பராசக்தி கூறும் உண்மை - ஆவணப்பட இயக்குனர் அமுதன் ஆர்.பி.
பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை இயக்குனர் சுதா கொங்காரா தமக்குக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு ஒரு வணிச சினிமாவாக இருந்தாலும் தம்மளவில் நியாயமாகச் சித்தரித்திருக்கிறார் என்பதை பல தமிழ் மற்றும் திராவிடப் பற்றாளர்களின் கருத்துக்களில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.
இதற்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பேட்டா பரம்பரை' எனும் படத்தில் தான் அபூர்வமாக திமுகவையும் கலைஞர் அவர்களையும் மதிப்போடு ஒரு தமிழ்சினிமா காட்சிப்படுத்துகிறது.
இவற்றைத் தவிர ஏறக்குறைய எல்லா தமிழ்த் திரைப்படங்களும் திராவிட எதிர்ப்பு கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக 1967ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசியல்வாதிகளைக் கேவலமாகச் சித்தரிப்பது ஒரு வழக்கமாக இருப்பதை நாம் காணமுடியும்.
திராவிடக் கட்சிகளினால் பலன் அடைந்த மாநிலத்தில் திராவிடக் கட்சிகளின் வரலாற்றை ஏன் இதுவரை எந்த இயக்குனரும் மாண்போடு படம் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.
முதலில் திராவிடக் கட்சிகள், அவற்றைச் சார்ந்த இயக்குனர்கள் சமூகநீதி, பகுத்தறிவு, பெண் விடுதலை ஆகிய பொருட்களில் படங்களை எடுத்தார்களே தவிர தமது கட்சிகளின் போராட்ட வரலாற்றைப் படம் பிடிப்பதை முக்கியமாகக் கருதவில்லை என்றும் நாம் துணியலாம். வரலாற்றில் நடந்த பிழைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை என்றும் கருதலாம். அல்லது அவர்களுக்கு தமது வரலாறு பற்றிய தன்னம்பிக்கை இல்லாததும் காரணமாக இருக்கலாம். சூத்திரர்களுக்கே உரிய ஒரு தாழ்வு மனப்பான்மை அல்லது தன்னடக்கம் என்றும் இதைக் கூறலாம்.
உயர்ஜாதியினர் தமது சிறிய சாதனைகளையும், அல்லது இல்லாத சாதனைகளையும் ஊதிபெருக்கும் போதும் மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது முரணாகவே இருந்தாலும் இது தானே இந்திய வழக்கம். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்சினிமா திகழ்ந்திருக்கிறது.
திமுகவிலிருந்து அதிமுக பிரிந்த போதே, திமுகவை எதிர்ப்பதே அதிமுகவின் ஒரே கொள்கையாக இருந்ததால், திராவிடக்கொள்கைகளை, அவர்களின் வரலாற்றைப் பேசினால் திமுகவைப் பாராட்டவேண்டியிருக்கும் என்று பலர் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கு பயந்து எதையும் பேசாமல் விட்டிருக்கக்கூடும்.
கலைஞர் முன்னெடுப்பில் பெரியார் பற்றிய ஒரு முழுநீளப்படம் சத்யராஜ், குஷ்பு போன்றோர் நடிப்பில் வெளிவந்தது. அதையும் திமுக பார்வையில் எடுக்கப்பட்ட படம் என்று பலர் குற்றம் சாட்டினர். ஜனரஞ்சக வடிவில் இருந்ததால், கதைக்கருவின் வீரியம் குறைந்திருந்ததாகவும் பலர் ஆதங்கப்பட்டனர்.
அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டிருக்கவே வேண்டாம் என்று அதன் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் ஒரு மேடையில் கேலி செய்து பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு பாமக வகை தமிழ்த்தேசியவாதி என்பது இப்போது வெளிவரத்தொடங்கியுள்ளது.
இன்னொரு முக்கியமானக் காரணமாக நான் கருதுவது தமிழ்த்திரைப்பட உலகில் திராவிட இயக்க ஆதரவாளர்கள் அதிகம் இல்லை என்பதும் இவ்வுலகம் பல காலம் தமிழ்த்தேசிய, இடதுசாரி, வலதுசாரி, பார்ப்பனிய, இடைச்சாதி சக்திகளால் நிறைந்திருந்தது என்பதும் ஆகும்.
கம்யூனிஸ்ட் ஒருவர் நல்லவராக பல சினிமாக்களில் வந்திருக்கிறார். ஆனால் ஒரு கருப்புச்சட்டைக்காரர் எங்காவது தென்பட்டிருக்கிறாரா? அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தியாக உணர்வோடு வேலை செய்யாமாலா நாம் இங்கு வளர்ந்திருக்கிறோம்?
அல்லது அவர்களது தொண்டுகளை நாம் மதிக்கத்தவறிவிட்டோமா? நன்றிகெட்டவர்களா அல்லது வரலாற்று மூடர்களா நாம்?
தமிழ்சினிமா இயக்குனர்கள் எப்போதும் சமகால அரசியல்வாதிகளைக் கேலி செய்வது, தரக்குறைவாகக் காட்டுவது, வன்முறையாளர்களாக, பாலியல் வன்முறை செய்பவர்களாகவே, திருடர்களாக, கொள்ளைக்காரர்களாக, அறிவு இல்லாதவர்களாக, முரடர்களாகவே தமிழ் சினிமாவில் காட்டியிருக்கின்றனர். அப்படி எல்லோரும் திருடர்களாக இருந்திருந்தால் மனிதவளமேம்பாட்டிலும், தொழில், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அடிப்படைக்கட்டமைப்பு, பாதுகாப்பு என பல அம்சங்களில் நாம் எப்படி இவ்வளவு வளர்ந்திருக்கிறோம்?
இவை எதுவும் ஏன் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கோ, இயக்குனர்களுக்கோ எட்டவில்லை?
திராவிட இயக்கத்தினரால் கைவிடப்பட்டதாக, துரோகம் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் பட்டியலினப் பிரிவில் இருந்து வந்த அம்பேத்கர்வாதியான பா ரஞ்சித் இயக்கிய சார்பேட்டா பரம்பரை எனும் படத்தில் தான் அத்திப்பூத்தாற்ப்போல் கலைஞரை, திமுகவைக் கொண்டாடும் காட்சிகள் வந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மனிதர்கள் கொள்கையற்றவர்களாக, குறுகிய நோக்கம் கொண்டவர்களாக மாறினர் என்றும் அந்தப்படம் சித்தரித்தது புதுமையாக இருந்தது.
பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தப் படம் வந்திருக்கிறது என்று சொல்லலாம். சுதா கொங்காராவின் குரு நாதர் மணிரத்னம் தம் வாழ்நாள் ழுழுக்க திமுக எதிர்ப்பாளராகவே இருக்கிறார். அவரது இருவர் படம் அப்பட்டமான திராவிட இயக்க வெறுப்புப் படம். சுதா மட்டும் எதனால் இப்படி சிந்திக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அரசியல் சூழல் காரணமாக இருக்கலாம். அல்லது அவருக்கு ஏதேனும் உண்மை புரிந்திருக்ககூடும்.
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்

