கேரளாவில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கலைஞர்களை, அறிவாளிகளை, படைப்பாளிகளை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வார்கள்.
புலம் பெயர்ந்த தமிழர்களும் அதையே செய்வார்கள்.
அதன் பொருள், தாம் நன்றாக இருக்கிறோம். அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விட்டோம். இப்போது நல்லவற்றை ரசிப்போம் என்பதாகும்.
ஆனால் தமிழ்நாட்டில் நாம் என்ன செய்கிறோம்?
பத்தாண்டுகளுக்கு முன்பே வறுமையை ஒழித்துவிட்டோம். ஏழ்மை இருக்கிறது. அதை கல்வி, வேலை வாய்ப்புகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு சரி செய்ய முயல்கிறோம்.
பொருளாதாரத்தில், மனிதவள மேம்பாட்டில் வளர்ந்திருக்கிறோம். இந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்ளும் அறிவை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவில்லை.
நமக்கு எது நல்லது என்கிற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளவில்லை.
நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வோர் யார் என்பதை அறியாத தற்குறிகள் நாம்.
குஜராத்தியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பாதிக்க, செலவழிக்க, சாமி கும்பிட, சாப்பிட என்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மோடி தான் 2002 இனப்படுகொலையை நடத்தினார் என்று தெரிந்தும் அவரைப் பதினைந்து ஆண்டுகள் முதல்வராக வைத்திருந்தனர். ஏனெனில் அவர் குஜராத்தின் வளர்ச்சியைப் பாதுகாத்தார். இப்போதும் பாஜக தான் ஆட்சியில இருக்கிறது. தமது வளர்ச்சிக்கு பாஜக தான் சரியென்று முடிவெடுத்தார்கள்.
கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஜாதி, மதம், கோவில், நம்பிக்கைகள், ஆணாதிக்கம், ஊழல் எதையும் விடவில்லை. ஆனால் ஒரு நவீன மாநிலத்தை உருவாக்க வேண்டும் நூறாண்டுகளுக்கு முன்பு யோசித்தனர். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே வாக்களித்து தம்மை வளர்த்துக் கொண்டனர். பாஜகவைத் தள்ளி வைத்திருக்கின்றனர். தமது வளர்ச்சியை எப்போதும் பெருமையாக நினைக்கின்றனர்.
ஆனால் நம்மை வளர்த்து விட்டவர்கள் யார் என்று இன்னும் தமிழர்களுக்குத் தெரியவில்லை. அவர்களை திட்டுவதே முழு வேலையாகவே இருக்கின்றனர். எதிரிகள் சொல்லும் பொய்களை விடாது நம்புகின்றனர். தம்மைக் காக்கும் கட்சியை தோற்கடிப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். தமது நலன் முக்கியமென்று எப்போது உணர்வார்கள்?
உதயநிதியை துணை முதல்வராக்கலாமா என்று கொதிக்கின்றனர். உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல்வராக எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்று பார்க்க மறுக்கின்றனர். சனாதனத்தை ஒழிப்போம் என்று துணிச்சலாக முழங்கியதோடு அதில் உறுதியாக நின்றார். வழக்குகளை முறியடித்தார்.
ஒரு அரசியல்வாதியாக மிகுந்த மாண்போடு நடந்து கொண்டார். அவரை விட ஓடி ஒளியும் பொய்களை மட்டும் பேசும் விஜய் எப்படி சிறந்த தலைவராவார்?
தம்மை மதிக்கும் அரசியலைவிட, தம்மை மிதிக்கும் அரசியல் ஏன் தமிழர்களுக்குப் பிடிக்கறது? நிஜத்தை விட நிழல் ஏன் பிடிக்கிறது?
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குநர்
சென்னை
25 மே 2026
No comments:
Post a Comment