Sunday, November 25, 2012

கோலார் பகுதியில் தேசவிரோதிகள்

தேசவிரோதச் செயல்கள் தொடருகின்றன!


கோலார் பகுதி மக்கள் கூடன்குளம் அணு உலையிலிருந்து அணுக்கழிவுகளை கோலார் தங்கச்சுரங்கத்தில் கொட்டக்கூடாது என்று போராடுவதை நினைத்து தேச பக்தனாகிய எனக்கு மனம் பதறுகிறது. தூங்க முடியவில்லை. உணவு அருந்த முடியவில்லை. மலம் கழிக்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டிய வண்ணம் இருக்கிறது. வாய் வேறு கோணிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை!

இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்த மக்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகின்றனர்? இவர்களுக்கு தேசபற்றே இல்லையா?

இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு சதியைக் கண்டறிய வேண்டும். அதை வேரோடு கிள்ளி எறிய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று புலன் விசாரணை செய்யவேண்டும். போராடிய மக்கள் மீது தலா 10 வழக்குகள் போட வேண்டும். குறிப்பாக தேசவிரோத வழக்குகள் போடவேண்டும்.

அந்தப் போராட்டத்திற்கு மைக் செட் கொடுத்தவனுக்கு, போஸ்டர் அடித்தவனுக்கு, அதை ஒட்டியவனுக்கு, அதை எட்டி நின்று எட்டிப் பார்த்தவனுக்கு, அங்கு இருந்தவர்களுக்கு தண்ணீர், தேநீர், சிகரெட், புகையிலை, பான் சப்ளை செய்தவனுக்கு, அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை பணம் கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தவனுக்கு (காசு வாங்காமல் இந்தக்காலத்தில் போராட்டத்திற்கு யார் வருவார்கள்?) அந்த ஊர்வலத்தில் போடப்பட்ட கோஷங்களைக் கேட்டவர்களுக்கு, இந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு, எதையோ நினைத்து அங்கு தலையாட்டியவர்களுக்கு, சிரித்தவர்களுக்கு, கொட்டாவி விட்டவர்களுக்கு எல்லார் மீதும் தேச விரோத வழக்குகள் போடவேண்டும்.

இதைப் பற்றி முகநூலில் எழுதுகிற, அதை "லைக்'குகிற ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பூனைகள், நாய்கள், எலிகள், பாம்புகள், யானைகள், அந்தக்கம்ப்யூட்டர்கள் எல்லாவற்றையும் இந்த நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும்!


பவர் (?) வேண்டுமெனில் நாட்டுக்காக வீடு, வாசல், தோப்பு, துரவு, மானம், மரியாதை, பிள்ளை, குட்டி, மனைவி, மக்கள், கோயில் குளம், ஆடு, மாடு, துணி, மணி, மீதமிருந்தால் உயிர் எல்லாவற்றையும் தியாகம் பண்ண வேண்டாமா? அப்படி செய்ய மாட்டோம் என்று போராடும் கோலார் பகுதி மக்கள் தேச விரோதிகள் தானே? அவர்கள் மீது தேச துரோக வழக்குகள் தான் போடவேண்டும்.

நாம் அதைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை. அதற்காகத் தானே ஐஏஎஸ் அய்யாக்களும் ஐபிஎஸ் மாமா(?)க்களும் இருக்கிறார்கள். மக்களை எப்படி "கவர்ன்" பண்ண வேண்டும் என்று அவர்கள் நவீன யோசனைகளை - புராண கால சாம,பேத, தண்டங்கள் உட்பட -அரசுக்குக் கொடுப்பார்கள்.

தேச பக்தர்களாகிய நாம் பதட்டமடைய வேண்டியதில்லை.

ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment