Sunday, July 7, 2013

விடுகதை: என் முதல் புனைவுப்படம்

விடுகதை

இயக்கம்: அமுதன் இராமலிங்கம் புஷ்பம்


காட்சி 01
பகல்; கடற்கரை
கடற்கரையில் அ பெண்களை வெறித்தபடி!

அ வுக்கு வயது 40. தனிக்கட்டை. 

அ கடற்கரையில் பெண்களை வெறித்தபடி இருக்கிறான். அவனுக்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு வந்திருப்பது மட்டுமின்றி, அழகாக இருப்பது மட்டுமின்றி துணையோடு வந்திருப்பதே தொந்தரவாக இருக்கிறது. இப்படி பெண்கள் அவனுக்கு துரோகம் செய்துவிட்டு ஆளாளுக்கு ஒரு துணையுடன் கடற்கரைக்கு வந்தால் அவன் என்ன செய்வது? என்று தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்.

துணையோடு வந்தது மட்டுமின்றி சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பது அவனுக்கு மேலும் நெஞ்சுவலியைக்கொடுத்தது.

ஆணும் பெண்ணுமாய் பல ஜோடிகள் காதல் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றனர். சிலர் கொஞ்சம் இடைவெளி விட்டு பட்டும் படாமல் பார்வையாலேயே காதலிக்கின்றனர். சிலர் விரல்களால் உரசியபடி இருக்கின்றனர். சிலர் நடந்தபடி தெரிந்தும் தெரியாமலும் தோள் மீது மெதுவாய் பதமாய் இடித்தபடி காதலிக்கின்றனர்.

சிலர் படகின் பின்புறம் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து வாயோடு வாய் வைத்தபடி இருக்கின்றனர். சிலர் ஒருவருக்கொருவர் உடல்களில் கைகளை பரவவிட்டு காதலிக்கின்றனர். முதல் முறையாக இடுப்பைத்தொடும் காதலன், முதல் முறையாக காலைத் தடவும் காதலி, முதல்முறையாக முலையைத் தொடும் காதலன், வாய் வைத்து விளையாடும் காதலன், அவனுக்கு கைகளால் சுகம் கொடுக்கும் காதலிகள், கொஞ்சம் கூடுதலாக வாய் வைக்கும் குமரிகள் என்று காமமும் காதலும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கடற்கரையில்.

சிலர் வெட்டவெயிலில் சூரியன் நடுமண்டையில் இடிபோல் இறங்கிக்கொண்டிருக்கும் போதும் அதையும் பொருட்படுத்தாது, குண்டி கொதிக்கும் சூட்டில் கடற்கரை மணலில் அமர்ந்து ஒருவரை ஒருவர் விரசத்துடன் அருகருமே நெருக்கமாய் அமர்ந்து கொடி போல் பரவி நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றனர். 

எங்களுக்கு காதலிக்க இடம் கொடுக்காத நாசமாய்ப்போன சமுதாயமே எங்களின் தவிப்பைப் பார் என்று சுற்றி வேடிக்கை பார்ப்பவரை குற்ற உணர்ச்சியால் வதைத்தபடி இருக்கின்றனர்.

அ எல்லோரையும் ஏக்கத்துடன் பார்த்தபடி அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறான். 

திடீரென்று ஆவேசம் வந்தது போல் காதலில் ஈடுபட்டிருப்போர் அருகில் நடக்கத் தொடங்குகிறான் அ. குறுக்கும் நெடுக்குமாக இடதும் வலதுமாக வேகமாகவும் மெதுவாகவும் தானே பேசிக்கொண்டும் ஆழமான மெளனத்துடனும் காதலர்களின் அருகே ஒரு மின்னல் போல வந்து போகிறான்.

காதல் வேட்டையில் மும்மரமாக மூழ்கியிருப்போர் இப்படி ஒருவன் சடாரென்று அருகில் வந்து போவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். தங்களைச் சுதாரித்துக்கொண்டு சும்மா பேசிக்கொண்டிருப்பது போல பாவனை செய்கின்றனர். ஏதோ கீழே விழுந்த பொருளைத் தேடுவது போலவும், மற்றவரின் கண்களில்  விழுந்த தூசியை எடுப்பது போலவும், அடிப்பட்ட காலில் காயத்தைப் பார்ப்பது போலவும், வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், காதலைத் தவிர பிற காரியங்களில் ஈடுபட்டிருப்பது போலவும் நடிக்கின்றனர்.

காதலர்களின் இந்தத் தடுமாற்றம் அ வுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னை விட்டு விட்டு எவனுடனோ இப்படி சுகமாக இருக்கிறாயே என்று அடையாளம் தெரியாத காதலியுடன் கோபித்தபடி நடந்து கொண்டு இருக்கிறான். எனக்கு என்ன நீ மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? நீ மகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால் என்னுடன் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் பேசியபடி அலைகிறான்.

ஆனால் அதற்குள் காதலர்களில் சிலருக்கு அவனது திட்டம் பிடிபடுகிறது. இவன் வேண்டுமென்றே காதல் ஆட்டத்தைக் குலைப்பதற்காகவே வரும் நச்சு சக்தி என்பதை உணர்ந்துகொண்டு அ வைப் பார்த்து சத்தம் போடுகின்றனர் சிலர். அடிக்க வருகின்றனர் சிலர். மன்ணை அவன் மீது தூற்றுகின்றனர். ஏற்கனவே காதலே இல்லாமல் கல்யாணமே இல்லாமல் சபிக்கப்பட்ட தன் வாழ்க்கை மீது இன்னும் சிலர் சாபம் இடுவதா என்று துடித்துப்போகிறான் அ.

அ வெட்கப்படுகிறான். இப்படி கீழான நிலைக்கு பொறாமை ஒரு தோல் வியாதி போல தன் உடலெங்கும் பரவி தன் கண்களை மறைத்துவிட்டதே என்று புலம்புகிறான்.

கழிவிரக்கம் தன் குடல் வரை நிரம்பி வழிகிறது.  ஒரு ஓரத்தில் போய் அமர்கிறான்.

அ வின் விரல்கள் பூலோகம் என்ற பெயரை அவன் அறியாமல் மணலில் எழுதுகின்றன.

காட்சி நிறைவு

விடுகதை

 தயாரிப்பு & இயக்கம்: அமுதன் ஆர்.பி.

ஒளிப்பதிவு: சன்னி ஜோசப்

படத்தொகுப்பு: கோபி மோகன்

இசை: சித்தார்த்

திரைக்கதை: அமுதன் ஆர்.பி.

வசனம்: அனிருதன் மகாதேவன், அமுதன் ஆர்.பி.

தயாரிப்பு நிர்வாகம்: சார்லி