Thursday, November 21, 2024

பிலிம்ஸ் டிவிசன் ஆவணப்படங்கள்!

 இந்திய அரசின் ஆவணப்படங்கள் : அமுதன் ஆர்.பி.


1947ல் இந்தியா விடுதலை அடைந்து ஒரு சுதந்தரமான நாட்டைக் கட்ட (nation building) முயன்ற போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மணிப்பூரிலிருந்து குஜராத் வரை வாழும் மக்களை அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் அறிமுகப்படுத்தவும் இணைக்கவும் இந்திய அரசால் பல உத்திகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலொன்று, பிலிம்ஸ் டிவிசன் ஆப் இண்டியா (Films Division of India) என்று அழைக்கப்படும் இந்தியத் திரைப்படப் பிரிவாகும்.


ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்புப்த்துறையின் கீழ் வந்த இந்தப் பொதுத்துறை நிறுவனம், 1948ல் தொடங்கப்பட்டு இன்று வரை ஆயிரக்கணக்கான ஆவணப்படங்களை, அனிமேஷன் படங்களை, சிறிய கதைப்படங்களை தயாரித்திருக்கிறது. வெள்ளையரின் ஆட்சியிலிருந்து கற்றுக்கொண்ட பிரச்சார உத்திகளைக் கொண்டு, மேலிருந்து கீழ் நோக்கிப் பேசும் (top down approach) தோரணையில், வர்ணனையும், முழக்கமிடும் இசையுமாக, அறிவுரை சொல்லும் போக்கில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படங்கள் தயாரிக்கப்பட்டன.


இதன் மூலம் இந்தப் படங்களைப் பார்ப்போர் மத்தியில் ஒரு கருத்துருவாக்கம் செய்வது, அவர்களிடம் ஒரு மனமாற்றம் ஏற்படுத்துவது, ஏறக்குறைய மனிதர்களுக்கு வரப்போகும் அல்லது வருவதாய் இருக்கும் நோயிலிருந்து காக்கத் தடுப்பூசி போடுவது போல, விவசாயப் பயிர்களின் தலைகளில் பூச்சிக்கொல்லியை அடிப்பது போல, வெள்ள காலத்தில் விமானத்திலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு, அவதிப்படுவோருக்கு உணவுப்பொட்டலங்களை எறிவது போல இந்தப் படங்கள் பார்வையாளர்களின் மீது தெளிக்கப்பட்டன



விடுதலை அடைந்த போது, பல மாநிலங்களில் ஒன்றிய, இந்திய அரசை ஏற்றுக்கொள்ளாத அரசியற்சூழல் இருந்தது. இந்திய அரசோடு தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் பல மாநிலங்களுக்கு இருந்தன. பல இடங்களில் தனிநாடு கோரிக்கையும் முனைப்புகளும் இருந்தன. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது பரப்பப்பட்ட வதந்திகள், வெறுப்புப்பிரச்சாரங்கள், ஏற்பட்ட மோதல்கள், வன்முறைகள், கொலைகள், கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருந்தன. பல மதங்கள், மொழிகள், ஜாதிகள், பழக்கவழக்கங்கள் இருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்தியா எனும் நிலப்பரப்பிற்குள் வாழ்ந்த மனிதர்களை விடுதலைப் போராட்டம் ஒன்றிணைத்திருந்தாலும், இந்தியா எனும் புதிய அரசியல் வடிவத்திற்குள் நுழைய, வாழ, கனவு காண, நம்பிக்கை வைக்க, கற்பனை செய்ய, உழைக்க, முயற்சிக்க ஒரு ஒத்தக்கருத்தை உருவாக்க வேண்டியிருந்தது


இப்படிப்பட்ட நோக்கத்தில் பிலிம்ஸ் டிவிசனால் எடுக்கப்பட்ட படங்கள், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, திரையரங்குகளில் திரையிடப்பட்ட அன்றாட, வணிக வெகுசனத் திரைப்படங்களுடன், அல்லது அவற்றிக்கு முன்பு, வலுக்கட்டாயமாக, பார்வையாளர்களின் தொண்டைக்குள், மூளைக்குள் திணிக்கப்பட்டன. வழக்கமான திரைப்படங்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து ஒரு பங்கு இந்தப் படங்களுக்காக பார்வையாளர்களிடமிருந்து அவர்களின் சம்மதமில்லாமல் எடுத்துக்கொள்ளப்பட்டதுஅந்தக் காலத்து திரைப்படங்களின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான ராஜ்கபூர் நடித்த இந்திப்படத்தைப் பார்க்க ஒருவர் ஒரு திரையரங்கில் நுழைவுச் சீட்டு வாங்கினால், அந்தக் கட்டணத்தில் ஒரு பங்கு இந்திய அரசின் பிலிம்ஸ் டிவிசன் ஆவணப்படங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும். ராஜ்கபூரின் திரைப்படத்தில் என்ன காட்சிகள் வரும் என்று யூகித்துக்கொண்டு போகும் அல்லது எதிர்பார்த்துப்போகும் பார்வையாளருக்கு பிலிம்ஸ் டிவிசன் என்ன காட்டப் போகிறது என்பதை யூகிக்கமுடியாது


இந்த ஆவணப்படங்கள் கசப்பான மாத்திரையைப் போல எல்லோருக்கும் வழங்கப்பட்டாலும், ஒரு மாத்திரை உடலுக்கு செய்யக்கூடிய நற்பணியை இவை செய்யாமல் இல்லை. இந்தியாவைப் பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையை, இந்தியாவில் உள்ள மாநிலங்கள், அவற்றின் பண்பாடு, வளர்ச்சி, தேவைகள் ஆகியவை பற்றி ஒரு தொடக்ககால அறிமுகத்தை இந்த படங்கள் கொடுத்தன. இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுத் தலைவர்கள், இந்தியத் தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள், ஐக்கியநாடுகளின் சபையின் கூட்டங்கள், உலகில நடக்கும் பேரழிவுகள், போர்கள் என பலவற்றை  இந்தப் படங்கள் இந்தியப் பார்வையாளர்களுக்குக் காட்சிகளாக வழங்கின. பொது அறிவு வேண்டுவோருக்கு இந்தப் படங்கள் நன்மை பயத்தன என்று சொன்னால் மிகை ஆகாது.




மேலும் பிலிம்ஸ் டிவிசன் இது போன்ற பிரச்சாரப் படங்களை எடுத்ததோடு, நவீன இந்தியாவிற்கு பொதுமக்களைத் தயார்படுத்தும் வேலையையும் செய்தது. தேசிய கீதத்தை எப்படிப் பாடுவது, சக மனிதர்களை மரியாதையாக நடத்துவது, குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருப்பது, நேரத்தைக் கடைபிடிப்பது போன்ற அறிவுரைப் படங்களும் எடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், தடுப்பூசி, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சத்தான உணவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அந்தப் படங்கள் விளக்கின


இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைகள், தேர்தல்கள், பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள், திறப்புவிழாக்கள், உதவித் திட்டங்கள் வழங்கும் அரசு விழாக்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திக்குறிப்புகளை இந்தப் படங்கள் ஆவணப்படுத்தி மக்களுக்கு இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளின் மூலம் பரவலாக்கின


பிரதமர், ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாட்டின் முக்கியத் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரைப் பற்றிய அறிமுகத்தையும் பிலிம்ஸ் டிவிசன் படங்கள் மக்களுக்கு வழங்கின.


நூற்றுக்கணக்கான பிரபல நபர்களைப் பற்றிய வரலாற்றுப் படங்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இசைக்கலைஞர்கள், திருவிழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பக்கலைகள், பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பண்பாட்டு ஆவணக்காப்பகத்தையும் இந்தப் படங்கள் ஏற்படுத்தின


ஏறக்குறைய பின்னாட்களில் தூர்தர்சன் எனும் அரசுப் பொதுத் தொலைக்காட்சி செய்யக்கூடிய ஒன்றிய அரசின் சார்பான பிரச்சார வேலைகளை தொடக்கத்தில் கருப்பு வெள்ளையில், பிறகு வண்ணப்படங்களாக, 35 எம்.எம். (35mm) திரைவடிவில் மிகத் தரமான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை. படத்தொகுப்பு, கலை வடிவத்துடன், தேவைப்பட்டால் நல்ல நடிகர்களின் உதவியுடன், ஆண் பெண் இருவரின் தீர்க்கமான குரல்களில்  வர்ணனையுடன், இந்த பிலிம்ஸ் டிவிசன் ஆவணப்படங்கள் திறம்பட செய்தன.


இந்தப் படங்களை பிலிம்ஸ் டிவிசனின் முழு நேர ஊழியர்களாக இருந்த தொழிற்நுட்பக் கலைஞர்கள் தயாரித்ததோடு, தற்காலிக ஊழியர்களும் பங்கேற்றனர். சிலர் வெளியிலிருந்தும் ஆவணப்படங்களைத் தயாரித்துக் கொடுத்தனர். இதில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள், திறமையானவர்கள், புதியவர்கள், பழையவர்கள், வெளிநாட்டவர் ஆகியோரும் அடங்குவர். இவை கலவையான சில திரை முயற்சிகளுக்கும் வழிவகுத்தன


பிலிம்ஸ் டிவிசன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மகராஷ்டிர மாநிலத்தின் மும்பை (அந்தக் காலத்து பாம்பே) நகரத்தில் இருந்ததால், அந்த நகரம் ஏற்கனவே இந்தித் திரைப்படத்தின் தலைநகரமாக இருந்ததால், ஆவணப்பட இயக்குனர்கள், கலைஞர்கள் அந்த நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கினர். பக்கத்து நகரமான பூனாவில் இந்திய அரசின் திரைப்படக் கல்லூரி தொடங்கப்பட்டு (1960) அங்கிருந்து வரும் புதிய இயக்குனர்களுக்கு, கலைஞர்களுக்கு இந்தித் திரைப்படத்துறையும், பிலிம்ஸ் டிவிசன் நிறுவனமும் வேலை வாய்ப்பைக் கொடுத்து ஈர்த்தன.


அறுபதுகளுக்குப் பிறகு பிலிம்ஸ் டிவிசன் தயாரித்த குறிப்பிட்ட சில படங்கள் வெறும் அறிவுரை, பிரச்சார, விளக்கப் படங்களாக இல்லாமல், கவித்துவமான, வடிவ ரீதியான பரிசோதனை முயற்சிகள் கொண்ட, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிற படங்களாகவும் இருந்தன. குறிப்பாக இந்திரா காந்திஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரியாகப் பதவி ஏற்ற பிறகு (1964) பிலிம்ஸ் டிவிசன் இப்படிப்பட்ட வெளிக்குரல்களுக்கு அதிகம் இடம் கொடுக்கத் தொடங்கியது. இந்திரா காந்திக்கும் பல இயக்குனர்களுக்கும் இருந்த தனிப்பட்ட நட்பும், இத்தகைய முயற்சிகளுக்கு இடம் கொடுத்தன



எஸ் என் எஸ் சாஸ்திரி இயக்கிய என் வயது 20 (I am 20) மற்றும் அமீர் கான் (Amir Khan), சுக்தேவ் இயக்கிய இந்தியா 67 (India 67) மற்றும்வெகுதூரம் போகவேண்டும்’ (Miles to Go), லோக்சென் லால்வானி இயக்கியஅவர்கள் என்னை சமார் என்று அழைக்கிறார்கள் (They Call me Chamar), மணி கெளல் இயக்கியவருகை’ (Arrival), மற்றும் சித்தேஸ்வரி (Siddeshwari) போன்ற படங்கள் ஆவணப்படங்களுக்கான புதிய திரைமொழி உருவாக்கத்தில், மெருகேற்றுவதில், வளர்த்தெடுப்பதில் உறுதியான பாய்ச்சல்களைக் கொண்டிருந்தன.


சத்யஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபால கிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், அரவிந்தன், குல்ஷார் போன்ற பிரபலமான திரைப்பட இயக்குனர்களும் பிலிம்ஸ் டிவிசன் நிறுவனத்தோடு இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படங்களை அவர்களது பாணிகளில் எடுத்துள்ளனர்


இப்படிப்பட்ட பரந்துபட்ட வரலாற்றைக் கொண்டிருந்த பிலிம்ஸ் டிவிசன் நிறுவனம் தான் எழுபதுகளின் நடுப்பகுதி வரை, குறிப்பாக இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைக் காலம் வரை, இந்திய ஆவணப்படத்திற்கான மையமாக இருந்தது


அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், ஒடுக்குமுறைகள்சித்ரவதைகள், கொலைகள் மற்றும் மாற்றங்கள், இந்தியாவின் பல பகுதிகளில் புதிய சுதந்தரமான, மக்கள் மையக் கலை, இலக்கிய, திரைப்பட, நாடக முயற்சிகளுக்கு வழிவகுத்தது போல, ஆனந்த் பட்வர்த்தன் என்கிற இளம் இயக்குனரின் வருகையோடு, அவசர கால நிலையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு  எதிராக  அவர் இயக்கியமனச்சாட்சியின் கைதிகள்’ (Prisoners of Conscience) என்கிற படத்தோடு, புதிய ஆவணப்படங்களுக்கான் அலை தொடங்கியது என்று துணிந்து சொல்லமுடியும்.


இந்த மாற்றங்கள் பிலிம்ஸ் டிவிசனுக்கு வெளியே காத்திரமான, விடுதலைக்கான கலகக்குரல்களைப் பிரதிபலிக்கும், மாற்றுப் பார்வைகளை வெளிப்படுத்தும் எதிர் ஆவணப்படங்கள் தோன்றுவதற்கும் பல நகரங்களில் இருந்து புதிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வருவதற்கும் காரணமாக அமைந்ததோடு, பிலிம்ஸ் டிவிசனை மையமாகக் கொண்ட இந்திய அரசின் சார்பான ஆவணப்பட உலகத்தை நீர்த்துப் போகவும் வைத்தன.


அமுதன் ஆர்.பி.

19 நவம்பர் 2024 








Wednesday, October 30, 2024

"உழைப்பு விடுதலையைக் கொடுக்கும்"

உழைப்பு விடுதலையைக் கொடுக்குமா? - அமுதன் ஆர்.பி.

2003ம் ஆண்டு வெளிவந்த எனது "பீ" எனும் ஆவணப்படத்தில் நான் பயன்படுத்திய கதைசொல்லும் உத்தியைப் புரிந்து கொள்ளமுடிந்தது, ஆனால் விளக்கமுடியவில்லை. அப்படியே முயற்சித்தாலும், அது எங்காவது போய் முட்டுச்சந்தில் நினறு விடும். விளக்கமாக, நீண்ட அரசியல் பேசுவோம், ஆனால் அந்த உத்தியை விளக்கமுடியாது போய்விடும்.

அதற்கு இன்று விடை கிடைத்தது.

1940களில் ஹிட்லரின் நாஜி படையினரின் ஆஷ்விட்ஸ் வதை மற்றும் கொலை முகாம்களைப் பற்றி நான் படித்துக்கொண்டிருக்கும் போது, அவர்கள் நடத்திய அனைத்து வதை முகாம்களின் வாயில்களிலும் “Arbeit macht frei” - 'உழைப்பு விடுதலையைக் கொடுக்கும்' என்று பொருளில் வாசகங்களை அச்சிட்டிருந்தனர் என்று அறிந்தேன்.

அதே தலைப்பில் எழுதப்பட்ட ஒரு நாவலில் இருந்த எடுக்கப்பட்ட அந்த வாசகத்தின் முக்கியத்துவம், அந்த நாவலில் கருவில் இருந்து நமக்குப் புலப்படுகிறது.

சூதாட்டக்காரனாகவும் மோசடிப்பேர்வழியாகவும் இருக்கிற அதன் கதைநாயகன், தனது வேலையை ஒழுங்காகச் செய்வதே தர்மம் என்று நினைக்கிறான் என்பது போல அந்த நாவல் போகிறது.


இதை ஏன் வதைமுகாம்களின் வாயில்களில் எழுதிவைத்தார்கள்?

அந்த வதைமுகாம்களில் ஏறக்குறையப் பத்தாண்டுகளில் - குறிப்பாக ஆஷ்விட்ஸ் முகாமில் லட்சக்கணக்கானோர் விதவிதமாகக் கொலை செய்யப்பட்டனர். ஆனால் அங்கு வேலை செய்யும் அதிகாரிகளில் பலர் அதை ஒரு வெறும் வேலையாகச் செவ்வனே செய்தனர். அல்லது அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டனர்.

இரவில் இலக்கியம் படிப்பார்கள், மேற்கத்திய செவ்வியல் இசை கேட்பார்கள், காலையில் வதை முகாம்களில் வேலைக்குப் போனார்கள்.

நாஜிக்கள் இதை ஒரு வேலையாகச் சுருக்கியதால், வதைமுகாம்களில் வேலை செய்த சாதாரண மனிதர்கள் கூட, கொலைகளை எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி துரிதமாகச் செய்தனர். புதிய புதிய உத்திகளைக் கண்டுபிடித்தனர்.

இந்த இனஅழிப்பிற்கு அவர்களை எப்படிச் சம்மதிக்க வைத்தனர் என்பதை இந்த வாக்கியத்தின், அதன் பின்னணியில் இருந்த நாவலில் இருந்து அறிய முடிகிறது.

இப்போது எனது ஆவணப்படத்திற்கு வருவோம்.

2001ல் நான் எனது பட நாயகியான மாரியம்மாளை எனது ஆவணப்படத்திற்காகச் சந்தித்த போது, தாம் துப்புரவுப் பணி செய்கிறோம், மலம் அள்ளுகிறோம் என்பதைப் பற்றி எந்தக் கூச்சமோ, வருத்தமோ, கோபமோ இல்லாதது போல, வேக வேகமாக, துரிதமாக, துல்லியமாக அதை ஒரு வேலையாகச் செய்தது என்னைத் திகைக்கவைத்தது.

இந்த ஊரில், உலகில் நான் வாழவேண்டுமெனில், எனது பிள்ளைகளை வளர்க்கவேண்டுமெனில், எனது கடன்களைக் கட்டவேண்டும் எனில், எனது வேலையை, வெறும் வேலையாக மட்டும் தான் பார்க்கவேண்டும், நாறுகிறது, குமட்டுகிறது, இது நியாயமா, என்னை இப்படி அள்ளவைக்கலாமா? இது சரியா, இதைக் கேட்க ஆளில்லையா என்றெல்லாம் யோசித்தால் இங்கு பிழைக்கமுடியாது என்று அவரும் - நாஜி வதை முகாம்களில் வேலை பார்த்த அதிகாரிகளைப் போல - இந்தச் சமூகத்தினால், அமைப்பினால், அரசாங்கத்தால், தமது சக ஊழியர்களினால், தம் குடும்பத்தினரால், சம்மதிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

ஜாதியக் கட்டமைப்பும், மதமும், ஆணாதிக்கமும், அதிகார வர்க்கமும், நவீன சமூகமும், அரசும் அவரை மூளைச்சலவை செய்துள்ளனர். அதன் விளைவாகவே,

இப்போது கூட மோடி துப்பரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவுவது அதனால் தான். 'நீங்கள் தியாகிகள், நீங்கள் செய்வது புனிதமான செயல்' என்று சொல்லி அவர்களை மயக்குகிற, ஏமாற்றுகிற உத்தி தான். அதன் மூலம் இந்த வேலை செய்யாதோருக்கும் இருக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து அவர்களை விடுவிப்பதும் அதன் நோக்கமாகும். எப்படியாவது இந்த ஜாதியப் படிநிலை காப்பாற்றப்பவேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். குலக்கல்வித் திட்டம், விஷ்வ கர்மா திட்டம் எல்லாம் இதன் இன்னொரு வடிவங்களே.

இதை நான் படம் எடுப்பதற்கு முன்பு அவரைச் சந்தித்த போதும், படம் எடுக்கும் போது, படத்தைத் தொகுக்கும் போதும் உணர்ந்தேன். 'உழைப்பே விடுதலையைத் தரும்' என்கிற அந்த வாக்கியம் எனக்கு மேலும் தெளிவைக் கொடுத்தது.

அதையே தான் பகவத் கீதை, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது.

Enemy of the State எனும் ஹாலிவுட் படத்திலும் இதன் இன்னொரு வடிவத்தைப் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=a0eWOHAvVn4&t=32s



Monday, October 7, 2024

போர் விமானங்களின் சாகசங்களும் அது தந்த சங்கடங்களும்!

ஏன் இந்த கூட்டம்?

- அமுதன் ஆர்.பி.

போர் விமானங்களைப் பார்க்கத் திரண்ட கூட்டம், நெரிசல், பதட்டம் ஆகியவற்றை வெறும் சிவிக் (பொது வசதிக் குறைபாடு) பிரச்சனையாக மட்டும் நான் பார்க்க மறுக்கிறேன். பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவில்லை என்று திமுக அரசைப் பழிப்போரின் விமர்சனங்களையும் நான் நிராகரிக்கிறேன்.

நேற்று நிகழ்வில் போலி தேசப்பற்று, போர் மோகம், கேளிக்கை தேடல், அறிவியல் / தொழில்நுட்ப ஆர்வம் என பல கூறுகள் இணைந்துள்ளன. ஏதோ ஒரு விசேஷம் என்றதும் கூட்டம் கூட்டமாய் ஓடும் பொதுமக்களின் ஆட்டு மந்தை மனநிலையும் வெளிப்பட்டது.
பிற நாட்டு மக்களை அல்லது மக்களை, காடுகளை, நாடுகளை, ஆறுகளை, வீடுகளை, வயல்களை அழிக்கும் ஆயுதங்களை நாம் ரசிப்பது எப்படி பொழுதுபோக்காகும்? நம்மிடம் ஒளிந்திருக்கும் பாசிசத்தின் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு தான் இந்தக் கொண்டாட்டம். ஒவ்வொரு விமானமும் கோடிக்கணக்கான ரூபாய் பெருமானவை. அதைத் தயாரிப்பது எல்லாமே ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் தான். அவர்கள் தான் நாடுகளுக்கு இடையே போர்களை உண்டாக்குவது, ஆயுதங்களை பரவலாக்குவது போன்ற சதிகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் போது, அடிப்படை வசதிகளே இல்லாது இருக்கும் போது இத்தகைய கொண்டாட்டங்கள் கொடூரமானவை, இரக்கமற்றவை, பொறுப்பற்றவை.
அது ஒரு புறம் இருக்க, நம் மக்கள் ஏன் இப்படித் திடீரென்று லட்சக்கணக்கில் கூடினார்கள்?


இதன் பண்பாட்டுக் காரணங்களும் கவனிக்கத்தக்கவை.
சென்னை நகரத்திற்கென்று பொதுவான நகரத்திருவிழா (city festival) என்ற கலாச்சாரம் இல்லை. மேட்டுக்குடியினர் மார்கழித் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அல்லது கோயில் திருவிழாக்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கின்றன. ஆனால் வெகுமக்களுக்கான பொதுத் திருவிழா நம்மிடமில்லை. இசைஞானியின் கச்சேரிகள், ஐபிஎல், புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் என எங்கும் கூட்டம் தான். அவை எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் தான் நடக்கின்றன. மக்களிடம் மனிதவள ஆற்றல், ஆர்வம், உற்சாகம் மிகுதியாக, மீதமாக இன்னும் இருக்கிறது.
இரண்டாயிரத்திற்குப் பிறகு மக்களிடம் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு. இருந்தாலும் ஏதோ ஒரு கொண்டாட்ட வறட்சியும் இருக்கிறது. கோவில் திருவிழாக்களின், கோயில்களின், போலிச்சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதையும் நாம் கவனிக்கலாம்.


சென்னைவாசிகள் நன்றாகக் குடிக்கிறார்கள் (அதையும் நல்லொழுக்கவாதிகள் கெடுக்கப்பார்க்கிறார்கள்), சாப்பிடுகிறார்கள், ஊர் சுற்றுகிறார்கள், பொருட்களை வாங்குகிறார்கள், பணத்தைச் செலவழிக்கிறார்கள், சமூக ஊடகங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.
ஆனாலும் போதவில்லை. அதன் வெளிப்பாடே நேற்று போர் விமானங்களைப் பார்க்க லட்சணக்கணக்கானோர் கூடியது. போர் விமானங்களை ரசிப்பது கெடுதல் இல்லை என்றாலும் அதில் வன்முறை, அழிவு, யுத்தம் ஆகியவற்றின் மீதான அவா வெளிப்படுகிறது.
இந்த இடைவெளியை தமிழ்நாடு அரசு நேர்மறையாக விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், விவாதங்கள் மூலம் நிரப்பலாம். கிண்டியில் மாபெரும் பூங்கா ஒன்றை குதிரைப் பந்தயம் நடந்த இடத்தில் உருவாக்கப்போவதாய் செய்திகள் வருகின்றன. அதே போன்று நிறைய பொது வெளிகள், பொது நிகழ்ச்சிகள், கூடுகைகளை நமது அரசு மக்களுக்காக இலவசமாக அளிக்கவேண்டும். இதுவே இந்த போதாமையைப் போக்க சிறந்த வழியாக இருக்கும்.
ஏற்கனவே திமுக அரசு சென்னை, மதுரை போன்ற நகரங்களில் பெரிய நூலகங்களையும், கத்திப்பாரா போன்ற இடங்களில் வணிக வளாகங்களையும் உருவாக்கியிருப்பதும் கவனத்திற்குரியது. இத்தகைய முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை.
மேலும் நேற்று நடந்ததைப் போல இவ்வளவு பெரிய, ஒரு செக்யூலரான, பொதுவான, அரசியலற்ற கூடுகை இதற்கு முன்பு நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இது ஒரு புதிய பிரச்சனை. மேலும் திடீர் (acute) பிரச்சனை. பெசண்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழவோ காணும் பொங்கலோ வருடா வருடம் நடப்பது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் படிப்படியாகக் கூடியது. அத்தி வரதருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கூடினார்கள். ஆனால் நேற்றைய நிகழ்வு வித்தியாசமானது. திடீரென்று பல லட்சம் பேர் ஒரு பெருவெள்ளத்தைப்போலக் கூடிவிட்டனர். மிகப்பெரிய விபத்து ஏதும் நடக்காமல் இருந்ததே நற்பயன் தான்.
எனவே நமது மாநில அரசு பல கூடுகைகளை வருடம் முழுக்க நடத்துவதன் மூலம் தான் இந்த அலைபாய்தலையும் அதன் மூலம் ஏற்படும் பதட்டத்தையும் குறைக்க முடியும். (காவல்துறையினரை அதிகரிப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது, கழிப்பறைகள் அமைப்பது, ஆம்புலன்ஸுகளை தயார் படுத்துவது, போக்குவரத்தை நெறிப்படுத்துவது என்பதெல்லாம் தற்காலிகத் தீர்வு தான்).
போர், பக்தி, ஆட்டு மந்தை மனநிலை போன்ற மூடப்பழக்கவழக்கங்களிலிருந்தும் மக்களைக் காக்க முடியும்.

Friday, February 2, 2024

விஜய் ஆரம்பித்த இக்கற்ற கட்சி!

தமிழர் அரசியலில் இன்னும் ஒரு நடிகர்!

அமுதன் ஆர்.பி.


நடிகர் விஜய்யின் அரசியல் வரவைக் கொண்டாடும் பலருக்கு தமிழ்நாட்டு அரசியல் பற்றி புரிதல் இல்லை என்று சொல்லலாம் அல்லது தமிழ்நாட்டு அரசியல் மீது (பார்ப்பனர்கள் உருவாக்கிய ) வெறுப்பு என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை எடைக்குறைப்பு செய்ய நினைக்கும் சக்திகள் தான் தொடர்ந்து அந்த நடிகர் வருவாரா இந்த நடிகை வருவாரா என்று பரப்புரை செய்கின்றனர்.
தமிழர்களுக்கு அரசியல் அறிவு இல்லை, அவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், காசுக்கு வாக்களிப்பவர்கள், சினிமாவுக்கு மயங்குபவர்கள், குடிப்பவர்கள் என்று நம்மைத் தொடர்ந்து மட்டம் தட்டும் வேலைகளும் சதிகளும் நடக்கின்றன.
இந்தியாவிலேயே அதிகம் வறுமையைக் குறைத்த மாநிலம் என்றோ அதிகத்தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் என்றோ அதிக ஆட்டோமொபைல் உற்பத்தி செய்கிற மாநிலம் என்றோ அதிக மருத்துவர்கள் இருக்கிற மாநிலம் என்றோ அதிகப் பெண்கள் வேலைக்குப் போகிற, அதிக அரசுப் பேருந்துகள் ஓடுகிற, கல்லூரிக்குப் போவோர் விகிதம் அதிகம் இருக்கிற மாநிலம் என்றோ இவர்கள் சொல்லமாட்டார்கள்.
மிகக்குறைவான ஆறுகள், ஒரே ஒரு பருவமழைக்காலம் ( அது கூட புயலாகத் தான் தாக்கும்) இந்தியாவின் தலைநகரில இருந்து வெகு தூரம் என பல எதிர்மறை அம்சங்கள் இருந்தும் கூட நாம் வளர்ந்துள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சி மற்றும் வெற்றி.
தமிழ்நாட்டு மக்கள் மதநல்லிணக்கம், தமிழ்ப்பற்று, பெண்கள் சுதந்தரம், பார்ப்பனர் அல்லாத பக்தி, முன்னேறும் உத்வேகம், பல பண்பாடுகளுடான அறிமுகம், பெரிதான வன்முறையற்ற வாழ்க்கை முறை, கல்வியில் ஆர்வம், இந்தியாவை எட்ட நின்று ஆதரிக்கும் அளவான தேசப்பற்று, எளிமை, அந்நியர்களை அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டவர்கள்.
வள்ளுவர், பண்டிதர், வள்ளலார், சிங்கார வேலர், சிதம்பரனார், பெரியார், அண்ணா, கலைஞர் மாதிரியான அறிஞர்கள் வாழ்ந்த, வேலை செய்த நிலம் இது.
பெரியாரிய, அம்பேத்கரிய, மாரக்சிய, தமிழ்த்தேசிய, பெண்ணிய, சூழலியல் மற்றும் பாலியல் சிறுபான்மையினர் அரசியற் கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன அல்லது முக்கியப் பங்காற்றுகின்றன.
நமக்கென்று தனித்த குணம் இருப்பதனால் தான் நாம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருக்கிறோம். இங்கே விழிப்பான சிவில் சமூகம் உயிர்ப்புடன் இருக்கிறது.
இந்தியாவின் பிரதானப் பிரச்சனையான பார்ப்பனியத்தை நம்மைப் போல எந்த மாநிலமும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து வெற்றிபெறவில்லை. இப்போது தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி பார்ப்பனர் அல்லாதோர் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்று பிற மாநிலங்களில் ஆய்வு நடத்தப்போகிறார்கள். நாம் பல நூறு மைல் தூரம் முன்னேறியிருக்கிறோம்.
நம்மை இழிக்கவும் பழிக்கவும் பல நடிகர்களை நம் முன் இறக்கிப் பார்க்கிறார்கள்.
எல்லோரும் மண்ணைக் கவ்விக் கொண்டு ஓடியிருக்கிறார்கள், ஓடுவார்கள். புத்திசாலித்தனமாக ரஜினி தப்பித்தார். இல்லையென்றால் இந்நேரம் சில நூறு கோடிகளை இழந்து தமது காயங்களை நக்கிக்கொண்டிருப்பார். சிவாஜி, ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பலர் காயம் பட்ட அறிவுக்களம் இது. விஜய்க்கு என்ன கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
விஜய் சில பல நூறு கோடிகளை இழப்பாரா அல்லது பாஜகவுக்கு உள்ளடி வேலை பார்த்து தனது கருப்புப்பணத்தைக் காப்பாற்றுவாரா என்று பார்ப்போம்

Wednesday, February 1, 2023

பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் ஒரு நல்வரவு!

அறிவுச்சமூகத்தை நோக்கி முன்னேறுவோம் - அமுதன் ஆர்.பி.

பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் பலவிதங்களில் நமக்கு முக்கியமான ஆவணம்.

நாம் பல சமயங்களில் சங்கிகளுடனும் பக்தர்களுடனும் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் முட்டி மோதிக்கொண்டிருக்கும் போது எப்போதும் எல்லாத்தரவுகளுடனும் இருப்பதில்லை. நாம் ஒன்றை எழுப்பினால் சங்கிகள் இன்னொன்றைப் பேசுவார்கள். நாம் அதற்கு பதில் சொன்னால் வேறொன்றுக்குப் போவார்கள். எப்படியாவது நமது முதன்மையான புகாரிலிருந்து விவாதத்தை எங்கோ நகர்த்திச்சென்று நம்மை அயர்ச்சி அடையச் செய்வதோடு, நாம் எழுப்பிய கேள்வியின் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச்செய்வார்கள்.

மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் இந்த சித்து விளையாட்டை முறியடிக்கிறது. மோடி மேல் கணக்கில்லா குற்றச்சாட்டுக்களை வைக்காமல், குஜராத் இனப்படுகொலை, ஹரேன் பாண்டியா படுகொலை, அதைக் கேள்வி கேட்ட காவல்துறையினர் கைது, குல்பர்க் சொசைட்டியில் கலவரக்காரர்களால் தமது தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு முதல்வர் மோடியாடு தொலைபேசியில் பேசிய முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட 60 பேர், அப்போது இங்கிலாந்திலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களின் படுகொலை, அதில் கிடைக்காத நீதி என முதல் பாகத்தில் அளவான புகார்களை நிதானமாக, ஆதாரங்களுடன் வைக்கிறது. அது மட்டுமின்றி வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பாஜக பிரமுகர் ஸ்வபன் தாஸ் குப்தா, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி மற்றும் ஒரு பாஜக ஆதரவாளர் ஆகியோரது கருத்துக்களைப் பதிவு செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் மறுப்பு இல்லாமல் சேர்க்கப்படவில்லை.

இரண்டாவது பாகத்தில் மாட்டுக்கறி படுகொலைகள், காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டது, சிஏஏவிற்கு எதிரான மக்கள் போராட்டம், அதை காவல்துறையினரை, அடியாட்களை, சங்கிகளை வைத்து முறியடித்தவிதம், பல்கலைக் கழக மாணவர்கள் அவர்களது வளாகத்திற்குள்ளேயே கொடூரமாகத் தாக்கப்பட்டவிதம் என குறிப்பான சிலவற்றை மீண்டும் ஆதாரங்களுடன், மறுப்புடன், நிதானமாக, ஆழமாக இந்தப் படம் விவாதிக்கிறது.

சுயபுத்தியுள்ள, பகுத்தறிவுள்ள, குறைந்த பட்சம் சுரணையுள்ள எந்த மனிதருக்கும் இந்த இரண்டு பாகங்கள் எழுப்பும் கேள்விகளின் நியாயம் புரியும்.

இந்தப்படத்தை ஒரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம், அதுவும் ஆயிரக்கணக்கான ஆவணப்படங்கள் எடுத்த அனுபவம் கொண்ட பிபிசி நிறுவனம் எடுத்திருப்பதால் உள்ளூர் அரசியலின் தாக்கமில்லாமல், தள்ளி நின்று, பொதுவான மனிதர்களையும் சேரும் வண்ணம், அவர்களும் நம்பும் வண்ணம், மிகவும் கச்சிதமாக திரைக்கதை (பல தொலைக் காட்சி ஆவணப்படங்கள் எழுதித் தான் எடுக்கப்படுகின்றன) உருவாக்கமும் படத்தொகுப்பும் நிகழ்ந்திருக்கிறது. 

இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களையும் கிளாசிகல் தொலைக்காட்சி புலனாய்வுப் படங்கள் என்று உறுதியாகத் துணிந்து சொல்லமுடியும். முக்கியமாக முரட்டு அடி, மட்டை அடி என போகிற போக்கில், அவசரகதியில், பொத்தாம் பொதுவாக எந்தக் காட்சியும் இல்லை. அதே போல ஒரு பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பதால், பல தரப்பட்ட கோப்புக் காட்சிகள் பல இடங்களில் இருந்து கவனமாகச் சேகரிக்கப்பட்டு படத்தில் சரியான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு பல ஊர்களுக்கு இந்தப் படம் நம்மை அழைத்துச் செல்கிறது. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை விவாதிக்கத் தேவையான அனைத்துத் தரவுகளும் போதுமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. போதுமான நேரம் ஓவ்வொரு விவாதப்பொருளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்றே சொல்லமுடியும். ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை பட்டிமன்ற ரீதியில் கேலிக்கூத்தாக்கி, உணர்ச்சிமயமாக்கி, பேசவேண்டிய பொருட்களைப் பேசாமல், குத்துச்சண்டை மாதிரி விவாதம் நடத்தும் இவர்களுக்கு இந்த படத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.

ஏனெனில் நம்மிடம் பணம் இருக்கிறது. ஆனால் ஆவணப்படம் எடுப்பதற்கான மெனக்கெடல் இல்லை. அது அவ்வளவு முக்கியம் என்றே நாம் நினைப்பதில்லை. கதை சொல்லியே காலம் கடத்திவிடமுடியும் என்பதால் தான் சீமான் நம் ஊரில் பெரிய அரசியல்வாதியாக இருக்கிறார்.

ஆவணம் என்பதே கூடாது என்று நினைக்கிற ஆரியக் கூட்டத்தின் அடிமைகள் தானே நாம்! எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், காதும் காதும் வைத்த மாதிரி தானே பார்ப்பனியம் தமது ஆதிக்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்திவருகிறது. 

பிபிசி தயாரித்த மோடி பற்றிய இந்த ஆவணப்படம் மோடியைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, ஆவணப்படம் என்ற வடிவத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்று ஒரு ஆவணப்பட இயக்குனராக, ஆவணப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளராக, நான் உறுதியாக நம்புகிறேன்.

மீம்ஸ் மாதிரி நொடிப்பொழுது சம்பாஷனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இரண்டு மணி நேர ஆவணப்படம் வந்திருப்பதும் அது வெகுமக்களை பெரிதும் பாதித்திருப்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வெனக் கூறலாம். இப்போதெல்லாம் யார் பெரிய படங்கள் பார்ப்பார்கள் என்று வியாக்கியானம் செய்யாமல், நம்மையும் நம் சந்ததியினரையும் காக்க, இப்படி ஆழமான உரையாடல்களை நம்மிடையே உருவாக்குவோம். 

இதே போல பல புலனாய்வு ஆவணப்படங்கள் தமிழில் வரவேண்டும். அதை இங்கிருக்கும் கட்சிகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும், மக்கள் இயக்கங்களும் முன்னெடுக்கவேண்டும். வெறும் வாய்ச்சவடால்களால் தொடர்ந்து காலம் கடத்திவிடமுடியாது. குறிப்பாக அறிவே கூடாது என்று வெறித்தனமாக அரசியல் செய்யும் சங்கிகள் மத்தியில் அவர்களைப் போல வெற்றுக்கூச்சல் சாக்கடையில் விழுந்து புரளாமல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரும், சாக்ரடீசும், அரிஸ்டாட்டிலும், ப்ளேட்டோவும் உருவாக்க நினைத்த அறிவுச்சமூகத்தை நோக்கி முன்னேறுவோம்.

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...