Sunday, February 3, 2013

விஸ்வரூபம் தொடர்பாக...

கமலஹாசனின் விஸ்வரூபம் தொடர்பான எனது கருத்துக்களுக்கு பல நண்பர்கள் வருத்தமும் சிலர் எச்சரிக்கையும் விடுத்திருப்பதை ஒட்டி:
1) நான் எந்த படைப்பையும் அரசோ அல்லது ஒரு இயக்கமோ தடை செய்வதை ஆதரிக்கவில்லை. தணிக்கை முறைக்கே எதிரானவன் நான். எனது படங்களுக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வாங்கவில்லை. படைப்புகள் சுதந்தரமாக வெளிவரவேண்டும். படைப்புகளை முடக்குவது சமூகத்தில் விமர்சனங்களை முடக்குவதற்கு சமம். விமர்சனங்களும் மாற்றுக்கருத்தும் ஜனநாயகத்திற்கு அடிப்படை. எனவே படைப்புகள் தடையின்றி வெளிவரவேண்டும்.

2) அதே நேரத்தில் படைப்புகள் பற்றி சமூகத்தில் விவாதங்கள் நடக்க வேண்டும். திரைப்படவிழாக்களும் திரையிடல்களும் அவற்றில் நடக்கும் விவாதங்களும் இதில்அடங்கும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களும், விமர்சனக்கூட்டங்களும், கட்டுரைகளும், பயிலரங்குகளும் மிகவும் அவசியம். தமிழ் சினிமா போன்ற வெகுசன ஊடகம் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவை வெறும் பொழுது போக்குக்கூடங்கள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புகள்.

3) ஒரு கலைவடிவம் அது எதற்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் சரி நமது பார்வையை, புரிதலை விரிவு படுத்துகிறதா இல்லை நம்மை சுருக்குகிறதா என்பது மிகவும் முக்கியமான கேள்வி. ஒரு படைப்பு பிறர் மீதான துவேசத்தைப் பரப்பினால், வெறுப்பை விதைத்தால், உண்மையை மறைத்தால், பொய்ப் பிரச்சாரம் செய்தால் சிவில் சமூகத்தினர் அதை விமர்சனம் செய்வது தான் சரி. அதை நான் செய்வேன்.

4) இந்த அனுபவம் நம்மை இன்னும் நல்ல மனிதர்களாக்கும் என்று நம்புகிறேன்.


நான் சொன்ன கருத்துக்கள்:
மதுரையில் மாட்டுத்தலையை இந்து முன்னணி அலுவலகத்தில் யாரோ போட்டுவிட்டனர் என்று சொல்லி மதுரை மெகபூப்பாளையும் மற்றும் ஹாஜிமார் தெருவில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் இழுத்துக்கொண்டு போய் ரவுண்டு கட்டி அடித்தார்களே அதை எந்த "நாயகனும்" படமாக எடுக்க மாட்டார்களா?

பார்ப்பனர்களை அல்லது இந்திய அரசை அல்லது இந்திய ராணுவத்தை அல்லது அம்பானி மாதிரியான முதலாளியை விமர்சனம் செய்து பார்ப்பனர் அல்லாத ஒருவர் படம் எடுத்திருந்து அதை மாநில அரசோ மத்திய அரசோ தடை செய்திருந்தால் இப்போது கமல்ஹாசனுக்காக கொதிப்பவர்களும் துடிப்பார்களா?
வடிவேலு எனும் மகாகலைஞனை எல்லோரும் ஓரம் கட்டினீர்களே! அப்போது எங்கே போனது உங்களது கருத்துரிமை? "சிவப்பா இருக்கிறவன் சொன்னா அது உண்மையாயிருமா?" "உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?" (இதெல்லாம் வைகைபுயலின் தத்துவங்கள்)
"தேவர்மகன்" தென்தமிழ்நாட்டில் தலித் மக்களின் மீதான வன்முறைக்கு ஒரு கோஷமானது போல (போற்றிப்பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!) இந்தப்படமும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணிதிரட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறதா?

கமல்ஹாசனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒத்துக்கொள்கிறோம். தமிழக அரசு ஒரு அராஜக ஆட்சி நடத்துகிறது. ஒத்துக்கொள்கிறோம். இதைக் கண்டிக்கிறோம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது தான்.

ஆனால் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, ஏழைகளை, குடிசைவாழ் மனிதர்களை, தலித்துகளை, பெண்களை, திருநங்கைகளை, பாலியல் சிறுபான்மையினரை, விவசாயிகளை, உழைப்பாளர்களை, தமிழர்களை, கறுப்பானவர்களை, குண்டானவர்களை, குட்டையானவர்களை, மாற்றுத் திறனாளிகளை கீழான நிலையில் சித்தரிப்பதைப் பற்றி கமல்ஹாசனுக்காக, கருத்துரிமைக்காக கண்ணீர் விடுவோர் விவாதிக்கத் தயாரா?

உதாரணமாக "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் கதாநாயகனின் பெயர் "ராகவன்" என்கிற பார்ப்பனப் பெயராக இருந்ததும் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களுக்கு தூய தமிழ் பெயர் இருந்ததும் அவர்கள் ஓரினச்சேர்க்கை புரிபவர்களாகக் காண்பிக்கப்பட்டதும் எதேச்சையாக நடந்ததா? கெளதம் மேனன் எனும் மலையாளிக்கும் கமல்ஹாசன் எனும் தமிழனுக்கும் இது தெரியாமல் நடந்ததா? இது தான் உலக நாயகனின் உலக சினிமாவா?

இப்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களை (ஆடியன்ஸ்) அவமானப்படுத்திவிட்டு எமது மக்களின் காசில் நீங்கள் சொகுசாய் வாழ நினைப்பது என்ன நியாயம்? இதை கலைச்சேவை என்றாலும் வியாபாரம் என்றாலும் கண்டிக்க வேண்டாமா? எருமை மாட்டில் மழை பெய்வது போல என்ன செய்தாலும் தலை அசைத்து கொடி பிடிக்கலாமா?

குறிப்பாக கமல்ஹாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்காக உயிரைக்கொடுப்பதாக முழக்கமிடுபவர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?

சினிமா ஒரு பொழுது போக்கு ஊடகம் தானே என்று எத்தனை நாள் நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கப்போகிறோம்?

அசிங்கமான சினிமாவால் அதன் ரசிகர்களுக்குத்தானே கேவலம்?

இறுதியாக:

எந்தப்படைப்பும் தடை செய்யப்படக்கூடாது. அதனால் அய்யா படம் வெளியே வரவேண்டும். அவர் டவுசர் கிழிய வேண்டும் என்று தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மிகச்சிறந்த கலைஞன் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்! தரகு வேலை பார்த்தால் அதற்குப் பெயர் வேறு!

எனக்குப் பிடித்த படம் கரகாட்டக்காரன் தான். அந்தப்படத்தில் இவ்வளவு பித்தலாட்டமும் மோசடியும் துரோகமும் இல்லை!

விஜய்காந்துக்கும் அர்ஜூனுக்கும் விஜய்தம்பிக்கும் கோயில் கட்டலாம் என்று தோன்றுகிறது!

No comments:

Post a Comment