Saturday, October 5, 2013

வரலாறு நம்மை மன்னிக்காது!


பினோசே எனும் ஒரு சர்வாதிகாரி சிலி நாட்டில் ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஆட்சியில் ஜனநாயகம் அடித்து நொறுக்கப்பட்டது. மாற்றுக்கருத்துடையவர்கள் காணாமல் போனார்கள். தேர்தல் நிறுத்தப்பட்டது. பாராளுமன்றம் களைக்கப்பட்டது. ஆனாலும் அங்கு தொழில் வளர்ச்சி இருந்தது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். மத்திய தர வர்க்கத்தினர் மேலும் மகிழ்ச்சியடைந்தனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆனார்கள். பழங்குடியினரும் கருப்பின மக்களும் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்டனர். வன்முறை அதிகரித்தது. ஏற்ற தாழ்வும் வறுமையும் அதிகரித்தது. குடிசைகள் அதிகரித்தன. அடிப்படை வசதிகள் இல்லாமல் நான்கில் மூன்று பகுதி மக்கள் அவதிப்பட்டனர். ஆனாலும் அமெரிக்காவுக்கு பினோசேயை பிடித்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு அவரைப் பிடித்தது. சோசலிஸ்ட் ஆட்சி வராமல் இருந்தால் சரி அவர்களுக்கு. நாட்டுக்குள் யாரும் அவர் ஆட்சியில் நடந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்க முடியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் தான் கத்தினார்கள். போராடினார்கள். செத்து மடிந்தார்கள். காணாமல் போனார்கள். மிகுந்த சிரமப்பட்டுத் தான் பினோசேயை ஆட்சியில் இருந்து நீக்க முடிந்தது சிலி நாட்டு மக்களால். அதன் பிறகும் அவரைத் தண்டிக்க முடியவில்லை. அவர் செய்த அநியாயங்களுக்கு அவரை யாருமே ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இறந்தும் போனார். சிலியின் வரலாற்றின் அவமானச்சின்னம் பினோசே.



மோடி ஒரு ஆர் எஸ் எஸ் காரர். அவர்களுக்கென்று ஒரு இந்துத்துவ அரசியல் உண்டு. காந்தியும் நேருவும் அம்பேத்கரும் உருவாக்கிய, உருவாக்க முயன்ற இந்தியாவுக்கு எதிரான கருத்து உடையவர்கள் ஆர். எஸ். எஸ். காரர்கள். ஒரு இந்து, இந்தி நாட்டை உருவாக்குவதே அவர்களின் கனவு. அமெரிக்காவுக்கும் முதலாளிகளுக்கும் பிடித்த மாதிரியான ஒரு இந்து நாட்டை மோடி உருவாக்கினால் இங்கு என்ன நடந்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை. மேலும் மேலும் மக்களிடம் இருந்து வளங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படும். மக்களது உரிமைகள் முடக்கப்படும். முதலாளிகள் ஒன்றும் புனிதர்கள் இல்லை. அவர்கள் மேலும் ரத்தம் வேண்டுவார்கள். அப்போதும் மோடி அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரியான முதலாளிகளுக்குப் பிடித்தமாதிரியான இயற்கைக்கு எதிராக, ஏழைகளுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிரான, ஆதிவாசிகளுக்கு எதிரான, தமிழ் மொழிக்கு எதிரான, பிற இந்திய மொழிகளுக்கு எதிரான, பிற மதங்களுக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆட்சியை மோடி உருவாக்குவார். அதனால் தான் நாம் அவரை எதிர்க்க வேண்டும்.

இப்போதே ராணுவ அதிகாரிகள் பலர் மோடிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். பாகிஸ்தான் மீது போர் என்று மோடி போனால் எல்லா ஊடகங்களும் அவர் பின்னால் ஓடுவார்கள். அப்புறம் ஜனநாயகம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். தரகர்களுக்கு நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது!

மேலும் மோடி ஒரு சர்வாதிகாரி என்பதை குஜராத்தில் வேலை செய்யும் எந்தக்கட்சிக்காரரிடமும் எந்த களப்பணியாளரிடமும் எந்த கலைஞரிடமும் பத்திரிக்கையாளரிடமும் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பாஜகவுக்குள்ளேயே இரண்டாம் நிலை தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு ஜனநாயகம் அங்கே பரிதாபமாக இருக்கிறது.




உங்களுக்கு சர்வாதிகாரி தான் வேண்டும் என்றால் மோடி சரியானவரே! ஆனால் சர்வாதிகாரி ஆட்சி என்றால் என்னவென்று தெரியாமல் அப்பாவித்தனமாக சர்வாதிகாரி தான் வேண்டும் என்று பேசுவது சரியா என்பதும் கேள்வி!

ஜெர்மனியில் ஹிட்லர் என்று ஒரு சர்வாதிகாரி இருந்தார். அவரும் அவரது நண்பர் இத்தாலியின் முசோலினியும் நம்பிய பாசிச ஆட்சி நம் முன்னே நடந்தேறியிருக்கிறது. அறிவியலும், பணமும், முதலாளிகளும், தொழிற்சாலையும், ராணுவமும், சுயநலமான மத்திய தரவர்க்கமும், ஜால்ரா போடும் ஊடகங்களும் ஒரு சர்வாதிகாரிக்குத் துணை போனால் என்ன நிகழும் என்பதற்கு ஹிட்லர் ஒரு நல்ல உதாரணம். அதை மறந்து விடக்கூடாது. வரலாறு நம்மை மன்னிக்காது.

Wednesday, September 18, 2013

மோடி வரமாட்டார்! ஏன் பதட்டம்?

மோடி எனும் ஒரு ஆபத்து!


சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். ஏன் இவ்வளவு பதட்டம்? மோடி வரமாட்டார். அவருக்கு அத்தனை சீட்டுக்கள் கிடைக்காது என்கின்றனர்.

அவர் வருவாரா வரமாட்டாரா என்பதல்ல பிரச்சனை. நம்மிடம் பரவி வரும் பாசிச சிந்தனையே பிரச்சனை. இந்திய ஊடகங்களை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. எப்படி ஒரு சதியின் கூட்டுகாரர்களாக இந்திய ஊடகம் மாறி விட்டதே என்பது நடுக்கத்தைத் தருகிறது.

நாம் யாரைக்கொண்டாடுகிறோம் என்று தெரியாமல் வெறும் பொய்யை மட்டுமே நம்பி மோடி பின்னால் போகும் அன்பர்களை நினைத்தால் பதட்டமாகவே இருக்கிறது.

மோடிக்கு எதிராகப் பிரிந்து கிடக்கிற கட்சிகளைப் பார்த்தால் மேலும் பதட்டம்.

வைகோ பாஜவை ஆதரிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்று தெரியவில்லை. உண்மையெனில் அவர் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு சம்பாதித்த நன்மதிப்பை குழி தோண்டிப் புதைக்கவேண்டியது தான்.

இப்போது நடக்கும் முசாபர் நகர் கலவரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எல்லோரும் இணைந்து நடத்திய ஒரு மதவெறியாட்டத்தில் பாஜக சாதுர்யமாக தன் ஆதரவைப் பெருக்கிக்கொள்வதைப் பாருங்கள். முழுவீச்சில் நிகழும் சாணக்கிய ஆட்டம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அழிவைத் தந்துவிடுமோ என்று பதட்டமாக இருக்கிறது.

பிறக்கட்சிக்காரர்கள் தங்களது நேர்மையின்மை, திறமையின்மை ஆகிய பல இன்மைகளால் தமக்கு எதிராக தாமே போட்டு வைத்துள்ள கோல்கள் இன்று பாஜகவுக்கு பயன் தரும் நிலையை ஏற்படுத்தியுள்ளன.

காந்தியும் அம்பேத்கரும் நேரும் பணக்காரர்களின் இந்தியாவை உருவாக்க வில்லை. உயர் சாதிக்காரர்களின் இந்தியாவை உருவாக்க வில்லை. ஒடுக்கப்பட்டவர்க்கு பல ஆயுதங்களைக் கொடுத்துச்சென்றிருக்கின்றனர். ஏழை மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் வாழக்கூடிய இந்தியாவையே உருவாக்கினர். அவற்றையெல்லாம இழந்து இந்தியா சுதந்தரத்திற்கு முந்திய பார்ப்பனிய இந்தியாவாக வடிவம் கொள்ளுமோ என்ற பதட்டம்.

சுதந்தரத்திற்குப் பின்பு ஒடுக்கப்பட்டவருக்கான அரசியலுக்கும் ஆதிக்க உயர்குடி மக்களின் அரசியலுக்குமான போரில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்தன.

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி, தமிழகத்தில் திராவிடக் கட்சிகள், வி.பி.சிங் கொண்டு வந்த மண்டல் கமிஷன், காங்கிரஸின் வீழ்ச்சி, பிராந்தியக்கட்சிகளின் வளர்ச்சி, மாயாவதி முதல்வரானது இப்படி பல ஏற்றங்கள் உண்டேனினும் பார்ப்பனிய சக்திகள் காங்கிரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அவர்களுக்கு வசதியான விஷயங்களை உருவாக்கியபடியே இருந்தனர்.

இந்தக் கொடுக்கல் வாங்கல் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு இந்துத்துவ, கார்பரேட் நலன் காக்கும் சர்வாதிகாரியை இந்தியர்கள் ஆதரிப்பது போலவும் அவருக்காக எல்லோரும் ஏங்குவது போலவும் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் தினமணி, தினமலர், தினத்தந்தி ஆகிய மூன்று பெரிய தமிழ் பத்திரிக்கைகள் மோடி துதி பாடுவது மிரட்சியைத் தருகிறது.

தி இந்து என்ன செய்யப் போகிறது என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

திமுக மோடியை ஆதரிக்காது என்று சொல்ல முடியாது. யாரும் மோடியை ஆதரிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா பிரதமராகும் எண்ணம் கொண்டிருந்தால் அவர் மோடியை ஆதரிக்க மாட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் தவிர எல்லோரும் மோடியின் மகுடிக்கு பலி ஆகலாம்.

ஒத்த கருத்துடையவர் இணைந்து போராட வேண்டிய காலம் இது. இதைவிட இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி வருமோ எனத் தெரியவில்லை.

Sunday, July 7, 2013

விடுகதை: என் முதல் புனைவுப்படம்

விடுகதை

இயக்கம்: அமுதன் இராமலிங்கம் புஷ்பம்


காட்சி 01
பகல்; கடற்கரை
கடற்கரையில் அ பெண்களை வெறித்தபடி!

அ வுக்கு வயது 40. தனிக்கட்டை. 

அ கடற்கரையில் பெண்களை வெறித்தபடி இருக்கிறான். அவனுக்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு வந்திருப்பது மட்டுமின்றி, அழகாக இருப்பது மட்டுமின்றி துணையோடு வந்திருப்பதே தொந்தரவாக இருக்கிறது. இப்படி பெண்கள் அவனுக்கு துரோகம் செய்துவிட்டு ஆளாளுக்கு ஒரு துணையுடன் கடற்கரைக்கு வந்தால் அவன் என்ன செய்வது? என்று தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்.

துணையோடு வந்தது மட்டுமின்றி சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பது அவனுக்கு மேலும் நெஞ்சுவலியைக்கொடுத்தது.

ஆணும் பெண்ணுமாய் பல ஜோடிகள் காதல் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றனர். சிலர் கொஞ்சம் இடைவெளி விட்டு பட்டும் படாமல் பார்வையாலேயே காதலிக்கின்றனர். சிலர் விரல்களால் உரசியபடி இருக்கின்றனர். சிலர் நடந்தபடி தெரிந்தும் தெரியாமலும் தோள் மீது மெதுவாய் பதமாய் இடித்தபடி காதலிக்கின்றனர்.

சிலர் படகின் பின்புறம் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து வாயோடு வாய் வைத்தபடி இருக்கின்றனர். சிலர் ஒருவருக்கொருவர் உடல்களில் கைகளை பரவவிட்டு காதலிக்கின்றனர். முதல் முறையாக இடுப்பைத்தொடும் காதலன், முதல் முறையாக காலைத் தடவும் காதலி, முதல்முறையாக முலையைத் தொடும் காதலன், வாய் வைத்து விளையாடும் காதலன், அவனுக்கு கைகளால் சுகம் கொடுக்கும் காதலிகள், கொஞ்சம் கூடுதலாக வாய் வைக்கும் குமரிகள் என்று காமமும் காதலும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கடற்கரையில்.

சிலர் வெட்டவெயிலில் சூரியன் நடுமண்டையில் இடிபோல் இறங்கிக்கொண்டிருக்கும் போதும் அதையும் பொருட்படுத்தாது, குண்டி கொதிக்கும் சூட்டில் கடற்கரை மணலில் அமர்ந்து ஒருவரை ஒருவர் விரசத்துடன் அருகருமே நெருக்கமாய் அமர்ந்து கொடி போல் பரவி நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றனர். 

எங்களுக்கு காதலிக்க இடம் கொடுக்காத நாசமாய்ப்போன சமுதாயமே எங்களின் தவிப்பைப் பார் என்று சுற்றி வேடிக்கை பார்ப்பவரை குற்ற உணர்ச்சியால் வதைத்தபடி இருக்கின்றனர்.

அ எல்லோரையும் ஏக்கத்துடன் பார்த்தபடி அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறான். 

திடீரென்று ஆவேசம் வந்தது போல் காதலில் ஈடுபட்டிருப்போர் அருகில் நடக்கத் தொடங்குகிறான் அ. குறுக்கும் நெடுக்குமாக இடதும் வலதுமாக வேகமாகவும் மெதுவாகவும் தானே பேசிக்கொண்டும் ஆழமான மெளனத்துடனும் காதலர்களின் அருகே ஒரு மின்னல் போல வந்து போகிறான்.

காதல் வேட்டையில் மும்மரமாக மூழ்கியிருப்போர் இப்படி ஒருவன் சடாரென்று அருகில் வந்து போவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். தங்களைச் சுதாரித்துக்கொண்டு சும்மா பேசிக்கொண்டிருப்பது போல பாவனை செய்கின்றனர். ஏதோ கீழே விழுந்த பொருளைத் தேடுவது போலவும், மற்றவரின் கண்களில்  விழுந்த தூசியை எடுப்பது போலவும், அடிப்பட்ட காலில் காயத்தைப் பார்ப்பது போலவும், வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், காதலைத் தவிர பிற காரியங்களில் ஈடுபட்டிருப்பது போலவும் நடிக்கின்றனர்.

காதலர்களின் இந்தத் தடுமாற்றம் அ வுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னை விட்டு விட்டு எவனுடனோ இப்படி சுகமாக இருக்கிறாயே என்று அடையாளம் தெரியாத காதலியுடன் கோபித்தபடி நடந்து கொண்டு இருக்கிறான். எனக்கு என்ன நீ மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? நீ மகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால் என்னுடன் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் பேசியபடி அலைகிறான்.

ஆனால் அதற்குள் காதலர்களில் சிலருக்கு அவனது திட்டம் பிடிபடுகிறது. இவன் வேண்டுமென்றே காதல் ஆட்டத்தைக் குலைப்பதற்காகவே வரும் நச்சு சக்தி என்பதை உணர்ந்துகொண்டு அ வைப் பார்த்து சத்தம் போடுகின்றனர் சிலர். அடிக்க வருகின்றனர் சிலர். மன்ணை அவன் மீது தூற்றுகின்றனர். ஏற்கனவே காதலே இல்லாமல் கல்யாணமே இல்லாமல் சபிக்கப்பட்ட தன் வாழ்க்கை மீது இன்னும் சிலர் சாபம் இடுவதா என்று துடித்துப்போகிறான் அ.

அ வெட்கப்படுகிறான். இப்படி கீழான நிலைக்கு பொறாமை ஒரு தோல் வியாதி போல தன் உடலெங்கும் பரவி தன் கண்களை மறைத்துவிட்டதே என்று புலம்புகிறான்.

கழிவிரக்கம் தன் குடல் வரை நிரம்பி வழிகிறது.  ஒரு ஓரத்தில் போய் அமர்கிறான்.

அ வின் விரல்கள் பூலோகம் என்ற பெயரை அவன் அறியாமல் மணலில் எழுதுகின்றன.

காட்சி நிறைவு

விடுகதை

 தயாரிப்பு & இயக்கம்: அமுதன் ஆர்.பி.

ஒளிப்பதிவு: சன்னி ஜோசப்

படத்தொகுப்பு: கோபி மோகன்

இசை: சித்தார்த்

திரைக்கதை: அமுதன் ஆர்.பி.

வசனம்: அனிருதன் மகாதேவன், அமுதன் ஆர்.பி.

தயாரிப்பு நிர்வாகம்: சார்லி

Tuesday, May 28, 2013

வாங்க, எழுத்தாளரைச் சந்திக்கலாம்!

தமிழ் எழுத்தாளர்களை சேதாரம் இல்லாமல் சந்திப்பது எப்படி?

1) ஜெயா முன்பு நிற்பது போல வாயை மூடிக்கொண்டு நிற்கலாம்.
2) வாயை முடிந்தால் வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டுப் போகலாம்.
3) காதை யானைக்காது போல அகலப்படுத்திக்கொண்டு எழுத்தாளர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தாமல் சிதறாமல் உள் இழுத்துக்கொள்ளலாம்.
4) ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களைத் தனியாக சந்திப்பதைத் தவிர்க்கலாம். அவர்கள் சேர்ந்து திட்ட ஆரம்பித்தால் நாடு தாங்காது.
5) ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றினால் எழுத்தாளரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுப் பேசலாம்.
6) எழுத்தாளர்கள் பற்றி நன்கு படித்து மனப்பாடம் செய்து விட்டுப் போகலாம். இல்லையென்றால் அன்னாரைத் தெரியுமா? இன்னாரைப் படித்திருக்கிறாயா? முட்டாளே என்று வசவு வாங்கவேண்டியிருக்கும்.
7) உங்களை யாராவது திட்டினால் தோஷம் அடங்கும் என்று வெள்ளியங்கிரி வெங்கடசாமி சொல்லியிருந்தால் எழுத்தாளரிடம் போய் உங்கள் பெயர், வயது, வயதுக்கு வந்த நாள் ஆகிய தகவல்களைச் சொன்னால் கட்டாயம் திட்டு விழும். தோஷம் அடங்கும்.
8) எழுத்தாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், சரக்கு, இன்ன பிற வசதிகளுக்கு ஸ்பான்சர் செய்தாலோ, ஸ்பான்சர் பிடித்துக்கொடுத்தாலோ திட்டு குறைய வாய்ப்பு இருக்கிறது.
9) உங்களுக்கு ஷங்கரைத் தெரியும், மணிரத்னத்தைத் தெரியும் என்று சொல்லிப்பாருங்கள் (அவர்களுக்கு உங்களைத் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை). பேச்சு வார்த்தை வசவில்லாமல் நடக்கலாம்.
10) எழுத்தாளரைச் சந்தித்துவிட்டு அவர் திட்டிய திட்டுக்களை நினைத்து தனியாக உட்கார்ந்தோ அல்லது கூட்டமாகவோ குமுறி குமுறி அழலாம்.
11) எழுத்தாளரை விட வயதில் மூத்தவராக இருந்தால் அவரைச் சந்திப்பதைத் தவிர்க்கவும். வயது மூத்தவர்களைத் திட்டுவது என்பது அவர்களுக்குப் பிடிக்கும். எத்து கூட விழும் என்று கேள்வி.
12) பத்து அடி தூரத்தில் நின்று பேசிவிட்டு ஓடி விட வேண்டும். இல்லையென்றால் தொலைந்தீர்கள்!
13) இந்து மதம் வாழ்க என்று சொல்லிவிடுங்கள். எழுத்தாளர்கள் பஜனை பாட ஆரம்பித்துவிடுவர்.
14) இட ஒதுக்கீடு ஒழிக என்று சொல்லுங்கள். எழுத்தாளர்கள் உங்களுக்கு முத்தம் கொடுக்கலாம்.
15) தமிழனுக்கு அறிவு இல்லை என்று சொல்லுங்கள். இல்லை. அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. அதை அவரே சொல்வார்.

என் அறிவுக்குப் பட்டது இப்போதைக்கு இவ்வளவு தான்.

நண்பர்கள் மேலும் யோசனைகள் கூறலாம்.

Tuesday, May 7, 2013

"பீ" ஆவணப்படம் பற்றி "பேசாமொழி" இணைய இதழுக்காக எனது பேட்டி

சாதியடுக்கை விசாரணைக்குட்படுத்தும்

 பீ, மயானக்குறிப்புகள் & செருப்பு 

இயக்கம்: அமுதன் ஆர்.பி.



1.                   எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களுக்கு அட்ராக்டிவ்வான ஒரு தலைப்பை வைக்க விரும்புவர். இந்த படத்திற்கு நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு ‘பீ’. ஏன்?

பீ எனும் பெயர் தான் அந்தப்படத்திற்குப் பொருத்தமானது. அதை விட வேறு எதுவும் அட்ராக்டிவாகவும் இருக்காது. மேலும் அந்தப்படத்தின் ட்ரீட்மென்ட்டே முகத்தில் அறைகிற பாணி தான். பெயரும் முகத்தில் அறைகிற மாதிரி இருக்கவேண்டும். மேலும் எந்தவிதமான சமரசமும் இல்லாத பெயரும் பீ தான். எனக்குத் தெரிந்து பலர் அதை உச்சரிக்கத் தயங்கினர். அதுவே பாதி வெற்றி தான். பலருக்கு இந்தப்படமே ஒரு பரீட்சை தான். பெயரை எப்படி உச்சரிப்பது, அதைப்பற்றி எப்படிக் குறிப்பிடுவது, இந்தப்படத்தை எப்படிப் பார்ப்பது, திரையிடுவது, விவாதிப்பது எல்லாமே நமது எல்லைகளை சோதித்துப் பார்ப்பது தான்.

2.                   நம் சமூகத்தில் எல்லா வார்த்தைகளையும் நாம் நம் அனுபவத்தின், நம்முன் எழுப்பப்பட்டிருக்கும் பிம்பங்களின் ஊடாகத்தான் பார்க்கிறோம். உதாரணம் சேரி, அக்ரஹாரம். இந்நிலையில் பீ என்னும் தலைப்பு பார்வையாளர்கள் மனத்தில் ஒரு நெருடலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

பீ எனும் வார்த்தை அந்தத் தொழிலைப் போல இழிவான வார்த்தையாகக் கருதப்படுகிறது. அதனோடு அந்த வேலை பார்ப்பவர்களையும் இணைத்தும் பார்க்கின்றனர். ஒருவித அருவருப்பு இருக்கிறது மக்கள் மத்தியில். அவ்வளவு அருவருப்பு உச்சரிக்கும் போதே வந்தால், அதை அன்றாடம் கையாளும் மக்களின் நிலை என்ன என்பது தான் எனது கேள்வி. மலம் அள்ளும் வேலை செய்பவர்களுக்கு ஆதரவாக, அதை கண்டும் காணாதும் இருப்பவருக்கு எதிராக எடுத்த நிலைப்பாடே இந்தப்பெயர். ஆங்கிலத்தில் ஷிட் எனும் பெயர் தான் வைத்திருக்கிறேன். அதுவும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தீண்டத்தகாத சொல். ஒருவித எள்ளலுடன் தான் அலட்சியத்துடன் தான் படத்தின் பெயரை உச்சரிப்பர். ஆனால் அது உள்ளே முள்ளைப்போல தைக்கும் என்பது எனக்குத் தெரியும்.



3.                   பீ என்று சொன்னாலே முகம் சுழிக்கும் ஒரு புரிதல் நிறைந்த சமூகத்தில் அதை ஒரு ஆவணப்படத்தின் தலைப்பாக வைத்தால், அதுவே பார்வையாளர்களை படத்திலிருந்து தூரம் கட்டி விடுமா?

பார்வையாளனை சிரமத்திற்கும் சங்கடத்திற்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்க வேண்டும் என்பது தான் படத்தின் நோக்கமே. ஒரு படத்தின் தலைப்பு கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது சரி தான். ஆனால் இது மாதிரியான படத்தில் பார்வையாளனோடு யுத்தம் செய்யவேண்டும் என்று வரும் போது தலைப்பு மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பது சரியாகாது. என்னப்பா சொல்ற என்கிற விதத்தில் சவால் விடும் படத்திற்கு தலைப்பும் சவால் விட வேண்டும்.

4.                   இந்த படத்தின் திரையிடல்களில், பீ என்னும் தலைப்பை உச்சரிக்கையில், ஏற்பாட்டாளர்களிடமோ, திரையிடல் ஒருங்கிணைப்பாளர்களிடமோ, பார்வையாளர்களிடமோ ஏதேனும் நெளிவைக் காண இயன்றதா?

ஆரம்பத்தில் இருந்தது உண்மை தான். ஆனால் பிறகு இந்தப்படத்தைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தபின் அதைத் திரையிடவேண்டும் என்கிற எண்ணமே நீங்கள் சொன்ன ஆட்களுக்கு வந்தது என்று நினைக்கிறேன். அவர்களே விரும்பித் தான் படத்தை திரையிட்டனர். ஆனால் நான் குறிப்பிட்ட மாதிரி ஒரு நெருக்கடி இருந்ததை நான் உணரமுடிந்தது. இது ஒரு சோதனை தான். சாதி விளையாட்டில் நீ எங்கிருக்கிறாய் எனும் ஒரு சோதனை தான். இங்கு நடப்பது ஒரு சாதி விளையாட்டு தானே! சாதியினால் பலர் செளகரியங்களை அனுபவித்துக்கொண்டு வரும் விளையாட்டு. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோருக்கும் சாதி ஒரு விதமான செளகரியத்தைக் கொடுத்திருக்கிறது. அதை விடுப்பது எல்லோருக்கும் எளிதல்ல. தலித் மக்களுக்கு வேண்டுமானால் சாதி சுமையாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு? சாதி ஒரு ஏணி தானே? அப்புறம் எப்படி பீ எனும் வார்த்தையை எளிதாக உச்சரிக்க முடியும்?  அதனால் என்னையும் ஒரு தீண்டத்தகாதவனாகத் தான் பார்த்தனர். என்னையும் என்று குறிப்பிடுவது இயக்குநர் அமுதனை. பீ படம் எடுத்த அமுதன் என்றே நான் இன்னும் குறிப்பிடப்படுகிறேன்.

இந்தியாவில் பெருவாரியான ஆவணப்பட இயக்குநர்கள் உயர்சாதிக்காரர்களே. அதனால் அவர்கள் எடுக்கும் ஆவணப்படங்களும் சாதிய மனோபாவம் கொண்டதாக அல்லது சாதியைப் பற்றி மெளனம் சாதிப்பதாகவே இருக்கின்றன. அதனால் பீ மாதிரியான தலைப்பில் படம் எடுத்தால் அதை ஒரு வட்டத்திற்குள் அடைக்கும் முயற்சி நடந்தது. என்னையும் அடைக்கும் முயற்சி நடந்தது. இன்னும் நடக்கிறது. சாதி பற்றி படங்களை தொடர்ந்து எடுத்ததால் என்னை விலக்கி வைக்கும் நிகழ்வுகளும் நடந்தன.

ஆனாலும் எல்லோருக்கும் நெருக்கடி கொடுக்கவேண்டும், மலம் அள்ளும் வேலை பற்றி விவாதம் எழுப்பவேண்டும் என்பது தான் நோக்கம் என்பதால் இந்த விஷயங்களை நான் எதிர்பார்த்தது தான்.



5.                   ஆவணப்படங்கள் என்பது சமூகத்தின் கண்ணாடி. ஆனால் அதுவும் கூட, ஒரு அறிவுசார், இன்டலெக்ட் சர்க்கிளாக, ஒரு கார்ப்பரேட் வியூவிங் போல் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த தலைப்பினால் உங்களுக்கு அந்த வட்டங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பீ எனும் ஆவணப்படத்தை அதன் வடிவத்திற்காகவும், அது எடுக்கப்பட்ட விதத்திற்காகவும் பார்ப்பவர்கள் உண்டு. திரைப்பட விழாவில் வடிவத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பர். பீ எனும் ஆவணப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை அவர் வேலை செய்யும் போது தொடர்ந்து நகர்ந்தபடி எடுத்த விதம், அதில் நான் கேட்ட கேள்விகள், அதற்கு மாரியம்மாள் சொன்ன பதில்கள், அவரது ஆளுமை, அதற்கு கேமராவும் எடிடிங்கும் கொடுத்த முக்கியத்துவம், அதில் இருக்கும் அரசியல் ஆகியன ஒரு இன்டெலக்சுவல் வட்டத்தில் நல்ல கவனத்திற்கு உள்ளாகின. உண்மையில் இந்தப்படத்தை முதலில் பாராட்டியது செளதாமினி எனும் சென்னை நகரத்தில் வாழும் ஒரு உயர்சாதி, திரைப்படக்கல்லூரி, திரைப்படவிழாக்கள் பின்னணியில் வந்த இயக்குநர் தான். நமது ஆக்டிவிஸ்ட், புரட்சிக்கார நண்பர்கள் யாருக்கும் இந்தப்படத்தை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. இன்னும் பலருக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம்.

6.                   இந்த படத்தை எடுக்க உங்களை தூண்டியது எது?

குஜராத்தைச் சேர்ந்த எனது நண்பர், ஸ்டாலின் எனும் ஆவணப்பட இயக்குநர் லெஸ்ஸர் ஹ்யூமன்ஸ் எனும் குஜராத் மாநிலத்தில் நிலவிய, இன்னும் நிலவுகிற கையால் மலம் அள்ளும் வேலை பற்றி ஒரு முழு நீள ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அதை தமிழாக்கம் செய்திருந்தார். ப்ரீதம் சக்ரவர்த்தி அவர்கள் தான் மொழிபெயர்ப்பு செய்தார். ஸ்டாலின் அந்தப் படத்தின் தமிழ் பிரதியை தமிழ் நாட்டில் திரையிட வேண்டும் என்று விரும்பினார். மதுரைக்கு வந்தார். அவருடன் நான் ஒரு சுற்றுப்பயணம் போனேன். நிறைய இடங்களில் திரையிட்டோம். நல்ல விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் பல இடங்களில் ஏன் குஜராத்தைப் பற்றி படம் காட்டுகிறீர்கள்? தமிழ்நாட்டில் இது நடக்கவில்லையா என்று பலர் கேட்டனர். அந்தக் கேள்விகள் தான் என்னை பீ படம் எடுக்கத்தூண்டின.

மேலும் 90களின் பின்பகுதியில் தலித் இலக்கியமும் தலித் அரசியலும் தலித் எழுச்சியும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நேரம். எல்லா சுரணை உள்ளவர்களையும் அந்த அலை பாதித்தது போல என்னையும் அது தாக்கியது.  எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. நான் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். அந்தசாதி எனக்கு பல வசதி வாய்ப்புகளை நான் கேட்காமலேயே தருகிறது. சாதி தரும் சொகுசுகளை அனுபவிக்கும் நான் சாதி இழைக்கும் அநீதிகளை எதிர்க்க வேண்டாமா? எனக்குத் தெரிந்தது ஆவணப்படம் எடுப்பது. எனக்குத் தொழில் ஆவணப்படம் எடுப்பது. வேறு எதுவும் தெரியாது. அதன் மூலம் சாதி பற்றிய, சாதிக்கு எதிரான விவாதத்தை உண்டாக்க நினைத்தேன். பீ தான் சாதிக்கு எதிரான போராட்டத்திற்கு நான் அளித்த சிறு பங்கு. உண்மையில் இந்தியாவில் சாதி பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் படங்கள் உள்ளன. இன்னும் பல படங்கள் வரவேண்டும். என்னால் முடிந்தது நான்கு படங்கள் எடுத்திருக்கிறேன். அவற்றைத் தொடர்ந்து திரையிட்டும் வருகிறேன்.



7.                   ஆவணப்படங்களில் அழகியல் சேர்க்கும் காலத்தில் பீ என்ற இப்படத்தில் அதை உடைக்கும் விதமாக செயல்பட்டிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்திலும் இதற்கேற்ற அழகியல் உள்ளது. அதைக் குறித்து...

பீ படத்தில் நான் பயன்படுத்தியிருக்கும் சினிமா வகைமுறையை சினிமா வெரிடே எனும் வகையில் சேர்க்கலாம். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சினிமா வகையான டிரைக்ட் சினிமா, மற்றும் தென் அமெரிக்க சினிமாவின் கொரில்லா சினிமா ஆகிய சினிமா பாணிகளின் தொடர்ச்சியாக பீ படத்தை சேர்க்கலாம். இதற்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவை மண்ணிலிருந்து உருவானவை. நான் பார்த்து சினிமா படித்த இயக்குநர்களான பேட்ரிசியோ குஸ்மான், டென்னிஸ் ஓ ரூர்க், ஆனந்த் பட்வர்த்தன் ஆகியோர் இந்தப் பாணிகளை தங்களுக்கு ஏற்ற வகையில் உள்வாங்கியிருக்கின்றனர். அதை அவர்களின் படங்களில் பார்க்கலாம்.

ஒருவர் தாம் தேர்ந்தெடுக்கும் வகைமுறை, அழகியல் ஆகியன அவரது தனிப்பட்ட ஆளுமை சார்ந்தது மட்டுமல்லாது, அவர் சினிமா எடுக்கும் சூழல், அவர் எடுத்திருக்கும் கதைக்களம், அவர் அதை எங்கு பயன்படுத்துவார் ஆகியன சார்ந்தும் இருக்கின்றன. ஏனெனில் நீங்கள் படம் எடுத்தால் யார் பார்ப்பது என்பது முதல் கேள்வி? இப்படி ஒரு படம் எடுத்தால் யார் திரையிடுவார்கள்? அதற்கு என்ன செலவு? யார் தருவார்? அதை எப்படி உருவாக்குவது? என பல கேள்விகள் இருக்கின்றன.

நான் கம்யூனிஸ்ட் பின்னணியில் இருந்து வந்தவன். என் அப்பா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மேலூர் பகுதியில் அதிகம் வேலை செய்தவர். களப்பணி என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.

மார்க்ஸ், ரவிக்குமார், வேல்சாமி ஆகியோர் நடத்திய நிறப்பிரிகை பத்திரிக்கை, அவர்கள் நடத்திய கூட்டங்கள், மதுரை படிப்பு வட்டத்து நண்பர்களான சுந்தர், பாபு, லோகு, சுபகுணராஜன் ஆகியோரது நட்பு, மதுரையில் நண்பர்கள் நடத்திய கருத்தரங்குகள், திரையிடல்கள், அதில் நிகழ்ந்த விவாதங்கள், யதார்த்த திரைப்பட இயக்கத்தில் நண்பர் ராஜன் திரையிட்ட படங்கள், அங்கு இருந்த அறிவுச்சூழல் ஆகியன என்னை வெகுவாகப் பாதித்தன.

கலை கலைக்கானது மற்றும் கலை ஒரு போர்க்கருவி ஆகிய இரண்டு நிலப்பாடுகளுக்கிடையே ஒரு மையப்பகுதி எனக்கு பிடித்திருந்தது. மதுரையில் கேப்ரியெல் டீட்ரிச் மற்றும் பாஸ் விலங்கா ஆகிய மார்க்சிய சிந்தனையாளர்களுடான நட்பும் அவர்கள் நூலகத்தில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நான் படித்த புத்தகங்கள் எல்லாமே என்னை செதுக்கியவை.

பின்னாட்களில் நான் மேதா பாட்கர் அவர்களுடன் நர்மதா அணைத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆகவே நான் முதலில் ஒரு களப்பணியாளர். சினிமா எனக்கு ஒரு கருவி.

இந்தப்பின்னணி தான் என் அழகியலைத் தீர்மானித்தது. எதிர் அரசியலுக்கான சினிமா எனது அழகியல்.



8.                   இந்த படத்தின் வடிவத்தை, follow up வடிவத்தை எப்போது தீர்மானித்தீர்கள்?

துப்புரவுப்பணி பற்றி நான் ஒரு ஆவணப்படம் எடுக்க முனைந்த போது ஸ்டாலினைப் போல நானும் ஒரு முழுநீள ஆவணப்படம் தான் எடுக்க நினைத்தேன். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 நாட்கள் படம் பிடித்திருப்பேன். 50 கேசட்டுகளுக்கு மேல் சுட்டுத் தள்ளியிருப்பேன். அப்போது தான் இந்தப்படத்தின் கதாநாயகி மாரியம்மாளை சந்தித்தேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் படம் பிடித்தேன். எனக்கு இன்ட்யூசன்படி படம் எடுக்கவே பிடிக்கும். அதுதான் ஆவணப்படத்திற்கு நல்லது என்பது எனது கருத்து. ஆவணப்படம் கொடுக்கும் அனைத்து சாத்தியங்களையும் நீங்கள் பயன்படுத்தவேண்டுமெனில் கடைசி நிமிடம் வரை காத்திருந்து முடிவு எடுப்பது நல்லது. திறந்த மனதோடு, நடக்கிற விஷயங்களை ஒரு தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றின் போக்கில் போய் பதிவு செய்தால் தான் ஆவணப்படம் உயிர் பெறும். அதில் பல வெளிச்சங்கள் நிறைந்திருக்கும். அதில் பல சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். இல்லையென்றால் உங்கள் மொழி தட்டையாகிவிடும். அதில் சுவாசம் இருக்காது. இடைவெளி இருக்காது. உயிர் இருக்காது.

உங்கள் அரசியல், அழகியல் சார்ந்து நீங்கள் களத்தில் எடுக்கும் சில முடிவுகள் தான் ஆவணப்படம். ஆனால் அந்த முடிவுகளை கடைசி நிமிடம் வரை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்து அந்தச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வதே என் ஸ்டைல்.

மாரியம்மாளை முந்திய நாள் காலையில் 8 மணிக்குப் பார்த்தேன். அவர் வேலை செய்யும் விதம் பற்றி கவனித்தேன். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேல் பல கழிப்பறைகளை, பல தொழிலாளர்களை, பல துப்புரவுப் பணியை நான் படம் பிடித்திருந்ததால் அந்த அனுபவம் எனக்குள் பல படிமங்களாக பதிந்தபடியே இருந்தன. அந்த தெருவின் நீளமும் அவரது வேகமும் பேச்சும் எனக்குள் பதிந்தன. அதற்குள் வேலையை முடித்துவிட்டார். வேறோரு தெருவில் வேறொரு தொழிலாளி எங்களுக்காகக் காத்திருந்தார். மறுநாள் காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

மறுநாள் காலையில் 5:30 மணிக்கே போய்விட்டேன். மாரியம்மாள் எனக்கு முன்பே வந்துவிட்டார். விடிந்தும் விடியாமலும் ஒளி நன்றாக இருந்தது. வேலையை தொடங்கிவிட்டார். அவர் பின்னாடியே நான் ஓடினேன். அன்று மாரியம்மாள் பற்றி நான் எடுத்தது வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் மொத்த ஃபுட்டேஜ் 50 மணி நேரம். பல கழிப்பறைகள், பல சந்துகள், பல குப்பை மேடுகள், பல கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பல நிலைகளில் படம் எடுத்திருந்தேன்.

50 மணி நேரம் ஃபுட்டேஜ்ஜைப் போட்டுப் போட்டுப் பார்த்தேன். ஆறுமாத காலம் கழித்து ஒவ்வொரு கேசட்டாக எடுத்து எடிடிங் செய்யத் தொடங்கினேன். அப்போது மாரிம்மாளின் பகுதி மட்டும் தனியாக ஒரு படம் போல இருந்ததை நான் கவனித்தேன். ஒரு எடிட்டராக ஏற்கனவே எடிட் பண்ணப்பட்டது போல இருந்ததையும் உணர்ந்தேன். வேறு எதையும் சேர்க்காது அதை மட்டும் சீர்படுத்திவிட்டு ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் அதுவே தனிப்படமாக இருந்தது. பீ தானாக, சுயம்பாக இப்படித் தான் உருவானது.



9.                   இந்த வடிவம் இப்படத்திற்கு எந்தளவிற்கு உதவியது என்று நினைக்கிறீர்கள்?

இந்தப்படத்திற்கு வடிவம் தான் பலம். ஒரு பெண்மணி. அவரது ஆளுமை தான் இதன் உந்து சக்தி. தெரு நிறைய மலம் இருந்தது எனக்கே மலைப்பாக இருந்தது. அதை அப்படியே கொண்டு வந்தால் போதும். ஏறக்குறைய ஒரு ஓபரா போல என் கண் முன்னே ஒரு துயர நாடகம் நடந்தேறியது. அதில் என்னை மூழ்கடித்தபடி படம் பிடித்தேன்.

பலர் பல கதாபாத்திரங்கள் போல வந்து போனார்கள். பள்ளி மாணவி, சைக்கிளில் வரும் பையன், கறிவேப்பலை வாங்கியபடி மூக்கைப் பொத்தியபடி போன பெண், ஒரு பெரியவர், மலம் கழிக்கும் சிறுவர்கள், புளியமரம், கோயில் சுவர், அதன் சிவப்புக்கோடுகள், அரிசி ஆலையின் சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாமே என்னை உனக்காகத் தான் காத்திருக்கிறோம். எங்களை எடுத்துக்கொண்டு போ என்பது போல ஆரத்தழுவிக்கொண்டனர்/ன. கொடுமை ஒரு புறம். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் அதை அப்படியே பதிவு செய்ய முடியாது. அதன் உக்கிரத்தைக் கொண்டு வரமுடியாது.

மேலும் எந்த இடத்திலும் மாரியம்மாளை தொந்தரவு செய்துவிடவும் கூடாது. சீரியசான கேள்விகள், அரசியல் கேள்விகள், ஆன்மிக தத்துவக்கேள்விகள் இல்லாமல் அதனால் தான் உரையாடல் கூட இரு மனிதர்களுக்கிடையே நிகழும் சாதாரண, இயல்பாக அமைந்தது. மினிமலிஸ்டிக்காக இருப்பது இது போன்ற கனமான கதைக்களனுக்கு முக்கியம். அதிகம் நீங்கள் உங்கள் அறிவுஜீவித்தனத்தைக் காட்டினால் சூழலின் உக்கிரத்தை அதன் வலியோடு பதிவு செய்ய முடியாது.

மேலும் மாரியம்மாளின் வேகம், அவரது துயரம், கோபம், நகைச்சுவை ஆகியனவும், அன்றாடம் வந்து வேலையை ஒரு எந்திரம் போல உணர்வற்று செய்யும் முரண் ஆகியன தான் வடிவத்தைத் தீர்மானித்தன.

மாரியம்மாள் தான் கதாநாயகி. நான் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர் அவ்வளவே! அவரது ஆளுமையை அதிக இடையீடு இல்லாமல் கொண்டு வந்தால் போதுமானது.

10.               படத்தை எடுக்க தீர்மானித்தவுடன் அதற்கு நீங்கள் மேற்கொண்ட களஆய்வினைக் குறித்து சொல்லுங்களேன்..

மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக “துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் வைத்திருக்கின்றனர். அம்பேத்கரிய அரசியலைப் பின்பற்றும் இந்த சங்கம் தான் மதுரையில் அதிக துப்புரவுத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. நிறையப் போராட்டங்கள் நடத்தியபடி இருந்தனர். அவர்களைத் தான் நான் சந்தித்தேன். அவர்கள் தான் எனக்கு கள ஆய்வுக்கு உதவினர். ஏறக்குறைய ஒரு மாதம் பல தொழிலாளர்களுடன் பேட்டி எடுத்தோம். அவர்களிடம் இருந்த புத்தகங்கள், தினசரிகளின் சேகரிப்பு, தலித் ஆதார மையத்தில் வே.அலெக்ஸ், மற்றும் மோகன் லார்பீர் ஆகியோரின் ஆலோசனை ஆகியன எனக்குப் பெரிதும் உதவின.




11.               இப்படத்திற்காக உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

நான் எப்போதும் தனியாகவே வேலை செய்யக்கூடிய ஆள். நானே கேமரா, சவுண்ட், எடிடிங், இயக்கம் எல்லாம் செய்வேன். அதுவே எனக்கு பலம். ஏனெனில் ஆவணப்படம் எடுக்கும் போது உங்களது இருப்பு மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் முடிந்த வரை இருக்கிற விஷயங்களை அதிகம் சேதாரம் இல்லாமல் பதிவு செய்ய முடியும். அதிக நபர்களுடன் போனால் களத்தில் ஆட்கள் மிரண்டு போவார்கள்.

குறிப்பாக இந்தப் படத்தில் ஏகப்பட்ட கழிப்பறைகளுக்குப் போனேன். தொழிலாளர்கள் வேலை செய்வதைப் படம் பிடித்தேன். வேறு ஆட்களுடன் போயிருந்தால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஏனெனில் கழிப்பறைகளுக்குள் நுழைய முடியாது. பாதையெங்கும் மலம் நிறைந்திருக்கும். அதில் ஒரு தொழிலாளி வேலை செய்து கொண்டிருப்பார். அதைப் பார்த்ததும் குமட்டும். தலை சுற்றும். கால்களில், கைகளில் மலம் ஒட்டிக்கொள்ளும். தொண்டைக்குழியில் அதன் மணம் தங்கிவிடும். எச்சிலைத்துப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் தன்னை மறந்து சாமி வந்து இறங்கியது போல அல்லது பைத்தியம் பிடித்தது போல வேலை செய்தால் தான் மலம் அள்ளுவதை படம் பிடிக்க முடியும். எனக்கே அப்படி என்றால் துப்புரவு வேலை செய்கிறவர்கள் நிலை எப்படி என்று யூகித்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிய நிறையத் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் கழிவிரக்கத்திற்கும் உள்ளாகியே இருந்தனர். இந்த அவல நிலையை, துயரத்தை, நாற்றத்தை, வலியை, வியாதியை மறக்கவே பலர் குடிக்கின்றனர். அவர்கள் எல்லாம் கடவுள் மாதிரி. அவர்களின் தியாகத்தில் தான் பிற சாதியினர் குளிர் காய்ந்துகொண்டிருக்கின்றனர். மற்றவரகள் எல்லாம் துப்புரவுப்பணியாளர்களின் காலில் விழுந்து தொழவேண்டும்.

எனது குரல் பேட்ரனைசிங் குரலாக ஒலித்தால் அதை நான் ஒத்துக்கொள்கிறேன். நான் புரட்சிக்காரன் இல்லை. சாதாரண மனிதன். எனக்கு ஏற்பட்ட வேதனையைச் சொல்கிறேன். இங்கிருக்கிற பல புரட்சிக்காரர்கள் கழிப்பறைக்குள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டார்கள்.


12.            90 சதவிகிதம் பேர் தலித்துகள் தான் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால், இதுவும் ஒருவகையான சாதிய வன்முறைதானே?

துப்புரவுப்பணி, கையால் மலம் அள்ளுதல், மனித மலத்தை மனிதனே அள்ளுதல் ஆகிய செயல்கள் கண்டிப்பாக சாதிய வன்முறைதான். 90 சதவீதம் என்பது மதுரை மாநகராட்சியில். மற்ற இடங்களில் 95க்கும் மேல் இருக்கும். மீதம் இருப்பவர்கள் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான். சாதி தான் இங்கு முக்கிய அல்லது ஒரே அளவுகோல். சில வேலைகளை சில சாதிகளுக்கென்றே நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பிற சாதியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த வேலையைச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. பறையர்களும் அருந்ததியினரும் அதிகம் இந்த வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுவும் மலம் அள்ளுவதற்கு அருந்ததியினர் மட்டுமே. 100% இடஒதுக்கீடு அவர்களுக்குத் தான். நிரந்தர வேலை எனும் வலையை விரித்து அருந்ததிய மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போது அதிலும் மண் விழுந்து விட்டது. தனியார்மயமாக்கல் கொண்டு வந்து சம்பளக்குறைப்பு, வேலை அதிகம், நிரந்தரமின்மை, பாதுகாப்பு இன்மை என்று மறுபடியும் அருந்ததிய இன மக்களே இந்த வேலைக்கு வைக்கப்படுகின்றனர். இது சாதிய வன்முறை தான்.




13.            முக்கியமாக அதிக அளவில் தலித்துகள் மட்டும் இத்தொழிலில் ஈடுபட வேறு என்ன காரணம்? வறுமை தவிர்த்து?

கிராமங்களில் நிலம் இல்லாமல், வேறு கதி இல்லாமல், சுயமரியாதை இல்லாமல், நல்ல பெயர் கூட இல்லாமல், விதியே என்று தலித் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. வேறு எந்த வேலையும் கிடையாது என்கிற சாதியக் கட்டுப்பாடு தான் இதற்குக்காரணம். மற்றவரைப் போல கடைகளில் எடுபிடியாகக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மேற்கு மாவட்டங்களில் விவசாயத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். பிறபகுதிகளில் அதுவும் இல்லை.

இந்த வேலையை இவர்கள் தான் செய்யவேண்டும் நிர்பந்திக்கப்படும் சூழல் தான் இதற்குக் காரணம். தலித்துகளை பிற சாதியினர் தமக்கு சமமில்லை என்று கருதும் மனோபாவமும் இதற்குக்காரணம்.

ஐரோப்பாவில் கறுப்பின மக்களும், நாடோடிகளும், அகதிகளும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். இனவெறி மட்டும் இன்றி கதியின்றி வருகின்றான். செய்வான் என்று நினைக்கும் ஆதிக்க வெறியும் தான் காரணம். இந்தப்படத்தில் கூட “சம்பளம் வாங்கிறல்ல..எடு” என்று பிற பெண்கள் சொன்னதாக மாரியம்மாள் சொல்வதைக் காணலாம்.

இப்போது தான் நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாற்றாக கல்வி மற்றும் வேறு வேலைகள் அருந்ததியருக்கு எட்டும் தூரத்தில் வந்திருக்கின்றன. இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். வேறு வகையில் பிழைத்துக்கொள்ளலாம் என்று தைரியம் வரும் போது இந்த வேலைக்குப் போக மாட்டார்கள். இப்போதே இளைஞர்களிடம் பெரிய மாற்றம் வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து போராடும் சூழல் கடந்த பத்தாண்டுகளாகத் தான் அருந்ததியருக்கு உருவாகியிருக்கிறது. இப்போது தான் அருந்ததியருக்கு என கட்சிகள், அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. உள் இடஒதுக்கீடு வந்திருக்கிறது. மாற்றங்கள் வரும்.

கிராமங்களில் முன்பு வீடுகளில் எடுப்பு கக்கூஸ் என்று இருந்தது. வீடுகளுக்கு அருகே இருக்கும் குறுக்கு சந்துகள் வழியாக வந்து கூடையில் மலத்தை அள்ளிக்கொண்டு போனார்கள். இப்போது எடுப்பு கக்கூஸ் இல்லை. ஆனால் வீடுகளுக்கு கீழே தொட்டி கட்டி மலத்தை சேமிக்கின்றனர். அதில் அடைப்பு வந்தால் இதே தொழிலாளி தான் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும். இவனும் அழைக்கிறான். அவனும் வருகிறான். இருவரின் மூளைகளிலும் சாதியக் கோட்பாடு ஆழப் பதிந்து இருவரையும் வழிநடத்துகிறது.

இன்றும் பிற சாதியினரின் வீடுகளில் குழந்தையின் மலத்தை பெண்கள் தான் சுத்தம் செய்கின்றனர். ஆண்கள் செய்வதில்லை. இதுவும் ஒரு வகையான பாகுபாடு தான்.

தொடரும்…

Thursday, February 7, 2013

கடல் அவ்வளவு மோசமான படமா?

மணிரத்னத்திற்கு கிடைக்கும் மட்டை அடி


மணிரத்னம் இயக்கிய மெளனராகம், அலை பாயுதே, அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களை நான் ரசித்துப் பார்த்ததுண்டு. உயர் சாதி அடையாளங்கள் அவற்றில் துருத்திக்கொண்டிருந்தாலும். 

அரசியல் காரணங்களுக்காகவும் சினிமா ரீதியாகவும் அவரது மும்பை, ரோஜா, தில்சே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு, ராவணனன் ஆகிய படங்களை என்னால் ஏற்க முடியவில்லை.

இருவர் சினிமா மொழியில் நல்ல படைப்பு என்று சொல்வேன். திராவிட கட்சிகளை அவர் அந்தப் படத்தில் கொச்சைப் படுத்தியிருந்தார் என்பதையும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அந்தக்கட்சிகள் நமக்கு ஒட்டுமொத்தமாக கொடுத்திருக்கும் இழைத்திருக்கும் தீங்கை நினைக்கும் போது நாம் இன்னும் திராவிடக் கட்சிகளைப் பற்றி நிறையப் படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

யுவா எனும் படத்தை வடஇந்தியாவில் பலர் சிலாகித்துப் பேசியதுண்டு. ஆனால் பாரதிராஜா அதில் நடித்தது மிகுந்த அதிர்ச்சி யைக் கொடுத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அந்தப் படத்தில் பாரதிராஜா நடித்ததைப் பற்றி வருத்தப்பட்டார் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் சமீபத்தில் மணிரத்னம் இயக்கி வெளியிட்டுள்ள "கடல்" எனும் திரைப்படம் இங்கு பலர் மட்டையடி அடிப்பது போல மொக்கை அல்ல.




தமிழில் முழுநீள கிறிஸ்தவப்படம் இதுவரை வந்திருப்பதாக எனக்கு நினைவில்லை. ஒரு கணக்கிற்கு சில கதாபாத்திரங்கள் கிறிஸ்தவர்களாக தமிழ் சினிமாவில் வருவதுண்டு. இந்தப்படத்தின் கதைக்களமே ஒரு கத்தொலிக்க கிராமம் தான். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டமும் அதை கத்தோலிக்க மக்கள் முன்னின்று நடத்துவதும் இயக்குநரை இப்படி ஒரு படம் எடுக்க வைத்ததா என்பதை நாம் அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல அவர் இந்தப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறார் என்பது கவனத்திற்குரியது. சொல்லப்போனால் நிறையப்படங்கள் மீனவ மக்களைப் பற்றி வருவதும் கூடன்குளம் போராட்டம் தான் காரணமா என்றும் தெரியவில்லை.

நன்மை தீமைக்கு இடையே போட்டி. இறுதியில் நன்மை தனது உறுதியால் வென்றது என்பதே கடல் படத்தின் கரு என்று சொல்லலாம்.

ஒரு கத்தோலிக்க மீனவ கிராமம். அதில் ஒரு நல்ல பங்கு சாமியார். வன்முறையும் துரோகமும் நிறைந்த கிராமத்தினர். ஒரு பாலியல் தொழிலாளி. அவளது மகன். ஒரு பணக்கார தீயவன். அவளது மகள். இவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் தான் இந்தக்கதை. அது திரைக்கதையாக நன்றாக வந்திருக்கிறதா என்றால் குழப்பமாகத் தான் இருக்கிறது. யாரைப் பின்பற்றி பார்வையாளன் போக வேண்டும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு பெரிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்து தடுமாறியிருப்பது போல தோன்றுகிறது.




கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கல்லூரியிலும் படித்தவன் என்ற முறையிலும் கத்தோலிக்க பாதிரியார்கள், செவிலியர்களைத் தனிப்பட்ட முறையில் பரிச்சயம் என்ற முறையிலும் கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் (செமினரி) இருந்து படம் தொடங்குவதை நான் வரவேற்கிறேன். ஆச்சர்யமாகவும் பார்த்தேன்.

வசதியான குடும்பத்தில் பிறந்து ஆன்மீக சேவை செய்ய பாதிரியாராக வந்திருக்கும் அரவிந்த்சாமி, ஏழை குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக வந்திருக்கும் அரஜூன் ஆகியோரின் மோதல், ஒருவர் ஏசுவின் பில்ளையாக, இன்னொருவர் சாத்தானின் பிள்ளையாக முன்னிருத்தப்படுவதும் தான் கதையின் முடிச்சு. பிழைப்புக்காக சாமியாராகும் நபர் சாத்தானாக ஏன் சித்தரிக்கப்படுகிறார் என்பது ஒரு கேள்வி. சோற்றுக்கு வழியில்லாமல் அரசு வேலைக்கு வருபவர்கள் நேர்மையாக இருக்க முடியாதா? இரண்டே பாத்திரங்கள். அதில் ஒரு நல்லவன். ஒரு கெட்டவன். நல்லவன் பணக்காரன். கெட்டவன் ஏழை என்று தொடங்குகிறது படம். அது எனக்கு நெருடலாக இருந்தது.

ஏழை அர்ஜூன், பாதிரிக்குப் படிக்கும் அர்ஜூன் அங்கு வேலை செய்யும் ஒரு கறுப்பான, அழுக்கான ஒரு பணிப்பெண்ணை ஒரு இரவில் ஒரு கொட்டகைக்குள் வைத்து சல்லாபம் செய்கிறார். அதை அர்விந்த்சாமி தட்டிக்கேட்கிறார். நல்ல வேளை அந்தக கறுத்த பெண்ணை உதைக்காமல் விட்டாரே என்று பெருமூச்சு விட்டேன். அர்ஜூன் குரு இல்லத்தின் தலைவரிடம் மன்னிப்பு கேட்க மறுக்கிறார். செமினரி விட்டு வெளியேறுகிறார். இனிதான் இருக்கு என்று எச்சரித்து விட்டும் போகிறார் அரவிந்த்சாமியிடம்.

செமினரி பற்றி காண்பித்தது எனக்கு பிடித்திருந்தாலும் இன்னும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.

பாமா போன்றவர்கள் திருச்சபைக்குள் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றி எழுதியிருந்தாலும் அதை ஒரு கிறிஸ்தவர் செய்வதும் ஒரு வெளியாள் செய்வதும் ஒன்று இல்லை என்பதும் எனக்குத் தோன்றியது.

லூயி புனுவலின் ஒரு படத்தின் உல்டா என்றெல்லாம் பலர் சொல்கின்றனர். லூயி புனுவல் ஒரு ஸ்பானிஷ் கத்தோலிக்க கிறிஸ்தவர். தனது மதம் பற்றி விமர்சனம் செய்யலாம். பிறர் செய்வது நியாயமா என்றும் தோன்றுகிறது. 




ஒரு கத்தோலிக்க மீனவ கிராமம். அக்கிராம மக்களுக்கு ஏற்படும் ஆன்மிக நெருக்கடி பற்றி படம் பேசுகிறது. ஒரு கிராமத்திற்கு வெளியில் இருந்து நெருக்கடி வரும். கூடன்குளம் அணு உலை வந்தது போல. வி.வி.மினரல்ஸ் கடறகரை மணலை அள்ளி விற்பது போல. பெரிய படகுகள் கட்டுமரங்களின் மீன்பாட்டைக் காலி செய்வது போல. ட்ராலர்கள் பெரிய படகுகளின் பிழைப்பை அழிப்பது போல. இப்படி புற நெருக்கடி வரலாம்.

இந்த கிராமத்தில் அக நெருக்கடி. அதுவும் ஆன்மீக நெருக்கடி. கத்தோலிக்க கிராமம். ஆனால் பங்குத் தந்தை இல்லை. ஆலயம் சீரழிந்து போய் இருக்கிறது. மக்கள் பணத்திற்கு அடித்துக்கொள்கின்றனர். ஏன் என்று விளக்கப்படவில்லை. மீனவர்களே அப்படித்தானா? இல்லை இந்த கிராமத்து மக்கள் அப்படியா? தெரியவில்லை. ஆனால் அந்த கிராமத்து மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாய் கட்டற்று திரிகின்றனர். மீன் பாடும் நன்றாகவே நடக்கிறது. ஆனால் அறம் இல்லை. அன்பு இல்லை. வன்மமும் ஏச்சும் பேச்சும் ஏளனமும், குரூரமும் வார்த்தைகளாய் செயல்களாய் தெரிக்கின்றன.




அசாதாரணமான கதாபாத்திரங்கள். ஒரு பாலியல் தொழிலாளி. அவர் பிணமாகவே அறிமுகமாகிறார். அவரது சிறிய மகன். அனாதையாகிறான். கடும் வன்முறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகின்றான். பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளர் (சிறுவன் அவரை அவனது தந்தை என்று தன் தாய் சொன்னதை நம்புகிறான்) பிணத்தை அடக்கம் செய்கிறார். எந்த சடங்குகளும் இன்றி. சந்தையின் நடுவே அவளது பிணம் கொண்டு போகப்படும் போது யாரும் அதை பொருட்படுத்தவில்லை. தூற்றுகின்றனர். ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்யும் போது அவளது கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க, அதை வெட்டி, உடைத்து உள்ளே வைக்கின்றனர். அத்தனை வன்மம். சிறியவன் துடிக்கிறான்.

அந்த ஊருக்குத் தான் நல்லவர் அரவிந்த்சாமி பங்கு சாமியாராய் வருகிறார். அவரை கோயில் உதவியாளர் தவிர யாரும் மதிக்கமறுக்கின்றனர். நீ தேவையில்லை என்கின்றனர். அவர் சிதைந்த நிலையில் இருக்கும் கோவிலைச் சுத்தம் செய்யும் போது யாரும் உதவிக்கு வரவில்லை. பூசைக்கும் யாரும் வர மறுக்கின்றனர். மீன் சந்தைக்கே கடற்கரைக்கே வந்து சாமியார் அவர்களை அழைக்கின்றார். யாரும் எளிதில் வந்த பாடில்லை.

அனாதையாக திரியும் பாலியல் தொழிலாளியின் மகனை ஆதரிக்கிறார் சாமியார். அவனை தனது மனச்சாட்சியாக வளர்த்தெடுக்கிறார். பிழைப்புக்கு வழி வகுக்கிறார். அவனே நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம். மிகவும் அற்புதமான அறிமுகம். அவர் எதைச்செய்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. மீனவனாக அவரை நம்பவும் முடிகிறது. பல சமயங்களில் பலர் நம்பும் படி இருப்பதில்லை.




கதையில் புதிய திருப்பமாக அந்த ஊருக்கு அர்ஜூன் வருகிறார். இப்போது அவர் குண்ட்டிபட்டு கிடக்கிறார் கடற்கரை ஓரம். அவர் கடத்தல் தொழில் செய்யும் பெரிய முதலாளி. தொழில் போட்டியில் யாரோ அவரை விரட்டிச் சுடுகின்றனர். அவரைக் காப்பாற்றுகிறார் அரவிந்த்சாமி. ஆனால் ரசகியமாய்.

தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை (அவளும் ஒரு பாலியல் தொழிலாளி) உதவிக்கு கொண்டுவந்தால் தான் பிழைத்துக்கொள்வேன் என்று அர்ஜூன் சொன்னதும் அவளையும் அழைத்து வருகிறார் அரவிந்த்சாமி. தன்னுடன் அரவிந்தசாமி உடலுறவு வைத்துக்கொண்டார் என்று ஊர் மக்கள் முன் அவள் பொய்சாட்சி சொல்லி அரவிந்தசாமியை மாட்டிவிடுகிறார். அதில் நடக்கும் ஒரு தள்ளு முள்ளுவில் ஒரு இறக்க அரவிந்தசாமி மீது கொலை பட்டம் விழுகிறது. அர்ஜூன் படம் ஆரம்பிக்கும் போது விட்ட சவால் நிறைவேறுகிறது.

இந்த சம்பவங்களில் கிராமமக்கள் செம்மறி ஆடு போல, யேசு நாதரை துன்புறுத்தியது போல நல்லவராகியா அரவிந்த்சாமியை அடித்துத் துவைக்கின்றனர். ரத்தக் காயங்களுடன் தான் கைதாகிறார்.

அந்தகிராமத்தில் சாமியாருக்கு ஆதரவாய் - அதாவது அறம், அன்பு, நேர்மை இவற்றுக்கு ஆதரவாய் உதவியாளர், கெளதம், ஒரு பெண் தவிர யாரும் இல்லை. எல்லோரும் தூற்றுகின்றனர். ஊரே சேர்ந்து அரவிந்த் சாமியை சந்தேகிக்கிறது. யாரும் ஆதரவாக இல்லை. காவல்துறை தான் வந்து அவரைக் காப்பாற்றுகிறது. இடைவேளை வருகிறது.

இது ஒரு மிகை நாடகம் போலவே நடக்கிறது. இந்தப் படமே ஒரு மிகை உணர்ச்சி ததும்பிய இசை நாடகம் போலவே காட்சியளிக்கிறது. பல ஐரோப்பிய சினிமாக்களின் காட்சிகள் கண் முன்னே வந்து போயின. நன்மைக்கும் தீமைக்கும் நிகழும் போட்டியில் நன்மை தோற்கிறது நடுவில். ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான் எனும் ரஜினி வசனம் நினைவுக்கு வந்தது. ஆனால் வலிய புகுத்தப்பட்ட இனவரைவியல் கிறிஸ்தவ பின்னணி சந்தேகம் ஊட்டியபடி இருந்தது.

மணிரத்னமும் ஜெயமோகனும் இப்படி ஒரு மிகை நாடகத்தை ஒரு இந்து கோவிலின் பின்னணியில் செய்திருந்தால் எத்தனை அழுத்தமாய் இருந்திருக்கும். எத்தனை நம்பகத்தன்மை இருந்திருக்கும். இப்படி ஒரு நன்மை தீமை எனும் போராட்டம் இந்து பின்னணியில் சாத்தியமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இந்து அவதாரம் எல்லாம் எளியவர்களை அழிப்பதாகவே இருப்பதால் கிறிஸ்தவ பின்னணி தான் சரியோ என்னவோ.


கிறிஸ்தவர்கள் பற்றியும் மீனவர்கள் பற்றியும் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது திரையெங்கும். இறுதியில் நன்மை வென்றதாக இயேசு பாட்டு போட்டாலும் உழைக்கும் மக்கள் பற்றி இப்படி குரோதமாகப் படம் எடுத்திருப்பது அதிர்ச்சியாகவே உள்ளது. ஒரு வேளை உயர் சாதி இந்து கண்களுக்கு மீனவர்கள் மூளையற்ற, அறமற்ற, துரோகம் நிறைந்த, பொய்யும் புரட்டும் நிறைந்த கூட்டமாகத் தெரிகிறதோ என்னவோ!

மறுபடியும் ஒரு சமூக அரசியல் படம் எடுத்து மறுபடியும் தனது போதாமையை வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.

Sunday, February 3, 2013

விஸ்வரூபம் தொடர்பாக...

கமலஹாசனின் விஸ்வரூபம் தொடர்பான எனது கருத்துக்களுக்கு பல நண்பர்கள் வருத்தமும் சிலர் எச்சரிக்கையும் விடுத்திருப்பதை ஒட்டி:
1) நான் எந்த படைப்பையும் அரசோ அல்லது ஒரு இயக்கமோ தடை செய்வதை ஆதரிக்கவில்லை. தணிக்கை முறைக்கே எதிரானவன் நான். எனது படங்களுக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வாங்கவில்லை. படைப்புகள் சுதந்தரமாக வெளிவரவேண்டும். படைப்புகளை முடக்குவது சமூகத்தில் விமர்சனங்களை முடக்குவதற்கு சமம். விமர்சனங்களும் மாற்றுக்கருத்தும் ஜனநாயகத்திற்கு அடிப்படை. எனவே படைப்புகள் தடையின்றி வெளிவரவேண்டும்.

2) அதே நேரத்தில் படைப்புகள் பற்றி சமூகத்தில் விவாதங்கள் நடக்க வேண்டும். திரைப்படவிழாக்களும் திரையிடல்களும் அவற்றில் நடக்கும் விவாதங்களும் இதில்அடங்கும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களும், விமர்சனக்கூட்டங்களும், கட்டுரைகளும், பயிலரங்குகளும் மிகவும் அவசியம். தமிழ் சினிமா போன்ற வெகுசன ஊடகம் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவை வெறும் பொழுது போக்குக்கூடங்கள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புகள்.

3) ஒரு கலைவடிவம் அது எதற்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் சரி நமது பார்வையை, புரிதலை விரிவு படுத்துகிறதா இல்லை நம்மை சுருக்குகிறதா என்பது மிகவும் முக்கியமான கேள்வி. ஒரு படைப்பு பிறர் மீதான துவேசத்தைப் பரப்பினால், வெறுப்பை விதைத்தால், உண்மையை மறைத்தால், பொய்ப் பிரச்சாரம் செய்தால் சிவில் சமூகத்தினர் அதை விமர்சனம் செய்வது தான் சரி. அதை நான் செய்வேன்.

4) இந்த அனுபவம் நம்மை இன்னும் நல்ல மனிதர்களாக்கும் என்று நம்புகிறேன்.


நான் சொன்ன கருத்துக்கள்:
மதுரையில் மாட்டுத்தலையை இந்து முன்னணி அலுவலகத்தில் யாரோ போட்டுவிட்டனர் என்று சொல்லி மதுரை மெகபூப்பாளையும் மற்றும் ஹாஜிமார் தெருவில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் இழுத்துக்கொண்டு போய் ரவுண்டு கட்டி அடித்தார்களே அதை எந்த "நாயகனும்" படமாக எடுக்க மாட்டார்களா?

பார்ப்பனர்களை அல்லது இந்திய அரசை அல்லது இந்திய ராணுவத்தை அல்லது அம்பானி மாதிரியான முதலாளியை விமர்சனம் செய்து பார்ப்பனர் அல்லாத ஒருவர் படம் எடுத்திருந்து அதை மாநில அரசோ மத்திய அரசோ தடை செய்திருந்தால் இப்போது கமல்ஹாசனுக்காக கொதிப்பவர்களும் துடிப்பார்களா?
வடிவேலு எனும் மகாகலைஞனை எல்லோரும் ஓரம் கட்டினீர்களே! அப்போது எங்கே போனது உங்களது கருத்துரிமை? "சிவப்பா இருக்கிறவன் சொன்னா அது உண்மையாயிருமா?" "உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?" (இதெல்லாம் வைகைபுயலின் தத்துவங்கள்)
"தேவர்மகன்" தென்தமிழ்நாட்டில் தலித் மக்களின் மீதான வன்முறைக்கு ஒரு கோஷமானது போல (போற்றிப்பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!) இந்தப்படமும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணிதிரட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறதா?

கமல்ஹாசனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒத்துக்கொள்கிறோம். தமிழக அரசு ஒரு அராஜக ஆட்சி நடத்துகிறது. ஒத்துக்கொள்கிறோம். இதைக் கண்டிக்கிறோம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது தான்.

ஆனால் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, ஏழைகளை, குடிசைவாழ் மனிதர்களை, தலித்துகளை, பெண்களை, திருநங்கைகளை, பாலியல் சிறுபான்மையினரை, விவசாயிகளை, உழைப்பாளர்களை, தமிழர்களை, கறுப்பானவர்களை, குண்டானவர்களை, குட்டையானவர்களை, மாற்றுத் திறனாளிகளை கீழான நிலையில் சித்தரிப்பதைப் பற்றி கமல்ஹாசனுக்காக, கருத்துரிமைக்காக கண்ணீர் விடுவோர் விவாதிக்கத் தயாரா?

உதாரணமாக "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் கதாநாயகனின் பெயர் "ராகவன்" என்கிற பார்ப்பனப் பெயராக இருந்ததும் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களுக்கு தூய தமிழ் பெயர் இருந்ததும் அவர்கள் ஓரினச்சேர்க்கை புரிபவர்களாகக் காண்பிக்கப்பட்டதும் எதேச்சையாக நடந்ததா? கெளதம் மேனன் எனும் மலையாளிக்கும் கமல்ஹாசன் எனும் தமிழனுக்கும் இது தெரியாமல் நடந்ததா? இது தான் உலக நாயகனின் உலக சினிமாவா?

இப்படி ஒட்டுமொத்த பார்வையாளர்களை (ஆடியன்ஸ்) அவமானப்படுத்திவிட்டு எமது மக்களின் காசில் நீங்கள் சொகுசாய் வாழ நினைப்பது என்ன நியாயம்? இதை கலைச்சேவை என்றாலும் வியாபாரம் என்றாலும் கண்டிக்க வேண்டாமா? எருமை மாட்டில் மழை பெய்வது போல என்ன செய்தாலும் தலை அசைத்து கொடி பிடிக்கலாமா?

குறிப்பாக கமல்ஹாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்காக உயிரைக்கொடுப்பதாக முழக்கமிடுபவர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா?

சினிமா ஒரு பொழுது போக்கு ஊடகம் தானே என்று எத்தனை நாள் நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கப்போகிறோம்?

அசிங்கமான சினிமாவால் அதன் ரசிகர்களுக்குத்தானே கேவலம்?

இறுதியாக:

எந்தப்படைப்பும் தடை செய்யப்படக்கூடாது. அதனால் அய்யா படம் வெளியே வரவேண்டும். அவர் டவுசர் கிழிய வேண்டும் என்று தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மிகச்சிறந்த கலைஞன் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்! தரகு வேலை பார்த்தால் அதற்குப் பெயர் வேறு!

எனக்குப் பிடித்த படம் கரகாட்டக்காரன் தான். அந்தப்படத்தில் இவ்வளவு பித்தலாட்டமும் மோசடியும் துரோகமும் இல்லை!

விஜய்காந்துக்கும் அர்ஜூனுக்கும் விஜய்தம்பிக்கும் கோயில் கட்டலாம் என்று தோன்றுகிறது!

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...