 7, 2013

"பீ" ஆவணப்படம் பற்றி "பேசாமொழி" இணைய இதழுக்காக எனது பேட்டி

சாதியடுக்கை விசாரணைக்குட்படுத்தும்

 பீ, மயானக்குறிப்புகள் & செருப்பு 

இயக்கம்: அமுதன் ஆர்.பி.



1.                   எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களுக்கு அட்ராக்டிவ்வான ஒரு தலைப்பை வைக்க விரும்புவர். இந்த படத்திற்கு நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு ‘பீ’. ஏன்?

பீ எனும் பெயர் தான் அந்தப்படத்திற்குப் பொருத்தமானது. அதை விட வேறு எதுவும் அட்ராக்டிவாகவும் இருக்காது. மேலும் அந்தப்படத்தின் ட்ரீட்மென்ட்டே முகத்தில் அறைகிற பாணி தான். பெயரும் முகத்தில் அறைகிற மாதிரி இருக்கவேண்டும். மேலும் எந்தவிதமான சமரசமும் இல்லாத பெயரும் பீ தான். எனக்குத் தெரிந்து பலர் அதை உச்சரிக்கத் தயங்கினர். அதுவே பாதி வெற்றி தான். பலருக்கு இந்தப்படமே ஒரு பரீட்சை தான். பெயரை எப்படி உச்சரிப்பது, அதைப்பற்றி எப்படிக் குறிப்பிடுவது, இந்தப்படத்தை எப்படிப் பார்ப்பது, திரையிடுவது, விவாதிப்பது எல்லாமே நமது எல்லைகளை சோதித்துப் பார்ப்பது தான்.

2.                   நம் சமூகத்தில் எல்லா வார்த்தைகளையும் நாம் நம் அனுபவத்தின், நம்முன் எழுப்பப்பட்டிருக்கும் பிம்பங்களின் ஊடாகத்தான் பார்க்கிறோம். உதாரணம் சேரி, அக்ரஹாரம். இந்நிலையில் பீ என்னும் தலைப்பு பார்வையாளர்கள் மனத்தில் ஒரு நெருடலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

பீ எனும் வார்த்தை அந்தத் தொழிலைப் போல இழிவான வார்த்தையாகக் கருதப்படுகிறது. அதனோடு அந்த வேலை பார்ப்பவர்களையும் இணைத்தும் பார்க்கின்றனர். ஒருவித அருவருப்பு இருக்கிறது மக்கள் மத்தியில். அவ்வளவு அருவருப்பு உச்சரிக்கும் போதே வந்தால், அதை அன்றாடம் கையாளும் மக்களின் நிலை என்ன என்பது தான் எனது கேள்வி. மலம் அள்ளும் வேலை செய்பவர்களுக்கு ஆதரவாக, அதை கண்டும் காணாதும் இருப்பவருக்கு எதிராக எடுத்த நிலைப்பாடே இந்தப்பெயர். ஆங்கிலத்தில் ஷிட் எனும் பெயர் தான் வைத்திருக்கிறேன். அதுவும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தீண்டத்தகாத சொல். ஒருவித எள்ளலுடன் தான் அலட்சியத்துடன் தான் படத்தின் பெயரை உச்சரிப்பர். ஆனால் அது உள்ளே முள்ளைப்போல தைக்கும் என்பது எனக்குத் தெரியும்.



3.                   பீ என்று சொன்னாலே முகம் சுழிக்கும் ஒரு புரிதல் நிறைந்த சமூகத்தில் அதை ஒரு ஆவணப்படத்தின் தலைப்பாக வைத்தால், அதுவே பார்வையாளர்களை படத்திலிருந்து தூரம் கட்டி விடுமா?

பார்வையாளனை சிரமத்திற்கும் சங்கடத்திற்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்க வேண்டும் என்பது தான் படத்தின் நோக்கமே. ஒரு படத்தின் தலைப்பு கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது சரி தான். ஆனால் இது மாதிரியான படத்தில் பார்வையாளனோடு யுத்தம் செய்யவேண்டும் என்று வரும் போது தலைப்பு மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பது சரியாகாது. என்னப்பா சொல்ற என்கிற விதத்தில் சவால் விடும் படத்திற்கு தலைப்பும் சவால் விட வேண்டும்.

4.                   இந்த படத்தின் திரையிடல்களில், பீ என்னும் தலைப்பை உச்சரிக்கையில், ஏற்பாட்டாளர்களிடமோ, திரையிடல் ஒருங்கிணைப்பாளர்களிடமோ, பார்வையாளர்களிடமோ ஏதேனும் நெளிவைக் காண இயன்றதா?

ஆரம்பத்தில் இருந்தது உண்மை தான். ஆனால் பிறகு இந்தப்படத்தைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தபின் அதைத் திரையிடவேண்டும் என்கிற எண்ணமே நீங்கள் சொன்ன ஆட்களுக்கு வந்தது என்று நினைக்கிறேன். அவர்களே விரும்பித் தான் படத்தை திரையிட்டனர். ஆனால் நான் குறிப்பிட்ட மாதிரி ஒரு நெருக்கடி இருந்ததை நான் உணரமுடிந்தது. இது ஒரு சோதனை தான். சாதி விளையாட்டில் நீ எங்கிருக்கிறாய் எனும் ஒரு சோதனை தான். இங்கு நடப்பது ஒரு சாதி விளையாட்டு தானே! சாதியினால் பலர் செளகரியங்களை அனுபவித்துக்கொண்டு வரும் விளையாட்டு. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோருக்கும் சாதி ஒரு விதமான செளகரியத்தைக் கொடுத்திருக்கிறது. அதை விடுப்பது எல்லோருக்கும் எளிதல்ல. தலித் மக்களுக்கு வேண்டுமானால் சாதி சுமையாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு? சாதி ஒரு ஏணி தானே? அப்புறம் எப்படி பீ எனும் வார்த்தையை எளிதாக உச்சரிக்க முடியும்?  அதனால் என்னையும் ஒரு தீண்டத்தகாதவனாகத் தான் பார்த்தனர். என்னையும் என்று குறிப்பிடுவது இயக்குநர் அமுதனை. பீ படம் எடுத்த அமுதன் என்றே நான் இன்னும் குறிப்பிடப்படுகிறேன்.

இந்தியாவில் பெருவாரியான ஆவணப்பட இயக்குநர்கள் உயர்சாதிக்காரர்களே. அதனால் அவர்கள் எடுக்கும் ஆவணப்படங்களும் சாதிய மனோபாவம் கொண்டதாக அல்லது சாதியைப் பற்றி மெளனம் சாதிப்பதாகவே இருக்கின்றன. அதனால் பீ மாதிரியான தலைப்பில் படம் எடுத்தால் அதை ஒரு வட்டத்திற்குள் அடைக்கும் முயற்சி நடந்தது. என்னையும் அடைக்கும் முயற்சி நடந்தது. இன்னும் நடக்கிறது. சாதி பற்றி படங்களை தொடர்ந்து எடுத்ததால் என்னை விலக்கி வைக்கும் நிகழ்வுகளும் நடந்தன.

ஆனாலும் எல்லோருக்கும் நெருக்கடி கொடுக்கவேண்டும், மலம் அள்ளும் வேலை பற்றி விவாதம் எழுப்பவேண்டும் என்பது தான் நோக்கம் என்பதால் இந்த விஷயங்களை நான் எதிர்பார்த்தது தான்.



5.                   ஆவணப்படங்கள் என்பது சமூகத்தின் கண்ணாடி. ஆனால் அதுவும் கூட, ஒரு அறிவுசார், இன்டலெக்ட் சர்க்கிளாக, ஒரு கார்ப்பரேட் வியூவிங் போல் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த தலைப்பினால் உங்களுக்கு அந்த வட்டங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பீ எனும் ஆவணப்படத்தை அதன் வடிவத்திற்காகவும், அது எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பார்ப்பவர்கள் உண்டு. திரைப்பட விழாவில் வடிவத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பர். பீ எனும் ஆவணப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை அவர் வேலை செய்யும் போது தொடர்ந்து நகர்ந்தபடி எடுத்த விதம், அதில் நான் கேட்ட கேள்விகள், அதற்கு மாரியம்மாள் சொன்ன பதில்கள், அவரது ஆளுமை, அதற்கு கேமராவும் எடிடிங்கும் கொடுத்த முக்கியத்துவம், அதில் இருக்கும் அரசியல் ஆகியன ஒரு இன்டெலக்சுவல் வட்டத்தில் நல்ல கவனத்திற்கு உள்ளாகின. உண்மையில் இந்தப்படத்தை முதலில் பாராட்டியது செளதாமினி எனும் சென்னை நகரத்தில் வாழும் ஒரு உயர்சாதி, திரைப்படக்கல்லூரி, திரைப்படவிழாக்கள் பின்னணியில் வந்த இயக்குநர் தான். நமது ஆக்டிவிஸ்ட், புரட்சிக்கார நண்பர்கள் யாருக்கும் இந்தப்படத்தை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. இன்னும் பலருக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம்.

6.                   இந்த படத்தை எடுக்க உங்களை தூண்டியது எது?

குஜராத்தைச் சேர்ந்த எனது நண்பர், ஸ்டாலின் எனும் ஆவணப்பட இயக்குநர் லெஸ்ஸர் ஹ்யூமன்ஸ் எனும் குஜராத் மாநிலத்தில் நிலவிய, இன்னும் நிலவுகிற கையால் மலம் அள்ளும் வேலை பற்றி ஒரு முழு நீள ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அதை தமிழாக்கம் செய்திருந்தார். ப்ரீதம் சக்ரவர்த்தி அவர்கள் தான் மொழிபெயர்ப்பு செய்தார். ஸ்டாலின் அந்தப் படத்தின் தமிழ் பிரதியை தமிழ் நாட்டில் திரையிட வேண்டும் என்று விரும்பினார். மதுரைக்கு வந்தார். அவருடன் நான் ஒரு சுற்றுப்பயணம் போனேன். நிறைய இடங்களில் திரையிட்டோம். நல்ல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் பல இடங்களில் ஏன் குஜராத்தைப் பற்றி படம் காட்டுகிறீர்கள்? தமிழ்நாட்டில் இது நடக்கவில்லையா என்று பலர் கேட்டனர். அந்தக் கேள்விகள் தான் என்னை பீ படம் எடுக்கத்தூண்டின.

மேலும் 90களின் பின்பகுதியில் தலித் இலக்கியமும் தலித் அரசியலும் தலித் எழுச்சியும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நேரம். எல்லா சுரணை உள்ளவர்களையும் அந்த அலை பாதித்தது போல என்னையும் அது தாக்கியது.  எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. நான் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். அந்தசாதி எனக்கு பல வசதி வாய்ப்புகளை நான் கேட்காமலேயே தருகிறது. சாதி தரும் சொகுசுகளை அனுபவிக்கும் நான் சாதி இழைக்கும் அநீதிகளை எதிர்க்க வேண்டாமா? எனக்குத் தெரிந்தது ஆவணப்படம் எடுப்பது. எனக்குத் தொழில் ஆவணப்படம் எடுப்பது. வேறு எதுவும் தெரியாது. அதன் மூலம் சாதி பற்றிய, சாதிக்கு எதிரான விவாதத்தை உண்டாக்க நினைத்தேன். பீ தான் சாதிக்கு எதிரான போராட்டத்திற்கு நான் அளித்த சிறு பங்கு. உண்மையில் இந்தியாவில் சாதி பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் படங்கள் உள்ளன. இன்னும் பல படங்கள் வரவேண்டும். என்னால் முடிந்தது நான்கு படங்கள் எடுத்திருக்கிறேன். அவற்றைத் தொடர்ந்து திரையிட்டும் வருகிறேன்.



7.                   ஆவணப்படங்களில் அழகியல் சேர்க்கும் காலத்தில் பீ என்ற இப்படத்தில் அதை உடைக்கும் விதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்திலும் இதற்கேற்ற அழகியல் உள்ளது. அதைக் குறித்து...

பீ படத்தில் நான் பயன்படுத்தியிருக்கும் சினிமா வகைமுறையை சினிமா வெரிடே எனும் வகையில் சேர்க்கலாம். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சினிமா வகையான டிரைக்ட் சினிமா, மற்றும் தென் அமெரிக்க சினிமாவின் கொரில்லா சினிமா ஆகிய சினிமா பாணிகளின் தொடர்ச்சியாக பீ படத்தை சேர்க்கலாம். இதற்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவை மண்ணிலிருந்து உருவானவை. நான் பார்த்து சினிமா படித்த இயக்குநர்களான பேட்ரிசியோ குஸ்மான், டென்னிஸ் ஓ ரூர்க், ஆனந்த் பட்வர்த்தன் ஆகியோர் இந்தப் பாணிகளை தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கியிருக்கின்றனர். அதை அவர்களின் படங்களில் பார்க்கலாம்.

ஒருவர் தாம் தேர்ந்தெடுக்கும் வகைமுறை, அழகியல் ஆகியன அவரது தனிப்பட்ட ஆளுமை சார்ந்தது மட்டுமல்லாது, அவர் சினிமா எடுக்கும் சூழல், அவர் எடுத்திருக்கும் கதைக்களம், அவர் அதை எங்கு பயன்படுத்துவார் ஆகியன சார்ந்தும் இருக்கின்றன. ஏனெனில் நீங்கள் படம் எடுத்தால் யார் பார்ப்பது என்பது முதல் கேள்வி? இப்படி ஒரு படம் எடுத்தால் யார் திரையிடுவார்கள்? அதற்கு என்ன செலவு? யார் தருவார்? அதை எப்படி உருவாக்குவது? என பல கேள்விகள் இருக்கின்றன.

நான் கம்யூனிஸ்ட் பின்னணியில் இருந்து வந்தவன். என் அப்பா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மேலூர் பகுதியில் அதிகம் வேலை செய்தவர். களப்பணி என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.

மார்க்ஸ், ரவிக்குமார், வேல்சாமி ஆகியோர் நடத்திய நிறப்பிரிகை பத்திரிக்கை, அவர்கள் நடத்திய கூட்டங்கள், மதுரை படிப்பு வட்டத்து நண்பர்களான சுந்தர், பாபு, லோகு, சுபகுணராஜன் ஆகியோரது நட்பு, மதுரையில் நண்பர்கள் நடத்திய கருத்தரங்குகள், திரையிடல்கள், அதில் நிகழ்ந்த விவாதங்கள், யதார்த்த திரைப்பட இயக்கத்தில் நண்பர் ராஜன் திரையிட்ட படங்கள், அங்கு இருந்த அறிவுச்சூழல் ஆகியன என்னை வெகுவாகப் பாதித்தன.

கலை கலைக்கானது மற்றும் கலை ஒரு போர்க்கருவி ஆகிய இரண்டு நிலப்பாடுகளுக்கிடையே ஒரு மையப்பகுதி எனக்கு பிடித்திருந்தது. மதுரையில் கேப்ரியெல் டீட்ரிச் மற்றும் பாஸ் விலங்கா ஆகிய மார்க்சிய சிந்தனையாளர்களுடான நட்பும் அவர்கள் நூலகத்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நான் படித்த புத்தகங்கள் எல்லாமே என்னை செதுக்கியவை.

பின்னாட்களில் நான் மேதா பாட்கர் அவர்களுடன் நர்மதா அணைத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆகவே நான் முதலில் ஒரு களப்பணியாளர். சினிமா எனக்கு ஒரு கருவி.

இந்தப்பின்னணி தான் என் அழகியலைத் தீர்மானித்தது. எதிர் அரசியலுக்கான சினிமா எனது அழகியல்.



8.                   இந்த படத்தின் வடிவத்தை, follow up வடிவத்தை எப்போது தீர்மானித்தீர்கள்?

துப்புரவுப்பணி பற்றி நான் ஒரு ஆவணப்படம் எடுக்க முனைந்த போது ஸ்டாலினைப் போல நானும் ஒரு முழுநீள ஆவணப்படம் தான் எடுக்க நினைத்தேன். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நாட்கள் படம் பிடித்திருப்பேன். 50 கேசட்டுகளுக்கு மேல் சுட்டுத் தள்ளியிருப்பேன். அப்போது தான் இந்தப்படத்தின் கதாநாயகி மாரியம்மாளை சந்தித்தேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் படம் பிடித்தேன். எனக்கு இன்ட்யூசன்படி படம் எடுக்கவே பிடிக்கும். அதுதான் ஆவணப்படத்திற்கு நல்லது என்பது எனது கருத்து. ஆவணப்படம் கொடுக்கும் அனைத்து சாத்தியங்களையும் நீங்கள் பயன்படுத்தவேண்டுமெனில் கடைசி நிமிடம் வரை காத்திருந்து முடிவு எடுப்பது நல்லது. திறந்த மனதோடு, நடக்கிற விஷயங்களை ஒரு தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றின் போக்கில் போய் பதிவு செய்தால் தான் ஆவணப்படம் உயிர் பெறும். அதில் பல வெளிச்சங்கள் நிறைந்திருக்கும். அதில் பல சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். இல்லையென்றால் உங்கள் மொழி தட்டையாகிவிடும். அதில் சுவாசம் இருக்காது. இடைவெளி இருக்காது. உயிர் இருக்காது.

உங்கள் அரசியல், அழகியல் சார்ந்து நீங்கள் களத்தில் எடுக்கும் சில முடிவுகள் தான் ஆவணப்படம். ஆனால் அந்த முடிவுகளை கடைசி நிமிடம் வரை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்து அந்தச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வதே என் ஸ்டைல்.

மாரியம்மாளை முந்திய நாள் காலையில் 8 மணிக்குப் பார்த்தேன். அவர் வேலை செய்யும் விதம் பற்றி கவனித்தேன். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேல் பல கழிப்பறைகளை, பல தொழிலாளர்களை, பல துப்புரவுப் பணியை நான் படம் பிடித்திருந்ததால் அந்த அனுபவம் எனக்குள் பல படிமங்களாக பதிந்தபடியே இருந்தன. அந்த தெருவின் நீளமும் அவரது வேகமும் பேச்சும் எனக்குள் பதிந்தன. அதற்குள் வேலையை முடித்துவிட்டார். வேறோரு தெருவில் வேறொரு தொழிலாளி எங்களுக்காகக் காத்திருந்தார். மறுநாள் காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

மறுநாள் காலையில் 5:30 மணிக்கே போய்விட்டேன். மாரியம்மாள் எனக்கு முன்பே வந்துவிட்டார். விடிந்தும் விடியாமலும் ஒளி நன்றாக இருந்தது. வேலையை தொடங்கிவிட்டார். அவர் பின்னாடியே நான் ஓடினேன். அன்று மாரியம்மாள் பற்றி நான் எடுத்தது வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் மொத்த ஃபுட்டேஜ் 50 மணி நேரம். பல கழிப்பறைகள், பல சந்துகள், பல குப்பை மேடுகள், பல கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பல நிலைகளில் படம் எடுத்திருந்தேன்.

50 மணி நேரம் ஃபுட்டேஜ்ஜைப் போட்டுப் போட்டுப் பார்த்தேன். ஆறுமாத காலம் கழித்து ஒவ்வொரு கேசட்டாக எடுத்து எடிடிங் செய்யத் தொடங்கினேன். அப்போது மாரிம்மாளின் பகுதி மட்டும் தனியாக ஒரு படம் போல இருந்ததை நான் கவனித்தேன். ஒரு எடிட்டராக ஏற்கனவே எடிட் பண்ணப்பட்டது போல இருந்ததையும் உணர்ந்தேன். வேறு எதையும் சேர்க்காது அதை மட்டும் சீர்படுத்திவிட்டு ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் அதுவே தனிப்படமாக இருந்தது. பீ தானாக, சுயம்பாக இப்படித் தான் உருவானது.



9.                   இந்த வடிவம் இப்படத்திற்கு எந்தளவிற்கு உதவியது என்று நினைக்கிறீர்கள்?

இந்தப்படத்திற்கு வடிவம் தான் பலம். ஒரு பெண்மணி. அவரது ஆளுமை தான் இதன் உந்து சக்தி. தெரு நிறைய மலம் இருந்தது எனக்கே மலைப்பாக இருந்தது. அதை அப்படியே கொண்டு வந்தால் போதும். ஏறக்குறைய ஒரு ஓபரா போல என் கண் முன்னே ஒரு துயர நாடகம் நடந்தேறியது. அதில் என்னை மூழ்கடித்தபடி படம் பிடித்தேன்.

பலர் பல கதாபாத்திரங்கள் போல வந்து போனார்கள். பள்ளி மாணவி, சைக்கிளில் வரும் பையன், கறிவேப்பலை வாங்கியபடி மூக்கைப் பொத்தியபடி போன பெண், ஒரு பெரியவர், மலம் கழிக்கும் சிறுவர்கள், புளியமரம், கோயில் சுவர், அதன் சிவப்புக்கோடுகள், அரிசி ஆலையின் சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாமே என்னை உனக்காகத் தான் காத்திருக்கிறோம். எங்களை எடுத்துக்கொண்டு போ என்பது போல ஆரத்தழுவிக்கொண்டனர்/ன. கொடுமை ஒரு புறம். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் அதை அப்படியே பதிவு செய்ய முடியாது. அதன் உக்கிரத்தைக் கொண்டு வரமுடியாது.

மேலும் எந்த இடத்திலும் மாரியம்மாளை தொந்தரவு செய்துவிடவும் கூடாது. சீரியசான கேள்விகள், அரசியல் கேள்விகள், ஆன்மிக தத்துவக்கேள்விகள் இல்லாமல் அதனால் தான் உரையாடல் கூட இரு மனிதர்களுக்கிடையே நிகழும் சாதாரண, இயல்பாக அமைந்தது. மினிமலிஸ்டிக்காக இருப்பது இது போன்ற கனமான கதைக்களனுக்கு முக்கியம். அதிகம் நீங்கள் உங்கள் அறிவுஜீவித்தனத்தைக் காட்டினால் சூழலின் உக்கிரத்தை அதன் வலியோடு பதிவு செய்ய முடியாது.

மேலும் மாரியம்மாளின் வேகம், அவரது துயரம், கோபம், நகைச்சுவை ஆகியனவும், அன்றாடம் வந்து வேலையை ஒரு எந்திரம் போல உணர்வற்று செய்யும் முரண் ஆகியன தான் வடிவத்தைத் தீர்மானித்தன.

மாரியம்மாள் தான் கதாநாயகி. நான் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர் அவ்வளவே! அவரது ஆளுமையை அதிக இடையீடு இல்லாமல் கொண்டு வந்தால் போதுமானது.

10.               படத்தை எடுக்க தீர்மானித்தவுடன் அதற்கு நீங்கள் மேற்கொண்ட களஆய்வினைக் குறித்து சொல்லுங்களேன்..

மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக “துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் வைத்திருக்கின்றனர். அம்பேத்கரிய அரசியலைப் பின்பற்றும் இந்த சங்கம் தான் மதுரையில் அதிக துப்புரவுத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. நிறையப் போராட்டங்கள் நடத்தியபடி இருந்தனர். அவர்களைத் தான் நான் சந்தித்தேன். அவர்கள் தான் எனக்கு கள ஆய்வுக்கு உதவினர். ஏறக்குறைய ஒரு மாதம் பல தொழிலாளர்களுடன் பேட்டி எடுத்தோம். அவர்களிடம் இருந்த புத்தகங்கள், தினசரிகளின் சேகரிப்பு, தலித் ஆதார மையத்தில் வே.அலெக்ஸ், மற்றும் மோகன் லார்பீர் ஆகியோரின் ஆலோசனை ஆகியன எனக்குப் பெரிதும் உதவின.




11.               இப்படத்திற்காக உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

நான் எப்போதும் தனியாகவே வேலை செய்யக்கூடிய ஆள். நானே கேமரா, சவுண்ட், எடிடிங், இயக்கம் எல்லாம் செய்வேன். அதுவே எனக்கு பலம். ஏனெனில் ஆவணப்படம் எடுக்கும் போது உங்களது இருப்பு மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் முடிந்த வரை இருக்கிற விஷயங்களை அதிகம் சேதாரம் இல்லாமல் பதிவு செய்ய முடியும். அதிக நபர்களுடன் போனால் களத்தில் ஆட்கள் மிரண்டு போவார்கள்.

குறிப்பாக இந்தப் படத்தில் ஏகப்பட்ட கழிப்பறைகளுக்குப் போனேன். தொழிலாளர்கள் வேலை செய்வதைப் படம் பிடித்தேன். வேறு ஆட்களுடன் போயிருந்தால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஏனெனில் கழிப்பறைகளுக்குள் நுழைய முடியாது. பாதையெங்கும் மலம் நிறைந்திருக்கும். அதில் ஒரு தொழிலாளி வேலை செய்து கொண்டிருப்பார். அதைப் பார்த்ததும் குமட்டும். தலை சுற்றும். கால்களில், கைகளில் மலம் ஒட்டிக்கொள்ளும். தொண்டைக்குழியில் அதன் மணம் தங்கிவிடும். எச்சிலைத்துப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் தன்னை மறந்து சாமி வந்து இறங்கியது போல அல்லது பைத்தியம் பிடித்தது போல வேலை செய்தால் தான் மலம் அள்ளுவதை படம் பிடிக்க முடியும். எனக்கே அப்படி என்றால் துப்புரவு வேலை செய்கிறவர்கள் நிலை எப்படி என்று யூகித்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிய நிறையத் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் கழிவிரக்கத்திற்கும் உள்ளாகியே இருந்தனர். இந்த அவல நிலையை, துயரத்தை, நாற்றத்தை, வலியை, வியாதியை மறக்கவே பலர் குடிக்கின்றனர். அவர்கள் எல்லாம் கடவுள் மாதிரி. அவர்களின் தியாகத்தில் தான் பிற சாதியினர் குளிர் காய்ந்துகொண்டிருக்கின்றனர். மற்றவரகள் எல்லாம் துப்புரவுப்பணியாளர்களின் காலில் விழுந்து தொழவேண்டும்.

எனது குரல் பேட்ரனைசிங் குரலாக ஒலித்தால் அதை நான் ஒத்துக்கொள்கிறேன். நான் புரட்சிக்காரன் இல்லை. சாதாரண மனிதன். எனக்கு ஏற்பட்ட வேதனையைச் சொல்கிறேன். இங்கிருக்கிற பல புரட்சிக்காரர்கள் கழிப்பறைக்குள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டார்கள்.


12.            90 சதவிகிதம் பேர் தலித்துகள் தான் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால், இதுவும் ஒருவகையான சாதிய வன்முறைதானே?

துப்புரவுப்பணி, கையால் மலம் அள்ளுதல், மனித மலத்தை மனிதனே அள்ளுதல் ஆகிய செயல்கள் கண்டிப்பாக சாதிய வன்முறைதான். 90 சதவீதம் என்பது மதுரை மாநகராட்சியில். மற்ற இடங்களில் 95க்கும் மேல் இருக்கும். மீதம் இருப்பவர்கள் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான். சாதி தான் இங்கு முக்கிய அல்லது ஒரே அளவுகோல். சில வேலைகளை சில சாதிகளுக்கென்றே நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பிற சாதியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த வேலையைச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. பறையர்களும் அருந்ததியினரும் அதிகம் இந்த வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுவும் மலம் அள்ளுவதற்கு அருந்ததியினர் மட்டுமே. 100% இடஒதுக்கீடு அவர்களுக்குத் தான். நிரந்தர வேலை எனும் வலையை விரித்து அருந்ததிய மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போது அதிலும் மண் விழுந்து விட்டது. தனியார்மயமாக்கல் கொண்டு வந்து சம்பளக்குறைப்பு, வேலை அதிகம், நிரந்தரமின்மை, பாதுகாப்பு இன்மை என்று மறுபடியும் அருந்ததிய இன மக்களே இந்த வேலைக்கு வைக்கப்படுகின்றனர். இது சாதிய வன்முறை தான்.




13.            முக்கியமாக அதிக அளவில் தலித்துகள் மட்டும் இத்தொழிலில் ஈடுபட வேறு என்ன காரணம்? வறுமை தவிர்த்து?

கிராமங்களில் நிலம் இல்லாமல், வேறு கதி இல்லாமல், சுயமரியாதை இல்லாமல், நல்ல பெயர் கூட இல்லாமல், விதியே என்று தலித் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. வேறு எந்த வேலையும் கிடையாது என்கிற சாதியக் கட்டுப்பாடு தான் இதற்குக்காரணம். மற்றவரைப் போல கடைகளில் எடுபிடியாகக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மேற்கு மாவட்டங்களில் விவசாயத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். பிறபகுதிகளில் அதுவும் இல்லை.

இந்த வேலையை இவர்கள் தான் செய்யவேண்டும் நிர்பந்திக்கப்படும் சூழல் தான் இதற்குக் காரணம். தலித்துகளை பிற சாதியினர் தமக்கு சமமில்லை என்று கருதும் மனோபாவமும் இதற்குக்காரணம்.

ஐரோப்பாவில் கறுப்பின மக்களும், நாடோடிகளும், அகதிகளும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். இனவெறி மட்டும் இன்றி கதியின்றி வருகின்றான். செய்வான் என்று நினைக்கும் ஆதிக்க வெறியும் தான் காரணம். இந்தப்படத்தில் கூட “சம்பளம் வாங்கிறல்ல..எடு” என்று பிற பெண்கள் சொன்னதாக மாரியம்மாள் சொல்வதைக் காணலாம்.

இப்போது தான் நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாற்றாக கல்வி மற்றும் வேறு வேலைகள் அருந்ததியருக்கு எட்டும் தூரத்தில் வந்திருக்கின்றன. இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். வேறு வகையில் பிழைத்துக்கொள்ளலாம் என்று தைரியம் வரும் போது இந்த வேலைக்குப் போக மாட்டார்கள். இப்போதே இளைஞர்களிடம் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து போராடும் சூழல் கடந்த பத்தாண்டுகளாகத் தான் அருந்ததியருக்கு உருவாகியிருக்கிறது. இப்போது தான் அருந்ததியருக்கு என கட்சிகள், அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. உள் இடஒதுக்கீடு வந்திருக்கிறது. மாற்றங்கள் வரும்.

கிராமங்களில் முன்பு வீடுகளில் எடுப்பு கக்கூஸ் என்று இருந்தது. வீடுகளுக்கு அருகே இருக்கும் குறுக்கு சந்துகள் வழியாக வந்து கூடையில் மலத்தை அள்ளிக்கொண்டு போனார்கள். இப்போது எடுப்பு கக்கூஸ் இல்லை. ஆனால் வீடுகளுக்கு கீழே தொட்டி கட்டி மலத்தை சேமிக்கின்றனர். அதில் அடைப்பு வந்தால் இதே தொழிலாளி தான் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும். இவனும் அழைக்கிறான். அவனும் வருகிறான். இருவரின் மூளைகளிலும் சாதியக் கோட்பாடு ஆழப் பதிந்து இருவரையும் வழிநடத்துகிறது.

இன்றும் பிற சாதியினரின் வீடுகளில் குழந்தையின் மலத்தை பெண்கள் தான் சுத்தம் செய்கின்றனர். ஆண்கள் செய்வதில்லை. இதுவும் ஒரு வகையான பாகுபாடு தான்.

தொடரும்…

Thursday, February 7, 2013

கடல் அவ்வளவு மோசமான படமா?

மணிரத்னத்திற்கு கிடைக்கும் மட்டை அடி


மணிரத்னம் இயக்கிய மெளனராகம், அலை பாயுதே, அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களை நான் ரசித்துப் பார்த்ததுண்டு. உயர் சாதி அடையாளங்கள் அவற்றில் துருத்திக்கொண்டிருந்தாலும். 

அரசியல் காரணங்களுக்காகவும் சினிமா ரீதியாகவும் அவரது மும்பை, ரோஜா, தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு, ராவணனன் ஆகிய படங்களை என்னால் ஏற்க முடியவில்லை.

இருவர் சினிமா மொழியில் நல்ல படைப்பு என்று சொல்வேன். திராவிட கட்சிகளை அவர் அந்தப் படத்தில் கொச்சைப் படுத்தியிருந்தார் என்பதையும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அந்தக்கட்சிகள் நமக்கு ஒட்டுமொத்தமாக கொடுத்திருக்கும் இழைத்திருக்கும் தீங்கை நினைக்கும் போது நாம் இன்னும் திராவிடக் கட்சிகளைப் பற்றி நிறையப் படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

யுவா எனும் படத்தை வடஇந்தியாவில் பலர் சிலாகித்துப் பேசியதுண்டு. ஆனால் பாரதிராஜா அதில் நடித்தது மிகுந்த அதிர்ச்சி யைக் கொடுத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அந்தப் படத்தில் பாரதிராஜா நடித்ததைப் பற்றி வருத்தப்பட்டார் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் சமீபத்தில் மணிரத்னம் இயக்கி வெளியிட்டுள்ள "கடல்" எனும் திரைப்படம் இங்கு பலர் மட்டையடி அடிப்பது போல மொக்கை அல்ல.




தமிழில் முழுநீள கிறிஸ்தவப்படம் இதுவரை வந்திருப்பதாக எனக்கு நினைவில்லை. ஒரு கணக்கிற்கு சில கதாபாத்திரங்கள் கிறிஸ்தவர்களாக தமிழ் சினிமாவில் வருவதுண்டு. இந்தப்படத்தின் கதைக்களமே ஒரு கத்தொலிக்க கிராமம் தான். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டமும் அதை கத்தோலிக்க மக்கள் முன்னின்று நடத்துவதும் இயக்குநரை இப்படி ஒரு படம் எடுக்க வைத்ததா என்பதை நாம் அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல அவர் இந்தப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறார் என்பது கவனத்திற்குரியது. சொல்லப்போனால் நிறையப்படங்கள் மீனவ மக்களைப் பற்றி வருவதும் கூடன்குளம் போராட்டம் தான் காரணமா என்றும் தெரியவில்லை.

நன்மை தீமைக்கு இடையே போட்டி. இறுதியில் நன்மை தனது உறுதியால் வென்றது என்பதே கடல் படத்தின் கரு என்று சொல்லலாம்.

ஒரு கத்தோலிக்க மீனவ கிராமம். அதில் ஒரு நல்ல பங்கு சாமியார். வன்முறையும் துரோகமும் நிறைந்த கிராமத்தினர். ஒரு பாலியல் தொழிலாளி. அவளது மகன். ஒரு பணக்கார தீயவன். அவளது மகள். இவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் தான் இந்தக்கதை. அது திரைக்கதையாக நன்றாக வந்திருக்கிறதா என்றால் குழப்பமாகத் தான் இருக்கிறது. யாரைப் பின்பற்றி பார்வையாளன் போக வேண்டும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு பெரிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்து தடுமாறியிருப்பது போல தோன்றுகிறது.




கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கல்லூரியிலும் படித்தவன் என்ற முறையிலும் கத்தோலிக்க பாதிரியார்கள், செவிலியர்களைத் தனிப்பட்ட முறையில் பரிச்சயம் என்ற முறையிலும் கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் (செமினரி) இருந்து படம் தொடங்குவதை நான் வரவேற்கிறேன். ஆச்சர்யமாகவும் பார்த்தேன்.

வசதியான குடும்பத்தில் பிறந்து ஆன்மீக சேவை செய்ய பாதிரியாராக வந்திருக்கும் அரவிந்த்சாமி, ஏழை குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக வந்திருக்கும் அரஜூன் ஆகியோரின் மோதல், ஒருவர் ஏசுவின் பில்ளையாக, இன்னொருவர் சாத்தானின் பிள்ளையாக முன்னிருத்தப்படுவதும் தான் கதையின் முடிச்சு. பிழைப்புக்காக சாமியாராகும் நபர் சாத்தானாக ஏன் சித்தரிக்கப்படுகிறார் என்பது ஒரு கேள்வி. சோற்றுக்கு வழியில்லாமல் அரசு வேலைக்கு வருபவர்கள் நேர்மையாக இருக்க முடியாதா? இரண்டே பாத்திரங்கள். அதில் ஒரு நல்லவன். ஒரு கெட்டவன். நல்லவன் பணக்காரன். கெட்டவன் ஏழை என்று தொடங்குகிறது படம். அது எனக்கு நெருடலாக இருந்தது.

ஏழை அர்ஜூன், பாதிரிக்குப் படிக்கும் அர்ஜூன் அங்கு வேலை செய்யும் ஒரு கறுப்பான, அழுக்கான ஒரு பணிப்பெண்ணை ஒரு இரவில் ஒரு கொட்டகைக்குள் வைத்து சல்லாபம் செய்கிறார். அதை அர்விந்த்சாமி தட்டிக்கேட்கிறார். நல்ல வேளை அந்தக கறுத்த பெண்ணை உதைக்காமல் விட்டாரே என்று பெருமூச்சு விட்டேன். அர்ஜூன் குரு இல்லத்தின் தலைவரிடம் மன்னிப்பு கேட்க மறுக்கிறார். செமினரி விட்டு வெளியேறுகிறார். இனிதான் இருக்கு என்று எச்சரித்து விட்டும் போகிறார் அரவிந்த்சாமியிடம்.

செமினரி பற்றி காண்பித்தது எனக்கு பிடித்திருந்தாலும் இன்னும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.

பாமா போன்றவர்கள் திருச்சபைக்குள் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றி எழுதியிருந்தாலும் அதை ஒரு கிறிஸ்தவர் செய்வதும் ஒரு வெளியாள் செய்வதும் ஒன்று இல்லை என்பதும் எனக்குத் தோன்றியது.

லூயி புனுவலின் ஒரு படத்தின் உல்டா என்றெல்லாம் பலர் சொல்கின்றனர். லூயி புனுவல் ஒரு ஸ்பானிஷ் கத்தோலிக்க கிறிஸ்தவர். தனது மதம் பற்றி விமர்சனம் செய்யலாம். பிறர் செய்வது நியாயமா என்றும் தோன்றுகிறது. 




ஒரு கத்தோலிக்க மீனவ கிராமம். அக்கிராம மக்களுக்கு ஏற்படும் ஆன்மிக நெருக்கடி பற்றி படம் பேசுகிறது. ஒரு கிராமத்திற்கு வெளியில் இருந்து நெருக்கடி வரும். கூடன்குளம் அணு உலை வந்தது போல. வி.வி.மினரல்ஸ் கடறகரை மணலை அள்ளி விற்பது போல. பெரிய படகுகள் கட்டுமரங்களின் மீன்பாட்டைக் காலி செய்வது போல. ட்ராலர்கள் பெரிய படகுகளின் பிழைப்பை அழிப்பது போல. இப்படி புற நெருக்கடி வரலாம்.

இந்த கிராமத்தில் அக நெருக்கடி. அதுவும் ஆன்மீக நெருக்கடி. கத்தோலிக்க கிராமம். ஆனால் பங்குத் தந்தை இல்லை. ஆலயம் சீரழிந்து போய் இருக்கிறது. மக்கள் பணத்திற்கு அடித்துக்கொள்கின்றனர். ஏன் என்று விளக்கப்படவில்லை. மீனவர்களே அப்படித்தானா? இல்லை இந்த கிராமத்து மக்கள் அப்படியா? தெரியவில்லை. ஆனால் அந்த கிராமத்து மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாய் கட்டற்று திரிகின்றனர். மீன் பாடும் நன்றாகவே நடக்கிறது. ஆனால் அறம் இல்லை. அன்பு இல்லை. வன்மமும் ஏச்சும் பேச்சும் ஏளனமும், குரூரமும் வார்த்தைகளாய் செயல்களாய் தெரிக்கின்றன.




அசாதாரணமான கதாபாத்திரங்கள். ஒரு பாலியல் தொழிலாளி. அவர் பிணமாகவே அறிமுகமாகிறார். அவரது சிறிய மகன். அனாதையாகிறான். கடும் வன்முறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகின்றான். பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளர் (சிறுவன் அவரை அவனது தந்தை என்று தன் தாய் சொன்னதை நம்புகிறான்) பிணத்தை அடக்கம் செய்கிறார். எந்த சடங்குகளும் இன்றி. சந்தையின் நடுவே அவளது பிணம் கொண்டு போகப்படும் போது யாரும் அதை பொருட்படுத்தவில்லை. தூற்றுகின்றனர். ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்யும் போது அவளது கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க, அதை வெட்டி, உடைத்து உள்ளே வைக்கின்றனர். அத்தனை வன்மம். சிறியவன் துடிக்கிறான்.

அந்த ஊருக்குத் தான் நல்லவர் அரவிந்த்சாமி பங்கு சாமியாராய் வருகிறார். அவரை கோயில் உதவியாளர் தவிர யாரும் மதிக்கமறுக்கின்றனர். நீ தேவையில்லை என்கின்றனர். அவர் சிதைந்த நிலையில் இருக்கும் கோவிலைச் சுத்தம் செய்யும் போது யாரும் உதவிக்கு வரவில்லை. பூசைக்கும் யாரும் வர மறுக்கின்றனர். மீன் சந்தைக்கே கடற்கரைக்கே வந்து சாமியார் அவர்களை அழைக்கின்றார். யாரும் எளிதில் வந்த பாடில்லை.

அனாதையாக திரியும் பாலியல் தொழிலாளியின் மகனை ஆதரிக்கிறார் சாமியார். அவனை தனது மனச்சாட்சியாக வளர்த்தெடுக்கிறார். பிழைப்புக்கு வழி வகுக்கிறார். அவனே நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம். மிகவும் அற்புதமான அறிமுகம். அவர் எதைச்செய்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. மீனவனாக அவரை நம்பவும் முடிகிறது. பல சமயங்களில் பலர் நம்பும் படி இருப்பதில்லை.




கதையில் புதிய திருப்பமாக அந்த ஊருக்கு அர்ஜூன் வருகிறார். இப்போது அவர் குண்ட்டிபட்டு கிடக்கிறார் கடற்கரை ஓரம். அவர் கடத்தல் தொழில் செய்யும் பெரிய முதலாளி. தொழில் போட்டியில் யாரோ அவரை விரட்டிச் சுடுகின்றனர். அவரைக் காப்பாற்றுகிறார் அரவிந்த்சாமி. ஆனால் ரசகியமாய்.

தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை (அவளும் ஒரு பாலியல் தொழிலாளி) உதவிக்கு கொண்டுவந்தால் தான் பிழைத்துக்கொள்வேன் என்று அர்ஜூன் சொன்னதும் அவளையும் அழைத்து வருகிறார் அரவிந்த்சாமி. தன்னுடன் அரவிந்தசாமி உடலுறவு வைத்துக்கொண்டார் என்று ஊர் மக்கள் முன் அவள் பொய்சாட்சி சொல்லி அரவிந்தசாமியை மாட்டிவிடுகிறார். அதில் நடக்கும் ஒரு தள்ளு முள்ளுவில் ஒரு இறக்க அரவிந்தசாமி மீது கொலை பட்டம் விழுகிறது. அர்ஜூன் படம் ஆரம்பிக்கும் போது விட்ட சவால் நிறைவேறுகிறது.

இந்த சம்பவங்களில் கிராமமக்கள் செம்மறி ஆடு போல, யேசு நாதரை துன்புறுத்தியது போல நல்லவராகியா அரவிந்த்சாமியை அடித்துத் துவைக்கின்றனர். ரத்தக் காயங்களுடன் தான் கைதாகிறார்.

அந்தகிராமத்தில் சாமியாருக்கு ஆதரவாய் - அதாவது அறம், அன்பு, நேர்மை இவற்றுக்கு ஆதரவாய் உதவியாளர், கெளதம், ஒரு பெண் தவிர யாரும் இல்லை. எல்லோரும் தூற்றுகின்றனர். ஊரே சேர்ந்து அரவிந்த் சாமியை சந்தேகிக்கிறது. யாரும் ஆதரவாக இல்லை. காவல்துறை தான் வந்து அவரைக் காப்பாற்றுகிறது. இடைவேளை வருகிறது.

இது ஒரு மிகை நாடகம் போலவே நடக்கிறது. இந்தப் படமே ஒரு மிகை உணர்ச்சி ததும்பிய இசை நாடகம் போலவே காட்சியளிக்கிறது. பல ஐரோப்பிய சினிமாக்களின் காட்சிகள் கண் முன்னே வந்து போயின. நன்மைக்கும் தீமைக்கும் நிகழும் போட்டியில் நன்மை தோற்கிறது நடுவில். ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான் எனும் ரஜினி வசனம் நினைவுக்கு வந்தது. ஆனால் வலிய புகுத்தப்பட்ட இனவரைவியல் கிறிஸ்தவ பின்னணி சந்தேகம் ஊட்டியபடி இருந்தது.

மணிரத்னமும் ஜெயமோகனும் இப்படி ஒரு மிகை நாடகத்தை ஒரு இந்து கோவிலின் பின்னணியில் செய்திருந்தால் எத்தனை அழுத்தமாய் இருந்திருக்கும். எத்தனை நம்பகத்தன்மை இருந்திருக்கும். இப்படி ஒரு நன்மை தீமை எனும் போராட்டம் இந்து பின்னணியில் சாத்தியமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இந்து அவதாரம் எல்லாம் எளியவர்களை அழிப்பதாகவே இருப்பதால் கிறிஸ்தவ பின்னணி தான் சரியோ என்னவோ.


கிறிஸ்தவர்கள் பற்றியும் மீனவர்கள் பற்றியும் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது திரையெங்கும். இறுதியில் நன்மை வென்றதாக இயேசு பாட்டு போட்டாலும் உழைக்கும் மக்கள் பற்றி இப்படி குரோதமாகப் படம் எடுத்திருப்பது அதிர்ச்சியாகவே உள்ளது. ஒரு வேளை உயர் சாதி இந்து கண்களுக்கு மீனவர்கள் மூளையற்ற, அறமற்ற, துரோகம் நிறைந்த, பொய்யும் புரட்டும் நிறைந்த கூட்டமாகத் தெரிகிறதோ என்னவோ!

மறுபடியும் ஒரு சமூக அரசியல் படம் எடுத்து மறுபடியும் தனது போதாமையை வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.

Sunday, February 3, 2013

விஸ்வரூபம் தொடர்பாக...

கமலஹாசனின் விஸ்வரூபம் தொடர்பான எனது கருத்துக்களுக்கு பல நண்பர்கள் வருத்தமும் சிலர் எச்சரிக்கையும் விடுத்திருப்பதை ஒட்டி:
1) நான் எந்த படைப்பையும் அரசோ அல்லது ஒரு இயக்கமோ தடை செய்வதை ஆதரிக்கவில்லை. தணிக்கை முறைக்கே எதிரானவன் நான். எனது படங்களுக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வாங்கவில்லை. படைப்புகள் சுதந்தரமாக வெளிவரவேண்டும். படைப்புகளை முடக்குவது சமூகத்தில் விமர்சனங்களை முடக்குவதற்கு சமம். விமர்சனங்களும் மாற்றுக்கருத்தும் ஜனநாயகத்திற்கு அடிப்படை. எனவே படைப்புகள் தடையின்றி வெளிவரவேண்டும்.

2) அதே நேரத்தில் படைப்புகள் பற்றி சமூகத்தில் விவாதங்கள் நடக்க வேண்டும். திரைப்படவிழாக்களும் திரையிடல்களும் அவற்றில் நடக்கும் விவாதங்களும் இதில்அடங்கும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களும், விமர்சனக்கூட்டங்களும், கட்டுரைகளும், பயிலரங்குகளும் மிகவும் அவசியம். தமிழ் சினிமா போன்ற வெகுசன ஊடகம் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவை வெறும் பொழுது போக்குக்கூடங்கள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புகள்.

3) ஒரு கலைவடிவம் அது எதற்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் சரி நமது பார்வையை, புரிதலை விரிவு படுத்துகிறதா இல்லை நம்மை சுருக்குகிறதா என்பது மிகவும் முக்கியமான கேள்வி. ஒரு படைப்பு பிறர் மீதான துவேசத்தைப் பரப்பினால், வெறுப்பை விதைத்தால், உண்மையை மறைத்தால், பொய்ப் பிரச்சாரம் செய்தால் சிவில் சமூகத்தினர் அதை விமர்சனம் செய்வது தான் சரி. அதை நான் செய்வேன்.

4) இந்த அனுபவம் நம்மை இன்னும் நல்ல மனிதர்களாக்கும் என்று நம்புகிறேன்.


நான் சொன்ன கருத்துக்கள்:
மதுரையில் மாட்டுத்தலையை இந்து முன்னணி அலுவலகத்தில் யாரோ போட்டுவிட்டனர் என்று சொல்லி மதுரை மெகபூப்பாளையும் மற்றும் ஹாஜிமார் தெருவில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் இழுத்துக்கொண்டு போய் ரவுண்டு கட்டி அடித்தார்களே அதை எந்த "நாயகனும்" படமாக எடுக்க மாட்டார்களா?

பார்ப்பனர்களை அல்லது இந்திய அரசை அல்லது இந்திய ராணுவத்தை அல்லது அம்பானி மாதிரியான முதலாளியை விமர்சனம் செய்து பார்ப்பனர் அல்லாத ஒருவர் படம் எடுத்திருந்து அதை மாநில அரசோ மத்திய அரசோ தடை செய்திருந்தால் இப்போது கமல்ஹாசனுக்காக கொதிப்பவர்களும் துடிப்பார்களா?
வடிவேலு எனும் மகாகலைஞனை எல்லோரும் ஓரம் கட்டினீர்களே! அப்போது எங்கே போனது உங்களது கருத்துரிமை? "சிவப்பா இருக்கிறவன் சொன்னா அது உண்மையாயிருமா?" "உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?" (இதெல்லாம் வைகைபுயலின் தத்துவங்கள்)
"தேவர்மகன்" தென்தமிழ்நாட்டில் தலித் மக்களின் மீதான வன்முறைக்கு ஒரு கோஷமானது போல (போற்றிப்பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!) இந்தப்படமும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணிதிரட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறதா?

கமல்ஹாசனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒத்துக்கொள்கிறோம். தமிழக அரசு ஒரு அராஜக ஆட்சி நடத்துகிறது. ஒத்துக்கொள்கிறோம். இதைக் கண்டிக்கிறோம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது தான்.

ஆனால் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, ஏழைகளை, குடிசைவாழ் மனிதர்களை, தலித்துகளை, பெண்களை, திருநங்கைகளை, பாலியல் சிறுபான்மையினரை, விவசாயிகளை, உழைப்பாளர்களை, தமிழர்களை, கறுப்பானவர்களை, குண்டானவர்களை, குட்டையானவர்களை, மாற்றுத் திறனாளிகளை கீழான நிலையில் சித்தரிப்பதைப் பற்றி கமல்ஹாசனுக்காக, கருத்துரிமைக்காக கண்ணீர் விடுவோர் விவாதிக்கத் தயாரா?

உதாரணமாக "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் கதாநாயகனின் பெயர் "ராகவன்" என்கிற பார்ப்பனப் பெயராக இருந்ததும் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களுக்கு தூய தமிழ் பெயர் இருந்ததும் அவர்கள் ஓரினச்சேர்க்கை புரிபவர்களாகக் காண்பிக்கப்பட்டதும் எதேச்சையாக நடந்ததா? கெளதம் மேனன் எனும் மலையாளிக்கும் கமல்ஹாசன் எனும் தமிழனுக்கும் இது தெரியாமல் நடந்ததா? இது தான் உலக நாயகனின் உலக சினிமாவா?

இப்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களை (ஆடியன்ஸ்) அவமானப்படுத்திவிட்டு எமது மக்களின் காசில் நீங்கள் சொகுசாய் வாழ நினைப்பது என்ன நியாயம்? இதை கலைச்சேவை என்றாலும் வியாபாரம் என்றாலும் கண்டிக்க வேண்டாமா? எருமை மாட்டில் மழை பெய்வது போல என்ன செய்தாலும் தலை அசைத்து கொடி பிடிக்கலாமா?

குறிப்பாக கமல்ஹாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்காக உயிரைக்கொடுப்பதாக முழக்கமிடுபவர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?

சினிமா ஒரு பொழுது போக்கு ஊடகம் தானே என்று எத்தனை நாள் நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கப்போகிறோம்?

அசிங்கமான சினிமாவால் அதன் ரசிகர்களுக்குத்தானே கேவலம்?

இறுதியாக:

எந்தப்படைப்பும் தடை செய்யப்படக்கூடாது. அதனால் அய்யா படம் வெளியே வரவேண்டும். அவர் டவுசர் கிழிய வேண்டும் என்று தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மிகச்சிறந்த கலைஞன் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்! தரகு வேலை பார்த்தால் அதற்குப் பெயர் வேறு!

எனக்குப் பிடித்த படம் கரகாட்டக்காரன் தான். அந்தப்படத்தில் இவ்வளவு பித்தலாட்டமும் மோசடியும் துரோகமும் இல்லை!

விஜய்காந்துக்கும் அர்ஜூனுக்கும் விஜய்தம்பிக்கும் கோயில் கட்டலாம் என்று தோன்றுகிறது!

Sunday, November 25, 2012

கோலார் பகுதியில் தேசவிரோதிகள்

தேசவிரோதச் செயல்கள் தொடருகின்றன!


கோலார் பகுதி மக்கள் கூடன்குளம் அணு உலையிலிருந்து அணுக்கழிவுகளை கோலார் தங்கச்சுரங்கத்தில் கொட்டக்கூடாது என்று போராடுவதை நினைத்து தேச பக்தனாகிய எனக்கு மனம் பதறுகிறது. தூங்க முடியவில்லை. உணவு அருந்த முடியவில்லை. மலம் கழிக்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டிய வண்ணம் இருக்கிறது. வாய் வேறு கோணிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை!

இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்த மக்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகின்றனர்? இவர்களுக்கு தேசபற்றே இல்லையா?

இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு சதியைக் கண்டறிய வேண்டும். அதை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று புலன் விசாரணை செய்யவேண்டும். போராடிய மக்கள் மீது தலா 10 வழக்குகள் போட வேண்டும். குறிப்பாக தேசவிரோத வழக்குகள் போடவேண்டும்.

அந்தப் போராட்டத்திற்கு மைக் செட் கொடுத்தவனுக்கு, போஸ்டர் அடித்தவனுக்கு, அதை ஒட்டியவனுக்கு, அதை எட்டி நின்று எட்டிப் பார்த்தவனுக்கு, அங்கு இருந்தவர்களுக்கு தண்ணீர், தேநீர், சிகரெட், புகையிலை, பான் சப்ளை செய்தவனுக்கு, அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை பணம் கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தவனுக்கு (காசு வாங்காமல் இந்தக்காலத்தில் போராட்டத்திற்கு யார் வருவார்கள்?) அந்த ஊர்வலத்தில் போடப்பட்ட கோஷங்களைக் கேட்டவர்களுக்கு, இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு, எதையோ நினைத்து அங்கு தலையாட்டியவர்களுக்கு, சிரித்தவர்களுக்கு, கொட்டாவி விட்டவர்களுக்கு எல்லார் மீதும் தேச விரோத வழக்குகள் போடவேண்டும்.

இதைப் பற்றி முகநூலில் எழுதுகிற, அதை "லைக்'குகிற ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பூனைகள், நாய்கள், எலிகள், பாம்புகள், யானைகள், அந்தக்கம்ப்யூட்டர்கள் எல்லாவற்றையும் இந்த நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும்!


பவர் (?) வேண்டுமெனில் நாட்டுக்காக வீடு, வாசல், தோப்பு, துரவு, மானம், மரியாதை, பிள்ளை, குட்டி, மனைவி, மக்கள், கோயில் குளம், ஆடு, மாடு, துணி, மணி, மீதமிருந்தால் உயிர் எல்லாவற்றையும் தியாகம் பண்ண வேண்டாமா? அப்படி செய்ய மாட்டோம் என்று போராடும் கோலார் பகுதி மக்கள் தேச விரோதிகள் தானே? அவர்கள் மீது தேச துரோக வழக்குகள் தான் போடவேண்டும்.

நாம் அதைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை. அதற்காகத் தானே ஐஏஎஸ் அய்யாக்களும் ஐபிஎஸ் மாமா(?)க்களும் இருக்கிறார்கள். மக்களை எப்படி "கவர்ன்" பண்ண வேண்டும் என்று அவர்கள் நவீன யோசனைகளை - புராண கால சாம,பேத, தண்டங்கள் உட்பட -அரசுக்குக் கொடுப்பார்கள்.

தேச பக்தர்களாகிய நாம் பதட்டமடைய வேண்டியதில்லை.

ஜெய் ஹிந்த்!

Sunday, November 11, 2012

கிறிஸ் மார்க்கரின் கட்டுரை சினிமா!


“வெகு தொலைவு நாட்டிலிருந்து
நான் உங்களுக்கு எழுதுகிறேன்” -– கிறிஸ் மார்க்கர்
அமுதன் ஆர்.பி.

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கிறிஸ் மார்க்கரைப் பற்றி நான் கட்டுரை எழுதுவதற்கான வேலைகளைத் தொடங்கி சில நாட்களில் – 2012, ஜீலை 30ம் நாள் - அவர் இறந்து விட்டார். அவருக்கு அப்போது வயது 91.

கிறிஸ் மார்க்கர் ஒரு இடதுசாரி. ஆனால் கட்சிகளைக் கடந்தவர். சோவியத் யூனியனில் நடந்த ‘சினிமா ரயில்’ என்ற முயற்சிகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அலெக்சாண்டர் மெட்வட்கின் என்ற இயக்குநரைப் பற்றி இரண்டு ஆவணப்படங்கள் எடுத்தார். அகிரா குரோசாவா பற்றியும் அன்ட்ரே தார்கோவ்ஸ்கி பற்றியும் ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். இவற்றையெல்லாம் விட கிறிஸ் மார்க்கர் ஒரு பரிசோதனை ஆவணப்பட இயக்குநர். ஆனால் அவரை அப்படி மட்டும் சுருக்கிவிட முடியாது. பல் ஊடகக் கலைஞர் (multi media artist). எழுத்தாளர். பத்திரிக்கையாளர், கட்டுரையாளர். புகைப்படக்கலைஞர். ஆவணப்பட இயக்குநர். குறும்பட இயக்குநர். ஊடக ஆர்வலர். ஊடகக் களப்பணியாளர். ஊடகப்போராளி. 50க்கும் மேற்பட்ட சிறு, குறு, நெடும் ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார். 90களில் சிடிரோம் (CD-Rom)களை வைத்து நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார். இரண்டாயிரத்திற்கு பிறகு வீடியோ இன்ஸ்டலேசன் என்கிற புதிய ஊடக வடிவத்தின் மூலம் தனது ஆவணப்படங்களின் சாத்தியங்களை விஸ்தரித்தார்.

கிறிஸ் மார்க்கரைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? ஆவணப்பட வரலாற்றில் புதிய பரிசோதனை முயற்சிகளை எல்லோருக்கும் முன்பே எடுத்திருக்கிறார். அவரது  சினிமாக்கட்டுரை அல்லது ESSAY FILM என்ற வடிவம் ஆவணப்பட ஏன் சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சினிமாக்கட்டுரை என்றால் சினிமாவைப் பற்றிய கட்டுரை அல்ல. சினிமாக்கவிதை போல சினிமாக்கட்டுரை. சினிமாவில் கட்டுரை எழுதுவது. ஆவணப்படம் மற்றும் இயக்குநரின் தனிப்பட்ட மனப்பதிவுகள் ஆகிய இரண்டையும் இணைத்த ஒரு வடிவம் இது. ஒரு ஆவணப்படத்தின் சப்தம், காட்சிகள், எழுத்துக்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி கவித்துவமாக, அரசியல் விவாதமாக, தத்துவார்த்த விசாரணையாக இயக்குநர் பார்வையாளரோடு உரையாடுவது இந்த வடிவத்தின் ஒரு முக்கிய அம்சம். இவ்வகை பின்னாட்களில் பிரபலமான சினிமாக்காரர்களான கொதார்ட், ஆர்சன் வெல்ஸ், ஃபெட்ரிக்கோ ஃபெலினி, பசோலினி, ஹெர்ஜாக், அப்பாஸ் கைரஸ்டமி ஆகியோரால் செழுமைப்படுத்தப்பட்டது. சினிமாப்பார்வையில் ஒரு சார்புத்தன்மை குறிப்பாக இயக்குநரின் சார்புத்தன்மை கொண்ட கதை சொல்லும் முறையை இந்த வடிவம் கையாழுகிறது. இப்போது இது வெகுவாக கடைபிடிக்கப்படுகிற ஒரு வடிவமாகவும் விளங்குகிறது.
ரேனேயுடன் மார்கர் (இடது)

ஆரம்பகால புனுவல், ரேனே, ஜார்ஜ் மிலீஸ் ஆகியோர் மார்க்கருக்கு முன்பே இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் இந்த வகைப்படத்தை தொடர்ந்து எடுத்து அதை தனக்கென்ற ஒரு தனி வடிவமாக்கிக் கொண்டார் கிறிஸ் மார்க்கர். மைக்கேல் மூர் என்கிற அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் இந்த வடிவத்துடன் அரசியல் பிரச்சனைகள் பற்றி புலன்விசாரணை படங்கள் எடுத்து பிரபலமானவர். இந்தியாவில் அமர் கன்வர் எனும் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் இந்த வடிவத்தில் மிக அற்புதமான காவியங்களைப் படைத்திருக்கிறார்.

அதே போல கிறிஸ் மார்க்கர் ஊடகக்களப்பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார். அரசியல் சினிமாவுக்கான ஸ்லான் (SLON) என்ற சினிமாக்குழுவை, சினிமா கூட்டுறவுக் களங்களை அமைத்தது, அதன் மூலம் அரசியல் சினிமாக்களைத் தயாரித்தது, அமெரிக்காவின் வியட்நாம் உடனான போரை எதிர்த்து படங்கள் எடுத்தது, போராட்டங்களில் ஈடுபட்டது, தன்னை அதிகம் முன்னிறுத்தாமல் வேலைகள் செய்வது போன்ற சிறப்பான வரலாறு கொண்டவர் கிறிஸ் மார்க்கர்.

கிறிஸ் மார்க்கர் என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர் அல்ல. கிறிஸ்டியன் ஃப்ரான்சுவா பூஷ் விலுனுவ் என்பதே அவரது பெற்றோர் வைத்த பெயர். தான் ஒரு ஊர் சுற்றி என்றும் எல்லோருக்கும் எளிதாக புரிகிற பெயராக இருக்க வேண்டும் என்றும் மார்க்கர் பேனா பிரபலமானதால் அந்தப் பெயரை தனக்கு சூட்டிக் கொண்டதாகவும் ஒரு பேட்டியில் கூறினார் கிறிஸ் மார்க்கர். அதிகம் பேட்டி கொடுக்க மாட்டார். அவரது புகைப்படங்கள் அதிகம் கிடையாது. அவர் எங்கு பிறந்தார்? என்ன படித்தார் எங்கு வளர்ந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. பல கதைகள் உலாவுகின்றன. ஒரு முறை ஒரு பத்திரிக்கையில் அவரது புகைப்படத்தைக் கேட்ட போது அவர் ஒரு பூனையின் படத்தை அனுப்பிவைத்தார். தன் படங்களும் தனது வேலைகளும் போதும் தன் புகைப்படம் யாருக்கும் அவசியம் இல்லை என்பார்.
லா ஜெத்தெ

ஒரு புகைப்படக் கலைஞராக, எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக தனது படைப்பு வாழ்க்கையை 1940களில் தொடங்கிய மார்க்கர், 1949ல் தனது “லெ கூர் நெட்” என்கிற வான்வழிப்பயணம் பற்றிய தனது முதல் நாவலை எழுதினார். பிரெஞ்சு புதிய அலையைச் சேர்ந்தவர்களான் ரேனே, வார்தா, கால்பி, காட்டி ஆகியோருடன் பழகத்தொடங்கினார். அதுவே இடதுகரை சினிமாகாரர்கள் – Left Bank Movement -எனும் சினிமா இயக்கத்திற்கு வித்திட்டது.  ஃப்ரெஞ்சு புதிய அலை சினிமா இயக்கத்திற்கு வெளியேயும் சில சமயம் அவர்களுடன் இணைந்தும் இடது கரை சினிமா இயக்கத்தினர் வேலை செய்தனர். தீவிர இடது சாரிகளான இடதுகரை சினிமா இயக்கத்தினர் ஒரு பரதேசி வாழ்க்கை வாழ்ந்தனர். இலக்கியம், கலை இவற்றில் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். ஃப்ரெஞ்சு புதிய அலை இயக்குநர்களான (வலது கரை இயக்கத்தினர்) கொதார்டும் ட்ரூஃபோவும் சோப்ராலும் ரோமரும் அரசுடன் அமைப்புடன் சமரசம் செய்து கொண்டதாக இடதுகரை இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார வசதியும் வாய்ப்புகளும் தங்களுக்கு தர்மசங்கடத்தைக் கொடுப்பதாகக்கூறினர். அறுபதுகளில் இவ்விரு இயக்கத்தினரிடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. இத்தகைய அரசியல் பின்னணி கொண்டவர் கிறிஸ் மார்க்கர்.
சினிமாக் கட்டுரை சினிமாக்கள்:

1952ல் கிறிஸ் மார்க்கர் ஒலிம்பியா 52 என்கிற ஹெல்சின்கி 1952 ஒலிம்பிக் பந்தயம் பற்றி தனது முதல் ஆவணப்படத்தை எடுத்தார். 1953ல் ரெனேயுடன் இணைந்து சிலைகளும் சாகும் – Statues Also Die – என்றொரு படம் எடுத்தார். அதில் தான் கிறிச் மார்க்கரின் புகழ்பெற்ற வர்ணனை உத்தி முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்தினால் ஆப்ரிக்க கலைகள் அழிந்து போவதைப்பற்றி எடுக்கப்பட்ட படத்தை பிரெஞ்சு அரசு தடை செய்தது. 1955ம் ஆண்டு ரெனேயின் NIGHT AND FOG என்கிற புகழ்பெற்ற படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு தனது Sunday in Peking என்கிற குறும் ஆவணப்படத்தை எடுத்தார். அதுவே அவரது சினிமாக் கட்டுரை தொடக்கமாகும். காட்சிகளை இயக்குநரின் வர்ணனைக்குரல் வர்ணித்தபடி, வியாக்கியானம் செய்தபடி, ஓங்கி ஒலித்தபடி இருக்கிற சினிமா. காட்சிகளை விட வர்ணனையாளரின் குரல், அதை ஒட்டிய காட்சிகள், காட்சிகளுக்காக வர்ணனை என்பது போல் அல்லாமல் வர்ணனைக்காக காட்சிகள் என்பதாய் அரசியல் விமர்சனத்துடன் அமைந்தது அந்தப்படம். செப்டம்பர் 1955ல் சீனாவில் இரண்டு வாரங்கள் சக இடதுகரைக்காரர் அர்மாண்ட் காட்டியுடன் பயணித்தபடி எடுக்கப்பட்ட ஆவணப்படம் அது. சீனாவைப்பற்றிய ஐரோப்பியர்களிடம் இருக்கிற கட்டுக்கதைகளை விமர்சிக்கிற படம் அது.
1957ல் LETTER FROM SIBERIA என்றொரு நீண்ட ஆவணப்படத்தை தனது சினிமாக்கட்டுரை மொழியில் சைபீரியாவில் மார்க்கர் தானே படம் பிடித்த காட்சிகள், பழைய கோப்புக்காட்சிகள், பத்திரிக்கைப் புகைப்படங்கள், பிரபல பத்திரிக்கையான MAD Magazine என்ற பத்திரிக்கையிலிருந்து ஒரு கார்டூன் ஆகியவற்றைப் பயன்படுத்தி சைபீரியாவின் பண்பாடும் தனித்துவமும் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ் அழிந்து போவதைப்பற்றி படம் எடுத்திருந்தார். பார்வையாளருக்கு படத்தின் இயக்குநர் எழுதிய கடிதம் போல வர்ணனைக்குரல் காட்சிகளை வழிநடத்தியபடி செல்கிறது. இந்த முயற்சியை சினிமா விமர்சகர் அன்ந்ரே பசின், “சினிமாவில் ஆவணப்படுத்தப்பட்ட கட்டுரை” என்று குறிப்பிட்டார். “தொலைதூரத்திலிருந்து நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்று தொடங்கும் வர்ணனை ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையாளருக்கு உரிய உந்துதலுடன் அதே நேரத்தில் ஒரு பயணக்கட்டுரை போலவும் படம் முழுக்க விரிந்து செல்லும்.

சைபீரியாவிலிருந்து கடிதம் என்கிற இந்தப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுவது பின்வருமாறு: சர்ஜய் ஐசன்ஸ்டைனின் பிரபலமான சினிமாவான BATTLESHIP POTEMKIN என்கிற படத்தின் ஒடேசா படிக்கட்டு காட்சியை மூன்று முறை தொடர்ச்சியாக தனது படத்தில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார் கிறிஸ் மார்க்கர். ஆனால் முதல் முறை கிறிஸ் மார்க்கரின் வர்ணனை சோவியத் யூனியனை விமர்சனம் செய்தும், இரண்டாவது முறை சோவியத் யூனியனை பாராட்டியும் மூன்றாவது முறை நடுநிலையாகவும் ஒலிக்கும்படி பயன்படுத்தினார். அது சினிமாவையும், சினிமா எடுக்கப்பட்டுவரும் விதத்தையும் சோவியத் யூனியனின் பலத்தையும் விமர்சனம் செய்தது.


லா ஜெத்தெ

1963ல் ‘லெ ஜொலி மே’ என்று மார்க்கர் எடுத்த மற்றொரு ஆவணப்படத்தில் அல்ஜீரியாவுடனான ஃப்ரான்ஸ் நாட்டின் போரைப்பற்றியும் அதைப் பற்றி ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் கொண்டிருந்த அக்கறையற்ற நிலைப்பாட்டையும் வெளிக்கொணரும் வகையில் தெருக்களில் 50 மணி நேரம் பேட்டிகளை எடுத்து அதை தொகுத்திருந்தார். சினிமா வெரிதெ என்கிற ஆவணப்பட முறைக்கு ஆரம்பமாக இப்படம் இருந்ததாக இந்தப் படம் கருதப்படுகிறது. சினிமா வெரிதெ எனில் கிடைக்கிற ஒளியில் கிடைக்கிற சூழலில் காமெரவை கையால் தூக்கி இயக்கியபடி, காட்சிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கே போய் எடுத்து, பேட்டிகளையும் கிடைக்கிற இடங்களில் பதிவு செய்து, வர்ணனை அல்லது ஜோடனை இல்லாது இசை இல்லாது கிடைக்கிற ஒலியை மட்டுமே கிடைக்கிற சூழலில் பதிவு செய்து அதையும் அழகு படுத்தாது பயன்படுத்தி படத்தொகுப்பு செய்து படத்தை தயாரிக்கும் முறையாக்கும். ஆனால் கிறிஸ் மார்க்கர் சினிமா வெரிதெ எனும் பதத்தை மறுத்தார். பேட்டிகளின் போது மக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களைப் பற்றி அவரது நகைமுரணான, விமர்சிக்கும் தொனியுடனான வர்ணனை கருத்து சொன்னபடியே தொடரும். இது எனது உண்மையைச்சொல்லும் சினிமாவே ஒழிய சினிமா வெரிதெ அல்ல என்று மறுத்தார்  அதாவது அவர் சொல்லவிரும்பும் உண்மையை அவர் விரும்பியபடி சொல்லும் சினிமா என்கிறார் கிறிஸ் மார்க்கர்.

1961ல் கியூபா சி என்றொரு ஆவணப்படத்தை இயக்கினார் கிறிஸ் மார்க்கர். அது கியூபாவின் புரட்சியைக்கொண்டாடியும், அமெரிக்காவை சாடியும் வெளிப்படையாக எடுக்கப்பட்டிருந்ததால் ஃப்ரான்ஸ் அரசாங்கம் அந்தப்படத்தைத் தடை செய்தது. கியூபாவின் தலைநகரான ஹவானாவில் சில மாத காலம் தங்கியிருந்து அந்தப்படத்தைத் தயாரித்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் இரண்டு நீண்ட பேட்டிகள் படையெடுத்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான பாட்டாளி மக்களின் வெற்றியை பறை சாற்றின. இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதால் இதன் மூலம் தான் சொல்ல வந்த செய்திகளை புகைப்படங்கள் மூலமாகவும் புத்தகங்கள் மூலமாகவும் வெளியிட்டார் கிறிஸ் மார்க்கர். ஆனால் அது போதுமான விளைவை ஏற்படுத்தவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


லா ஜெத்தெ

1962ம் ஆண்டு கிறிஸ் மார்க்கரின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றான “லா ஜெத்தெ”  வெளியானது. முழுக்க முழுக்க புகைப்படங்களைக்கொண்டே உருவான 29 நிமிடங்கள் ஓடக்கூடிய கறுப்பு வெள்ளை குறும்படம் அது. ஒரே ஒரு காட்சி துண்டில் மட்டும் ஒரு பெண் கண்ணைத் திறந்து பார்க்கிறாள். அப்போது மட்டும் அசைகிறது சினிமா. மனதை உலுக்கும் இசையுடன் கலந்த கதை சொல்லும் ஒரு வர்ணனை படம் முழுக்க நம்மை வழிநடத்திச்செல்லும். மூன்றாம் உலகப்போர் நடந்து அணு ஆயுதங்களினால் பாரிஸ் நகரமே அழிந்து போன ஒரு சூழலில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உடைந்த கட்டடங்கள் நிறைந்திருக்கின்றன. ஏறக்குறைய எல்லோரும் இறந்து அல்லது காணாமல் போயிருக்கின்றனர். வெகு சிலர் பாதாளச்சாக்கடைகளில் பதுங்கி இருக்கின்றனர். அதில் ஒருவரை அவரது நினைவுகளில் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணம் செய்ய வைத்து நிகழ்காலத்தைக் காக்க முடியுமா என்று பரிசோதித்து பார்ப்பது தான் கதை. பல அறிவியல் புனைவுப் படங்களுக்கு முன்னோடியாக இருந்ததாக “லா ஜெத்தெ” கருதப்படுகிறது. சினிமாவை ஒரு கால எந்திரமாகப் பார்க்க எத்தனிக்கும் தனது சுயதேடல் முயற்சியாகவும் தனக்கு பிடித்த படமான ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் “வெர்டிகோ” வை கொண்டாடுவதாகவும் இந்த ‘லா ஜெத்தெ”யை எடுத்திருந்தார் கிறிஸ் மார்க்கர்.

சினிமா என்றால் என்ன என்பதையே கேள்விக்குள்ளாக்கியது ‘லா ஜெத்தெ’. ஹாலிவுட் சினிமா சொல்லும் சினிமா முறை தான் சினிமாவா? இல்லை அதைத் தாண்டி ஏதும் உண்டா? படத்தொகுப்பும், கோணங்களின் தேர்வும், சத்தமும் ஒரு கதையும் போதாதா? கட்டாயம் காட்சிகளில் மனிதர்களும் கேமராவும் நகரத்தான் வேண்டுமா? என்கிற பல கேள்விகளைக் கேட்டது ‘லா ஜெத்தெ’. கிறிஸ் மார்க்கர் இந்தப்படத்தை ஒரு ஃபோட்டோ நாவல் என்று அழைத்தார்.

ஆனால் எடிடிங் முடியும் வரை ‘லா ஜெத்தெ’ என்ன வடிவம் எடுக்கும் என்று தனக்கே தெரியாது என்கிறார் மார்க்கர். அந்தப்படத்தை தான் கடினமாக உழைத்து உருவாக்கினேன் என்று சொல்லமாட்டேன். அது தானாகவே நிகழ்ந்தது என்றும் அது தானியங்கி எழுத்தால் ஒருவான ஒரு படைப்பு என்றும் கிறிஸ் மார்க்கர் கூறினார். முப்பது ஆண்டுகள் கழித்து இந்தப்படத்தின் கதைக்கருவை, சிந்தனையைத் தழுவி ஹாலிவுட் இயக்குநர் டெர்ரி ஜில்லியம் ’12 குரங்குகள்’ என்ற ஒரு அறிவியல் புனைவு படம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் உள்ள ஒரு பிரபலமான ஊரான கோல்டன் காய் மாவட்டத்தில் உள்ள மதுபானவிடுதிக்கு லா ஜெத்தெ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரம் பல விருதுகளுக்கு சமம் என்கிறார் கிறிஸ் மார்க்கர்.



1964 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தைப் பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட கிறிஸ் மார்க்கரின் இன்னொரு ஆவணப்படம் ‘Le Mystere Koumiko’ (கொமிகோ மர்மம்). இந்தப்படத்தில் டோக்கியோ நகரத்தைச் சேர்ந்த அழகான, படித்த, ஃப்ரெஞ்சு மொழி பேசத்தெரிந்த கொமிகோ முராகா என்கிற பெண்ணுடன் மார்க்கர் நடத்தும் பல உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப்பெண் மூலமாகவும் நவீன டோக்கியோ மூலமாகவும் உலகமயமாதலினால் ஏற்படும் அடையாள இழப்பைப் பற்றி தனது விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார் கிறிஸ் மார்க்கர். கொமிகோ தனக்கு மிகுந்த ஜப்பானிய அடையாளம் இருப்பதாக கவலைப்படுகிறார். ஆனால் நவீன ஜப்பானிய உடையலங்காரம் ஆசிய அடையாளங்களை அழிக்க முனைவதையும் தனது மற்றமை குணத்தை அல்லது வித்தியாசத்தை கடக்க எத்தனிப்பதையும் கிறிஸ் மார்க்கர் தனது வர்ணனை மூலமாகவும் படத்தொகுப்பு மூலமாகவும் விமர்சிக்கிறார்.

1960களில் ஐரோப்பாவின் எல்லா சமூக அக்கறையுள்ள கலைஞர்களைப் போலவும் கிறிஸ் மார்க்கர் நேரடி அரசியல் களப்பணிகளில் இறங்குகிறார். அதன் விளைவு, 1967ல் அவர் தொடங்கிய SLON என்கிற திரைப்படக்குழுமம். ரஸ்ய மொழியில் அதற்கு யானை என்று அர்த்தம். புதிய படைப்புகளுக்கான சங்கம் என்ற ஃப்ரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கம் ஸ்லான். கிறிஸ் மார்க்கர் தனது ஆவணப்படப் படைப்பு பணிகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கூட்டு முயற்சியாக அரசியல் படங்கள் தயாரிக்க இந்தக்குழுமத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலமாக அரசியல் ரீதியான களப்பணிக்கான ஆவணப்படங்களை தயாரித்தார் கிறிஸ் மார்க்கர். தொழிலாளர்கள் தங்களுக்கான சினிமாவை தாங்களே தயாரித்துக்கொள்வது என்பதும் அவர்களுக்கான சினிமா கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குவதும் ஸ்லான் அமைப்பின் நோக்கமாக இருந்தது. ஒரு ஃப்ரெஞ்சு பஞ்சாலையில் நடைபெற்ற ஒரு வேலை நிறுத்தம் தொடர்பாக ஒரு படம், போருக்கு எதிரான ஒரு பாதயாத்திரை பற்றிய ஒரு படம் என்று பல படங்கள் ஸ்லான் அமைப்பிலிருந்து தயாராகின. பல படங்களுக்கு கிறிஸ் மார்க்கரின் பெயர் இணை இயக்குநர் என்று வந்தாலும் அவை கூட்டு முயற்சியால் உருவான படங்களே. அதில் ஒரு முக்கியமான ஆவணப்படம், FAR FROM VIETNAM (1967). வியட்நாம் போரை ஒட்டி அமெரிக்காவைக் கண்டித்து கிறிஸ் மார்க்கர், ரேனெ, கொதார்ட், வார்தா போன்ற பல முக்கிய ஃப்ரெஞ்சு இயக்குநர்கள் தனித்தனியாக இயக்கிய பல துண்டுப் படங்களைத் தொகுத்து ஸ்லான் மூலமாக வெளியிடப்பட்டது. அதில் ஏறக்குறைய 150 தொழில்நுட்பக்கலைஞர்கள் இலவசமாக வேலை செய்திருந்தனர்.


லா ஜெத்தெ

1972ல் கிறிஸ் மார்க்கர் செய்த மற்றொரு முக்கியமான படம் LE TRAIN EN MARCHE (ரயில் கிளம்புகிறது). சோவியத் யூனியனில் 1930களில் தீவிரமாக இயங்கிய ஆவணப்பட இயக்குநர் அலெக்சாண்டர் இவானோவிச் மெட்வட்கின் மற்றும் அவரது சினிமா ரயில் பரிசோதனைகளைப் பற்றிய படம் அது, மெட்வட்கின் மற்றும் அவரது குழுவினர் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயிலில் சோவியத் ரஷ்யாவின் கிராமப்புறங்களுக்கு பயணம் செய்து ஆவணப்படங்கள் எடுத்தனர். ஒரு கிராமத்திற்கு அல்லது ஊருக்குப் போய் அந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தி அன்றே படத்தை எடிட்டிங் செய்து மறுநாள் அதே ஊரில் திரையிடல் செய்தனர். அன்றைய காலகட்டத்தில் 16 எம் எம் ரோலில் தான் ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றை அன்றே “கழுவி” “பிரிண்ட்” போட்டு சுடச்சுட படங்கள் திரையிடப்பட்டன.

1930களில் நடந்த அந்த முயற்சி பற்றி “ரயில் கிளம்புகிறது” என்ற பெயரில் 1971ல் ஒரு ஆவணப்படத்தை கிறிஸ் மார்க்கர் இயக்கி வெளியிட்டார். சோவியத் யூனியன் பற்றியும் புரட்சி பற்றியும் மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கும் அவர்களை சோவியத் யூனியனுக்குள் இணைப்பதற்கும் சினிமா ரயில் தயாரித்த படங்கள் கருவியாக செயல்பட்டன என்பதை தனது ஆவணப்படம் மூலமாக வெளிப்படுத்தினார். கோப்பு காட்சிகளையும் புகைப்படங்களையும் நேரடியாகப் பதிவு செய்த காட்சிகள், பேட்டிகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை கிறிஸ் மார்க்கர் தயாரித்தார்.

இருபது வருடங்கள் கழித்து 1992ல் LE TOMBEAU D’ALEXANDRE (கடைசி கம்யூனிஸ்ட்) என்ற ஒரு ஆவணப்படத்தை சோவியத் யூனியன் உடைந்த பிறகு மெட்வட்கின் பற்றி கிறிஸ் மார்க்கர் இயக்கி வெளியிட்டார்.  மெட்வட்கின் 1989ல் இறந்து விட்டார். இறந்த மெட்வட்கின்னுக்கு எழுதுகிற வீடியோக் கடிதங்களாக தத்துவ உரையாடலாக, உண்மையின் இயல்பு, கற்பனை, கலை, கொள்கை மற்றும் வரலாறு ஆகியன பற்றி ஒரு தியானம் போல அமைகிறது இந்தப்படம். இதுவும் கிறிஸ் மார்க்கரின் புகழ்பெற்ற சினிமாக்கட்டுரை பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.



1977ல் கிறிஸ் மார்க்கர் 1968ல் ஃப்ரான்சில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் பற்றி Le Fond de l’Air est Rouge (The Grin Without a Cat) என்ற தலா 90நிமிடங்கள் ஓடக்கூடிய இரண்டு பாகங்கள் கொண்ட ஒரு ஆவணப்படத்தை எடுத்தார். வியட்நாம் போருக்கு எதிரான அந்த புதிய இடதுசாரி போராட்ட இயக்கத்தைப் பற்றியும் அது எழுப்பிய நம்பிக்கைகளைப் பற்றியும் சிலியில் சல்வடார் அலண்டேயின் இடதுசாரி அரசு அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்ட பின் ஏற்பட்ட சோர்வு நிலை பற்றியும் பேசியது அந்தப்படம். கிறிஸ் மார்க்கரைப் பொறுத்தவரை உண்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பார்வை தான். ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் அதைப் பற்றிய வியாக்கியானம் இவற்றை மீறி வரலாறு எங்கேயும் இல்லை என்கிறார் மார்க்கர்.

Sans Soliel (சூரியன் இல்லாத)எனும் பெயரில் கிறிஸ் மார்க்கர் 1982ல் இயக்கிய மற்றொரு படம் அவரது படைப்பில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இனவரைவியல், தத்துவம் மற்றும் கவிதை ஆகியவற்றை தாராளமாகக் கலந்து கற்பனையான ஒரு ஒளிப்பதிவாளரின் கற்பனையான கடிதம் ஒரு பெயரற்ற பெண்ணுக்கு எழுதப்பட்டது போல அமைந்திருந்தது அந்த ஆவணப்படம். ஐஸ்லாந்து நாட்டிலிருந்து மேற்கு ஆப்ரிக்கா வழியாக ஜப்பான் வரை பயணம் செய்கிறது அந்தப்படம். உலகவரலாற்றை உருவாக்குவதில் மனித ஞாபகசக்தி தோற்றுவிட்டதை தத்துவார்த்த உரையாடலாக நடத்திச்செல்கிறது இப்படம். பலவிதமான பிம்பங்கள், கடிதங்கள், கூற்றுக்கள், வியாக்கியானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஆவணப்படத்தின் எல்லைகளை விரித்தபடியே, புதிய வீடியோ தொழில்நுட்பத்தை, பிம்பம் செதுக்கும் கலையை, ஹாயோ யமனெகோவின் சிறப்பு வரைகலையின் துணையுடன் இன்னுமொரு சினிமாக்கட்டுரையை எழுதிச்செல்கிறார் கிறிஸ் மார்க்கர். திரும்பத் திரும்ப வரும் இசை வடிவத்துடன், எதிர்வாதங்களுடன், கண்ணாடி போன்ற உருவங்களுடன் ஒரு இசை கோர்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளதாக கிறிஸ் மார்க்கரே சொல்கிறார்.


லா ஜெத்தெ

“டோக்கியோவின் அந்த ஜனவரி மாதத்தை நான் நினைவு கூர்கிறேன். இல்லை. அந்த ஜனவரியில் டோக்கியோவில் நான் படம் பிடித்த பிம்பங்களை நினைவு கூர்கிறேன். அவை எனது நினைவின் இடத்தைப் பிடித்துவிட்டன. அந்த பிம்பங்களே எனது நினைவுகள்; நினைவு கூர்வது என்பது மறப்பது என்பதற்கான எதிர்நிலை அல்ல” என்றெல்லாம் வியாக்கியானம் செய்தபடி போகிறது இந்தப் படத்தின் வர்ணனை.

அகிரா குரோசாவைப் பற்றி AK என்றொரு ஆவணப்படமும், ஆந்த்ரே தார்கோவ்ஸ்கியைப் பற்றி ONE DAY IN THE LIFE OF ANDREI ARSENEVICH என்ற ஆவணப்படமும் எடுத்தார். அவற்றில் இவ்விரு இயக்குநர்கள் இயங்கும் விதம், இவர்களின் சினிமாக்களின் மொழி, அதன் பின்னால் இருக்கும் வழிநடத்தும் தத்துவம் ஆகியன பற்றி காட்சிப் பூர்வமாகவும் வர்ணனை மூலமாகவும் ஒரு பாட நூல் போல வியாக்கியானம் செய்கிறார் கிறிஸ் மார்க்கர்.

1990களில் கிறிஸ் மார்க்கர் வீடியோ தொழில்நுட்பத்தில் மல்டி மீடியா படைப்புகளில் பல பரிசோதனைகள் செய்தார். ரெனேயின் நினைவுகள் மற்றும் நினைவு இழந்த கணங்களைப் பற்றிய படங்களுக்கு சமர்ப்பணம் செய்வது போல LEVEL FIVE என்ற படத்தை 1997ல் எடுத்தார்.

கிறிஸ் மார்க்கர் ஒரு திரைப்பட இயக்குநராகத் தனக்கென ஒரு பாதையை அமைத்திருந்தார். மற்ற எந்த படைப்பாளியை விடவும் அலெக்சண்டரெ அஸ்த்ரூ என்கிற சினிமா கருத்தியலாளர் சொன்னது போல சினிமாவை CAMERA STYLO என்ற நிலைக்கு –  பேனாவைக் கொண்டு எழுதுவதைப் போல ஒரு படைப்பாளி கேமராவைக் கொண்டு எழுதும் நிலைக்கு – கொண்டு போனது கிறிஸ் மார்க்கர் தான்.

அமுதன் இராமலிங்கம் புஷ்பம்

Thursday, November 8, 2012

ஆண்மை அல்லது ஆண் தன்மை

ஆண் பெண் சமத்துவம் வரவேண்டும் என்று உழைப்பவர்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, அதற்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிறுவனங்கள் ஆகியன மற்றும் சர்வதேச பெண்ணுரிமை அமைப்புகள் முன் வைக்கிற சில சிந்தனைகள் கவனிக்கத்தக்கவை.

ராகுல் ராயின் When Four Friends Meet என்கிற
 ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சித்துண்டு

ஆண் பெண் சமத்துவம் வரவேண்டும் எனில் பெண்களை ஒருங்கிணைப்பது, பெண்ணுரிமையை வலியுறுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்முறை, அத்துமீறல், ஒடுக்குமுறை இவற்றிக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாது ஆண்களின் மத்தியில் வேலை செய்வது, பெண்ணிய சிந்தனை கொண்ட ஆண்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு பயற்சிகள் கொடுப்பது, ஆணாதிக்கம் மட்டுமல்லாது ஆண்மை அல்லது ஆண் தன்மை (MASCULINITY)க்கு எதிராக போராடுவது அல்லது ஆண் தன்மையை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, பாலியல் விதிகளை, வரையறைகளைப் பற்றி விவாதிப்பது, பாலியல் சிறுபான்மையினருடன் வேலை செய்வது ஆகிய திட்டங்கள் வந்துள்ளன.

எல்லா ஆண்களும் சமமில்லை. எல்லா ஆண் தன்மைகளும் ஒன்றல்ல. வர்க்கம், சாதி, மொழி, இனம், மதம் ஆகியன சார்ந்து ஆண் தன்மை மாறுபடுகிறது. ஒரு ஆண்மை அல்லது ஆண் தன்மை இன்னொரு ஆண்மையை அல்லது ஆண் தன்மையை ஒடுக்குகிறது, சுரண்டுகிறது.

ஒரு இஸ்லாமிய ஆண் நள்ளிரவில் இந்தியாவின் எந்த நகரத்திலும் காவலர்களின் நெருக்கடியைச் சந்திக்காது பயணிக்க முடியாது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். இஸ்லாமிய ஆண் தன்மை இஸ்லாமிய பெண்களை ஒடுக்கினாலும் இந்து ஆண் தன்மையால் அதுவும் ஒடுக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே.

பார்ப்பன ஆண் தன்மை அல்லது இடைச்சாதி ஆண் தன்மை வேறு தலித் ஆண் தன்மை வேறு. பார்ப்பன ஆணுக்கு அல்லது இடைச்சாதி ஆணுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகள் தலித் ஆணுக்கு இல்லை என்பது நமக்குத் தெரியும். (அதே நேரத்தில் தலித் பெண்ணியம் என்கிற கருத்தாக்கம் கடந்த இருபது ஆண்டுகளாகப் பேசப்படுகிறது. தலித் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் பிற சாதிப் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் வேறு பட்டவை என்பதும் தலித் பெண்கள் அதை எதிர்கொள்ளும் விதமும் வேறு என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ராகுல் ராயின் "மஜ்மா" 
என்கிற ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சித்துண்டு


ஆண்களுக்கு இருக்கிற எதிர்ப்பார்ப்பு தொடர்பான சிக்கல்கள்:

1) வெற்றி பெற வேண்டும்
2) அழக்கூடாது
3) ஆண் குறி போதுமான அளவில் இருக்கிறதா? விரைக்குமா? சுயமைதுனம் செய்யலாமா? கூடாதா?
4) பெண்களை திருப்தி படுத்தமுடியுமா?
5) வீரம் கொண்டவனாக இருக்க வேண்டும்
6) சமாதானமாகப் போகக்கூடாது; போனால் நீ பொட்டை
7) நன்றாக சம்பாதிக்க வேண்டும்
8) முதல் இரவிலேயே "கதை"யை முடித்துவிட வேண்டும்
9) வீட்டு வேலை செய்யக்கூடாது
10) வீட்டிலேயே இருக்கக்கூடாது. வெளியில் நாலு இடத்திற்குப் போகவேண்டும்

இப்படிப் பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நிறைய ஆண்கள் தங்களது தங்கைகளுக்கும் அக்காக்களுக்கும் திருமணம் முடித்து வைத்துவிட்டு திரும்பிப்பார்க்கும் போது வயது 40யை நெருங்கி விடுகிறது. போரில் ஆண்களே அதிகம் சாகின்றனர். ஏனெனில் ஆண்கள் போரிட வேண்டும். பெண்களை, குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆண்களின் தங்கள் குறி தொடர்பான சந்தேகங்களை நம்பி ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தமிழகமெங்கும் லேகியங்கள் விற்கின்றனர். மாத்ருபூதம் தொடங்கி பலர் தொலைக் காட்சிகளில் நடத்திய பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் குறிகளின் நீளம் பற்றியும் விந்துவை வீணாக்குவது பற்றியும் புழுங்கி புழுங்கி ஆண்கள் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது தெரியவருகிறது.

ஆனந்த் பட்வரத்தனின் "Father, Son & Holy War" 

எல்லா ஆண்களும் வெற்றி பெற்று விடுவதில்லை. வெற்றி பெற முடியாத ஆண்கள் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகின்றனர். அதிகம் குடிக்கின்றனர். ஆண்கள் குடிக்கலாம் என்கிற உரிமை இங்கு ஆண்களுக்கு எதிராக வேலை செய்கிறது.

மகாராஷ்ட்ராவிலும் ஆந்திராவிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கடன் சுமையினால் விவசாயிகள் (படிக்கவும் ஆண் விவசாயிகள்) தற்கொலை செய்து கொள்வது பற்றி நாம் அறிவோம். குடும்பத்தினரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு சாகும் மனநிலை எப்படி உருவாகிறது ஒருவருக்கு? அந்தக்கடனை யார் கட்டுவது? மனைவியா? குழந்தைகளா?விவசாயிகள் பிரச்சனைக்கு அரசின் கொள்கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் காரணம் என்றாலும் குடும்பத்தலைவர் என்ற முறையில் தோல்வியும் அவமானமும் ஆண்களுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன. வங்கிகளும் ஆண்களுக்கே கடன் கொடுக்கின்றன. அவர்கள் மீது மிகுந்த பொறுப்பை ஏற்றுகின்றன. தான் எல்லாம் செய்து விட முடியும் என்று நினைக்கிற சூழலில் விளைச்சல் இல்லை, மழை இல்லை, விலை கிடைக்க வில்லை எனும் இக்கட்டு எல்லாவற்றையும் விட்டு ஓடி விட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.

பெரும் நகரங்களில் காதலிக்க மறுத்த பெண்கள் மீது திராவகம் ஊற்றும் ஆண்களும் ஆண் தன்மையினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களுக்கு "இல்லை" என்ற சொல் ஆகாது. கோபம் வருகிறது. வன்முறையில் இறங்குகின்றனர். தனக்கு எடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது என்று நினைப்பில் வளர்ந்தவன்  ஒரு பெண் தன்னை நிராகரிக்கும் போது ஆத்திரம் புத்தியை பேதலிக்க வைக்கிறது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இப்படிப் பட்ட குற்றங்களுக்காக கைதாகி சிறையில் இருக்கின்றனர்.

ஆண்களும் விடுதிகளில், சிறைகளில், ராணுவத்தில், வீடுகளில், பொது இடங்களில் சக ஆண்களால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் சித்தப்பாக்களாலும், மாமாக்களாலும், தாத்தாக்களாலும், பிற உறவினர்களாலும் வீடுகளுக்கு உள்ளேயும் ஆசிரியர்களாலும், அதிகாரிகளாலும், காப்பாளர்களாலும்  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

புடைக்கும் புஜங்களும் தெரிக்கும் நரம்புகளும்: 
ஆண் தன்மையின் தமிழ் சினிமா பிரதி

கலவரங்களில் ஆண்களே ஆண்களால் வன்முறைக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஆண்களே ஆண்களால் கொலை செய்யப்படுகின்றனர். காவல்துறையினர் ஆண்களைப் பிடித்துப்போய் அடித்து நொறுக்குவது நெருக்கடிக்கு உள்ளான வடகிழக்கு இந்தியாவிலும், காஷ்மீரிலும் சத்திஸ்கரிலும் ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் நடந்துள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட, வீங்கிய ஆண் திமிர் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. சண்டைக்கும், வன்முறைக்கும் ஆண்கள் முன்னுக்கு நிற்கின்றனர். அதிகம் அடி, உதை வாங்குகின்றனர். சாகின்றனர்.

வயதான கிழவன் மனைவி இறந்தால் அவனுக்கு வாழத்தெரிவதில்லை. சிரமப்படுகிறான். கிழவிக்கு கணவன் இறந்தால் வாழத்தெரியும். பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாள். பொறுப்பாக குடும்பத்தையும் தன்னையும் பார்த்துக்கொண்ட அனுபவம் அவளுக்கு இருக்கிறது. சீராட்டி, பாராட்டி, கவனிப்புக்கு உள்ளாகும் ஆண் மனைவி போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறான்.

குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களில் ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் கரடு முரடானவையாகவும், வன்முறையைக் கொண்டாடுவதாகவும் இருப்பதையும், பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மென்மையை, அமைதியைக் கொண்டாடுவதாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். ஆண்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே வன்முறையைக் கொண்டாடும் வலியுறுத்தும் ஆண் தன்மைக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதுவே அவர்களின் சுமையாகவும் பழியாகவும் சாகும் வரை தொடர்கிறது. அவர்கள் அதிலிருந்து வெளிவர முயற்சித்தால் அன்றி.

கிரேக்க ஆண்மகன் ஹெராக்லீஸ்; ஆண் தன்மையின் அடையாளம்

பெண்களுக்கும் ஆண் தன்மை இருக்கிறது. அவர்களும் பிற பெண்களையும் ஆண்களையும் ஒடுக்குகின்றனர். ஜெயலலிதா எல்லா மந்திரிகளையும் தனது காலில் விழ வைத்துப் பார்ப்பதும் ஒருவித ஆண் தன்மை தான். பெண்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஆண் தன்மைகளைக் கற்றுக்கொடுக்கின்றனர். பெண்களும் ஆண் தன்மை சரியென்று நம்புகின்றனர். சக பெண்களையே அது அதிகம் பாதிக்கிறது என்பது தெரியாமல் நடக்கிறது.

நகர்புறத்துப் பெண்களின் ஆண் தன்மை, கிராமப்புற ஆண்களின் ஆண் தன்மையை விட வன்மமானதாக இருப்பதையும் உயர் சாதி பெண்களின் ஆண் தன்மை, ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களின் ஆண் தன்மையை விட மிகுந்த அழுத்தமானதாக இருப்பதையும் நாம் பார்க்கலாம்.  ஆண் தன்மை ஆண் உடலின் வழியாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. ஆண் தன்மை ஒரு அரசியல். அது பல உடல்களின் வழியாக பல அளவுகளில் நேரத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தப்படுகிறது.

வீட்டுக்குள் ஆண்; வெளியில் பெண்

பாலின சிறுபான்மையினர் அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களின் பாலியல் தேர்வு இந்த ஆண் தன்மையின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால் தான் இன்னும் பல நாடுகளில் ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் கடும் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆண்மை அல்லது பெண்மை என்கிற கறாரான வரையறையை இவர்கள் களைத்து எறிகின்றனர். ஒரு ஆணுக்குள் பெண்மையும் ஒரு பெண்ணுக்குள் ஆண்மையும் இருக்க முடியும் என்கிற வாதம் பேராண்மை என்கிற பேருண்மையை தவிடு பொடியாக்குகிறது.

வேகமாக வண்டி ஓட்டுவது கூட ஒரு ஆண் தன்மையின் அடையாளம் தான். நமது குடும்ப அல்லது நட்பு வட்டாரத்தில் இப்படி கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டி விபத்துக்கு உள்ளானவர் பலர் உண்டு. நிரந்தர ஊனம் அல்லது மரணம் அல்லது பொருளாதார அழிவு இவை தான் இதற்குக் கிடைக்கும் பரிசு. பெண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால் கேலி செய்யப்படுவதும் அவர்கள் ஓட்டும் வாகனங்களை இடிப்பது போல ஓட்டி பயமுறுத்துவதும் இதன் தொடர்புடையது தான். ஆண்கள் மெதுவாக வண்டி ஓட்டினால் பொம்பள மாதிரி ஓட்டுகிறாயே என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.

ஆண் தன்மைக்குள் இருக்கிற இந்த பிளவை, நெருக்கடியை, ஏற்ற தாழ்வை சிக்கலுக்குள்ளாக்குவது, வலியுறுத்துவது, விவாதிப்பது ஆண் பெண் சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஆண்களை அடையாளம் காண்பதற்கு, அங்கீகரிப்பதற்கு, ஊக்குவிப்பதற்கு உதவும் என்பதும் ஆண் பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆண்களும் பங்கேற்க முடியும் என்பதும் சாத்தியமாகிறது.

ஆண் தன்மை எனும் சுமை

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்மை அல்லது ஆண் தன்மை (MASCULINITY) தொடர்பாக பல்வேறு விதமான ஆண்களுடன் பயிற்சிகள், திரையிடல்கள், கருத்தரங்குகள், பட்டறைகளில் கலந்து கொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. சென்ற ஆண்டு லயோலா கல்லூரியில் ஆண் தன்மை தொட்ர்பான ஒரு திரைப்படவிழாவும் நான் நடத்தினேன். ராகுல் ராய் என்கிற ஆவணப்பட இயக்குநர் ஆண் தன்மை தொடர்பாக சில முக்கியமான படங்களும் எடுத்துள்ளார்.

எஸ்.ஆனந்தி, ராஜன் குறை, ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் Economic and Political Weekly பத்திரிக்கையில் தலித் ஆண் தன்மை தொடர்பாக "Work, Caste and Competing Masculinities"  எனும் கட்டுரையை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனந்த் பட்வர்த்தனின் 'Father, Son and Holy War' என்கிற ஆவணப்படமும் மத அடிப்படைவாதமும் ஆணாதிக்கமும் எப்படி கை கோர்த்து ஆண் தன்மையை முன்னிறுத்துகின்றன என வாதிடுகிறது. எழுத்தாளர் தமிழ்செல்வனின் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்" என்கிற புத்தகமும் ஆண் தன்மையை விவாதப் பொருளாக்குகிறது.

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...