மொழிபெயர்ப்புக் கவிதைகள் : அமுதன் ஆர்.பி.
1) தூசியில் நிரந்தரமாய்
- உருதுக் கவிதை
எழுதியவர் : தரந்நும் ரியாஸ்
ஆங்கிலத்தில் : மீரான் பஞ்சாபி
மரங்களின் ஊடே காற்று நடனமாடும்
தோட்டங்களில் பறவைகள் பாடும்
ஆற்றுக்குள் தண்ணீர்க் கலந்தோடும்
புற்களின் மீது பனித்துளிகள் கசியும்
மலையுச்சிகளை மாலை மஞ்சள் கரைக்கும்
வயல்களின் வழியே சிறுவர்கள் ஓடி ஆடுவர்
ஜூலியட்டுகள் ரோமியோக்களைச் சந்திப்பர்
தமது குழந்தைகளுக்கு தாய்மார்கள்
தாலாட்டுப் பாடுவர்
என் இருப்பின் ஒரு கைப்பிடிச் சாம்பல்
தூசியில் நிரந்தமாய்த் தொலைந்து போகும்
தமிழில் : அமுதன் ஆர்.பி.
2) நிவாரணம் அற்றது
- உருதுக் கவிதை
எழுதியவர் : யாக்கின்
ஆங்கிலத்தில் : எட்வர்ட் பாய்ஸ் மாத்தர்ஸ்
அரசனின் வீட்டை விட
என் அன்பானவளின்
நிலைப்படியையே நான் விரும்பவேன்;
தில்லியின் மாளிகைகளை விட
அவளது அழகு மறையும் சுவற்றின் நிழலையே நான் விரும்புவேன்.
வசந்தகாலம் வரை ஏன் காத்திருந்தாய்?
முட்கள் நிறைந்த சிவந்த ரோசாப்பூக்கள்
என் கைகளில்
ஏற்கனவே நிறைந்திருக்கவில்லையா?
என் இதயம் உனக்கானது,
ஆகையால் யாக்கின், யாக்கின், யாக்கின், முட்டாள் யாக்கின்
என்று எந்த இதயம் புலம்புகிறது என்பதை
நான் அறிய வேண்டாம்.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
3) இதோ கடவுள் வருகிறார்
-
தெலுங்குக் கவிதை
எழுதியவர் : தேனேத்தி
சூரி
ஆங்கிலத்தில் : வெல்சேரு
நாராயண் ராவ்
இதோ கடவுள் வருகிறார்,
வெண்கலத்தில் உயிரற்று,
தெருவெங்கும் சுற்றி,
மரக்குதிரையில் பயணித்தபடி
அவரிடம் கூலியைப்
பற்றிக் கேளுங்கள்,
நண்பர்களே.
நமக்குப் போதுமான
உணவில்லை
என்று அவரிடம் கூறுங்கள்.
கல்லும் கறையும்
என்று
சான்றோர்கள் சொல்வார்கள்.
அது உண்மையா என்று
பார்ப்போம்.
தாழ்பணிந்து கேளுங்கள்,
அவர் கேட்கிறாரா என்று
பாருங்கள்,
அவர் பதில் கூறாவிட்டால் போகட்டும்.
கைகளை உயர்த்துங்கள்
லட்சக்கணக்கில் ஒன்றாக
குரல்களை எழுப்புங்கள்
வானமே நடுங்கட்டும்.
அவரிடம் கூலியைப்
பற்றிக் கேளுங்கள்
நண்பர்களே.
நமக்குப் போதுமான
உணவில்லை
என்று கூறுங்கள்.
தமிழில் : அமுதன்
ஆர்.பி.
4) பிரியாவிடை
- அஸ்ஸாமியக் கவிதை
எழுதியவர் : ஜிபேன் நரா
ஆங்கிலத்தில் : லிரா நியோக்
அவள் விடைபெற்ற நாளில்
எங்கள் தங்கை தாங்கமுடியாத வெற்றிடத்தை தனது இருப்பில் விட்டுச்சென்றாள்.
தனியாகப் பாடுவது அவளுக்குப்பிடிக்கும் என்பதாலே அவளுக்கென்று ஒரு அறை கட்டப்பட்டது.
அவளது பாட்டின் சோக அதிர்வு அந்த அறையெங்கும் விரவிக்கிடக்கிறது - அது எங்களை அவ்வப்போது இப்போதும் காயப்படுத்துகிறது.
தான் காதலித்த இளைஞனோடு எங்களை விட்டு நிரந்தமாகப் பிரிந்தாள் - அதுவே வழக்கம் என்றாலும்
அதை ஏற்பது எளிதன்று.
அவளுக்கு சிமலுப் பூக்கள்* பிடிக்கும்
என்பதாலே அவள் அந்த நதியிடம் பொய் சொன்னதேயில்லை.
அந்த நதியின் கடைமடைக்குப்
பயணித்த நாளே
அவளது துயரம் வளரத்தொடங்கியது.
*சிமலு : பட்டுப்பருத்தி மரம்
தமிழில் : அமுதன் ஆர்.பி.
5) கேட்காதீர்!
கன்னடக்கவிதை:
எழுதியதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும்:
ஹச் எஸ் சிவப்பிரகாஷ்
எரியும் நண்பகல் அமைதிக்குள்
தண்ணீர்க் கொணர்ந்தது யார் என்று என்னைக் கேட்காதீர்
நரகத்தின் எனது சிறைக்குள் எனக்கு வெளிச்சம்
கொணர்ந்தது யார் என்று கேட்காதீர்
சிதை நிரம்பிய மயானத்திற்குக்
குளிர்காற்றைக் கொணர்ந்தது யார்
என்று கேட்காதீர்
கவிதை ஒன்றை சந்தையின் இரைச்சலுக்கும்
ஓட்டத்திற்கும் கொணர்ந்தது யார் என்று கேட்காதீர்
பஞ்சத்தால் சிதைக்கப்பட்ட என்
நிலத்திற்கு வசந்தத்தைக் கொணர்ந்தது
யார் என்று கேட்காதீர்
சிவப்பிரகாஷ் என்று சொல்லாதீர். நானில்லை, அது நீங்கள், நீங்கள் மட்டும் தான்.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
6) நினைவுக்குறிப்பு
- உருதுக் கவிதை
எழுதியவர் முகம்மது அல்வி
ஆங்கிலத்தில் : அனிசுர் ரஹ்மான்
நான் கல்லறையை அடைந்தவுடன்
எனது கைகால்களை நீட்டிக் கிடத்தினேன்
யாரும் என்னை இப்போது தொந்தரவு
செய்யமாட்டார்கள் என்று
எண்ணிக்கொண்டு
இந்த இரண்டடி நிலம் எனக்குத்தான் என்று
மண்ணாய் மாறிக்கொண்டேயிருந்தேன்
காலத்தை மறந்தபடி
ஆனால் விரைவில் என் அமைதி குலைக்கப்பட்டது
யாரோ ஒருவர் என் கல்லறைக்குள்
நுழைந்தார்
இப்போது அவரது நினைவுக் குறிப்பு
எனது கல்லறைச் சின்னத்தில்
எழுதப்படுகிறது.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
7) துணிதல்
டோக்ரி மொழிக் கவிதை
எழுதியவர் : பத்மா சச்தேவ்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : அமண்டா பெல்
எங்கள் குன்றின் வலப்புறமிருக்கும்
கிணற்றில் இருந்து யாரும்
தண்ணீர் குடிப்பதில்லை,
அது தெளிந்த நீருடன்
ததும்பினாலும்;
அந்தப்பக்கம் யாரும்
திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை
அதன் ஆழத்தில் ஒரு கன்றுக்குட்டி
மிதக்கும் பூக்களால் ஏமாற்றப்பட்டு
மூழ்கிப்போனதால்.
அதன் அடிஆழத்தில், பானைகளுடன் வரும் சிறுமிகளுக்காக நிழல்கள் ஏங்கும்.
பகல் வெளிச்சத்தில் முழுமையாய்த்
தம்மைப் பருகச்சொல்லித்
தண்ணீர் என்னை மன்றாடும். இரவில் நான்
அதன் இருட்டில் யாரும் காணாது
குளிப்பேன், அதன் குளுமையை என்
உள்ளங்கையில் கவர்ந்தபடி
என் வாயருகே ஏந்துவேன் -
என் தாகம் காதலைப் போல நிறைவடையாதது.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
8) நெடுஞ்சாலையில் புத்தர்
மலையாளக் கவிதை
எழுதியவர் : கல்பட்டா நாராயணன்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் :
கே. சச்சிதானந்தன்
புத்தர் நேற்று அந்தச் சாலையைக்
கடப்பதைக் கண்டேன்.
மாலை நெரிசலில்
சாலையைக் கடக்க இயலாது
இந்தப் பக்கம்
நீண்ட காலம் காத்திருந்தேன்.
ஐம்பது அறுபது எழுபது ஆண்டு
வாழ்க்கையில்
எப்படி நாம்
ஒன்று ஒன்றரை ஆண்டு காலம்
சாலையைக் கடக்கக்
காத்திருக்கிறோம் என்பதை
நினைத்தபடி.
அவர் சாலையைக் கடந்தார்
மெதுவாக, பயமின்றி.
அவரை நான் தொடரத் தொடங்கையில்
ஒரு வாகனம் பிளிறியபடி
என்னை வேகமாய்க்
கடந்து போனது.
எந்த வாகனமும் அவருக்காக
வேகத்தைக்
குறைக்கவில்லை;
யாருமற்ற, அகலமான, எப்போதும் இருந்த
அந்தக் காட்டுப்பாதையை ஒட்டி
அவர் நடந்து போய்
மறுபக்கத்தை அடைந்தார்.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
9) நான் ஒரு பலி ஆட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்!
- வங்காளக்கவிதை
எழுதியவர் : ஜாய் கோஸ்வாமி
வெட்டு மேடையின் கீழே அந்தக் கீரையை வை
நான் ஒரு பலி ஆட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்
அது தனது முந்தைய தலை சீவலை மறந்திருக்கிறது
ஆனாலும் அதன் கழுத்தில் அந்தக் காயம் ஒரு மாலை போல பதிந்துள்ளது.
ஆங்கிலத்தில் : சம்பூர்ண சாட்டர்ஜி
தமிழில் : அமுதன் ஆர்.பி.
10) பரம்பரை
- மலையாளக்கவிதை
எழுதியவர் : ஆத்தூர் ரவிவெர்மா
ஆங்கிலத்தில் : கே.சச்சிதானந்தம்
கோடுகளையும் சதுரங்களையும் கொண்ட
வெள்ளை அரசின் கொடியை தாத்தா நேசித்தார்;
அவர் கிராம அதிகாரியாக இருந்தார்.
அப்பா ஒரு மூவர்ணக்கொடியை ஏற்றினார்.
அவர் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்.
நான் செங்கொடியை ஏந்துகிறேன்.
என் பேரனின் கைகள்
ஐம்பது நட்சத்திரங்கள் கொண்ட
அமெரிக்கக் கொடியைத் தூக்கிப் பிடிக்கின்றன.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
Thanks to ‘100 More Great Indian
Poems’, edited by Abhay K, Published by Bloomsbury, 2019.