Saturday, July 16, 2016

டாலர் சிட்டி எனும் எனது ஆவணப்படம்

டாலர் சிட்டி எனும் எனது ஆவணப்படம் 
- அமுதன் ஆர்.பி.




 இயக்கியிருக்கும் டாலர் சிட்டி எனும் ஆவணப்படம், திருப்பூர் நகரை கதைக் களமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பனியன் தொழிலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது.

இந்தப் படம் பல சரடுகளைக் கொண்டது. 

படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், பேட்டிகள் அவரவர் பின்னணியை, புரிதலை, வாழ்க்கையை, ஆசைகளை மட்டுமே வெளிப்படுத்தும். யாரும் யாரையும் குறை சொல்ல மாட்டார்கள். அவரவர் நியாயத்தைச் சொல்வர்.

திருப்பூரில் நடைமுறையில் இருக்கும் வளர்ச்சி மாதிரியை அதன் உளவியலை வெளிக்கொணர முயலும் படம் என்று சொல்லலாம்.

இந்த மாதிரியை எல்லோரும் எப்படி நடைமுறைப்படுத்துகின்றனர், அதற்கு எப்படி தமது பங்கைச் செலுத்துகின்றனர் என்று தமது வாழ்க்கைக் கதைகள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர்.

இதற்காக தாம் செய்து கொண்ட சமரசங்களை மறைத்தும் மறைக்காமலும் சொல்கின்றனர்.

என்ன ஆனாலும் பனியன் தொழில் வளரவேண்டும் என்கின்றனர்.

திருப்பூருக்கு வந்ததினால் தாமும் தம் சந்ததியும் பிழைத்தோம் என்கிறார் ஒரு தலித் பெண்மணி.

அரசு பனியன் தொழிலுக்கு பல சலுகைகள் கொடுத்தது என்றும் இப்போது இல்லை என்றும் கவலைப் படுகிறார் ஒரு சிறு முதலாளி.

நான் பிழைக்க வந்து இப்போது ஒரு சிறிய முதலாளி ஆகிவிட்டேன் என்றும் பல சர்வதேச ப்ராண்டுகளுக்கு உற்பத்தி செய்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இன்னும் வளரவேண்டும் என்றும் பெருமைப்படுகிறார் ஒரு சிறு முதலாளி.

என் முதலாளி ஒரு சகோதரன் போல என்னைக் காக்கிறார் என்றும் அவருக்காக இரவு பகலாக உழைத்தால் தான் நல்லது என்கிறார் ஒரு தொழிலாளி.

என் கணவன் சம்பாதிப்பது பற்றாமல் நானும் வீட்டில் இருந்தே உழைக்கிறேன் என்கிறார் ஒரு பெண்.

இன்னும் பலர் பனியன் தொழிலைக் கொண்டாடுகின்றனர்.

20 ஆண்டுகளாக வேலை நிறுத்தமே இல்லை என்கிறார் முதலாளிகளின் சங்கத் தலைவர்.

தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்காக நிறைய உழைத்திருக்கிறது என்றும் இப்போது பல தொழிலாளர் நல விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்கிறார் ஒரு தொழிற்சங்கத் தலைவர்.

இவர்கள் எல்லோரும் பனியன் தொழிலை ஆதரிக்கும் போது விசைத்தறி தொழிலாளர்கள் தமக்கு சம்பளம் போதவில்லை என்று வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் பெண் ஒருவர் எனக்கு பனியன் தொழில் வேண்டாம் என்கிறார். 

நெசவில் எனக்கு சுதந்தரம் இருக்கிறது. உரிமை இருக்கிறது என்கிறார். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்கிறார்.

இதற்கிடையில் தொழிலாளர்களுக்காகப் போராடும் இடது சாரிக் கட்சிகள் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைகின்றனர்.

அவர்கள் எதிர்க்கும் மோடி வெற்றி பெறுகிறார்.



Tuesday, July 5, 2016

பெருமாள் முருகனுக்கு ஆதரவான போராட்டத்திற்கு வெற்றி!

கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு


மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக இந்து முன்னணியும் சாதிய சக்திகளும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் பொய்ப் பிரச்சாரம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததை ஒட்டி 2015 டிசம்பரில் பனுவல் புத்தக நிலையத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம்.
சிறிய கூட்டம் தான். ஆனால் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்பாராதவிதமாக பெருமாள் முருகனே வந்திருந்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அன்று நடந்த கலந்துரையாடலின் இறுதியில் கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.
இரண்டு நாட்களில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். தோழர்கள் திருமாவளவன், நல்லக்கண்ணு, அ.மார்க்ஸ். வ.கீதா, வசந்திதேவி மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்தினோம். பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் வந்து தள்ளுமுள்ளு ஏற்படுத்த முயன்றனர். என்னை இழுத்துப்போக முயன்றனர். தோழர்கள் வீ.அரசு. பிரின்ஸ் கஜேந்திரபாபு, மயிலை பாலு ஆகியோர் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக நான் விடுவிக்கப்பட்டேன்.
அதன் தொடர்ச்சியாக வள்ளுவர் கோட்டம் அருகே தமுஎகச மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியோருடன் இணைந்து கண்டனக் கூட்டத்தை நடத்தினோம்.
பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராடத்தை நடத்தினர். கூட்டங்களை நடத்தினர்.
தமுஎகச சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமுகஎகசவின் முன் முயற்சியில் சரிநிகர் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் மூலமாகவும் கருத்துரிமையைப் பாதுகாப்போம் என்கிற முழக்கம் வலுவாக முன்வைக்கப்பட்டது. கவிக்கோ அரங்கில் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.
பியூசிஎல் சுரேஷ் அவர்களும் காலச்சுவடு சார்பாக வாதாடினார் என்பதை அறிகிறோம்.
ஒரு வருடத்திற்கு மேலான போராட்டத்தின் விளைவாக இன்று ஒரு அரிய தீர்ப்பு வந்திருக்கிறது.
எல்லோருக்கும் வாழ்த்துகள்.
கருத்துரிமையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம்.
பின்குறிப்பு :
இந்தப் போராட்டமும் தமிழ் கூறும் நல்லுலகின் அவதூறுகளில் இருந்து தப்பிக்கவில்லை.பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காலச்சுவடு பதிப்பகத்தின் வியாபார உத்தி என்றும் அதைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள் அப்பாவிகளாக போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றும் எங்களைப் பலர் எள்ளி நகையாடினர்.
பெருமாள் முருகனைப் பயந்தாங்கொள்ள்ளி என்றும் கோழை என்றும் ஏளனம் செயதனர்.
பலர் அவரது "எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான்" என்கிற அறிக்கையின் முக்கியத்துவத்தை உணர மறுத்தனர். சக எழுத்தாளர்கள் பலர் அவருக்குக் கிடைத்த கவனத்தைப் பார்த்து பொறாமை கொண்டனர்.
சென்னைப் புத்தக கண்காட்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பெருமாள் முருகனுக்கு எதிராக நஞ்சைக் கக்கினார். அவர் எழுத்து குப்பை என்றார். அதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த தோழர் மயிலை பாலு தன்னைக் கொல்ல வந்தார் என்று பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் செய்கிறார்.
பெருமாள் முருகன் இன்னும் போராடியிருக்க வேண்டும் என்றனர் பல போராளிகள். கொங்கு பகுதியில் நிகழும் வன்முறையின் உக்கிரத்தை யுவராஜ் போன்றவர்களின் வளர்ச்சிக்குப் பிறகே பலர் அறிந்து கொண்டனர்.
இதே திருச்செங்கோடு கோவிலில் ஒரு கவுண்டர் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த காரணத்திற்காகக் தான் கோகுல்ராஜ் எனும் தலித் இளைஞர் சாதி வெறியர்களால் கொலை செய்ய்யப்பட்டார் என்பதை அந்த சந்தேகப் பிராணிகள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பெருமாள் முருகன் எப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் வேலை செய்து வந்தார் என்பதையும் அவரது இக்கட்டான நிலையையும் இப்போதாவது அவர்கள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Thursday, June 2, 2016

குஜராத் 2002 படுகொலை - குல்பர்க் சொசைட்டி வழக்கில் தீர்ப்பு!

24 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!



குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் 2002ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.
முதல்வர் மோடியின் ஆதரவுடன் பாஜக, வி.எச்.பி.யினர் முன்னின்று காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடத்திய கொடூரப் படுகொலைகள் குஜராத்தில் பல்வேறு இடங்களில் நடந்தன.
அதில் ஒன்று குல்பர்க் சொசைட்டி படுகொலை. 69 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சொசைட்டியே எரித்து சாம்பலாக்கப்பட்டது.
அந்த வழக்கு ஏறக்குறைய 14 ஆண்டுகள் நடந்தது.
இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
24 பேருக்குத் தான் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில் 11 பேர் மீது தான் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
யார் மீதும் சதித் திட்டம் திட்டியதாக குற்றம் சாட்டப்படவில்லை.
2000 பேர் கூடி நடத்திய கொலைத் தாக்குதல் இது.
வி.எச்.பி.தலைவர் அதுல் வேத் எனும் ஒரு அரசியல்வாதி மட்டும் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளது.
பாஜகவினர் எல்லோரும் தப்பிவிட்டனர்.
இது தான் நீதி.

காலை 9மணிக்குத் தொடங்கிய தாக்குதல் பிற்பகல் 4 மணிக்கு நடந்து முடிந்து விட்டது.
இந்தப் படுகொலை நடக்கவிருப்பதற்கு சற்று முன்பு மோடி (அப்போதைய குஜராத் முதல்வர்) யிடம், கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாஃப்ரி தொலைபேசியில் பேசியிருக்கிறார். பாதுகாப்பு கேட்டிருக்கிறார். "நீங்கள் இன்னும் உயிரோடா இருக்கிறீர்கள்?" என்று மோடி கேட்டதாக ஜாஃப்ரி தன் மனைவியிட்ம் வருத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் மோடி எனக்கு மாலை 8 மணிக்குத் தான் இது தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
குஜராத் கலவரம் தான் இந்தியாவில் (1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு) இந்து மத்வெறி விஷ்வரூபம் எடுப்பதற்கு முக்கியக் காரணம்.
இந்தப் படுகொலைகள், பின்னாட்களில் மோடி பாஜகவில் பெரிய சக்தியாவதற்கும் அதன் பிறகு குஜ்ராத் ஒரு மதவெறிக்கூடாரம் ஆவதற்கும் காரணமாக இருந்தவை.
இதற்கு முன் இதே கலவரத்தின் போது படுக்கொலைகள் நடந்த நரோடா பாட்டியாவில் தீர்பு வந்து பாஜக மந்திரி உட்பட பலர் தண்டிக்கப்பட்டார்கள்.
இந்த வழக்குகளை நடத்த வேண்டிய குஜராத் போலீசும், அரசும், நீதிமன்றங்களும் நியாயமாக நடக்கவில்லை என்பதற்காக உயர்நீதிமன்றம் தலலியிட்டு இந்த வழக்குகளை சிறப்புப் புலானாய்வுப் படை ஒன்றை அமைத்து அதன் கையில் கொடுத்தது.
இந்த வழக்குகளை வீரத்துடன் தொடர்ந்து நடத்தி வரும் தோழர் தீஸ்தா செதால்வத் அவர்களுக்கும் அவரது வழக்கறிஞர் அணிக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

பின் குறிப்பு :

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்களை தண்டிக்க அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழக்கறிஞர் காட்டும் ஆர்வம் அக்கறை குல்பர்க் சொசைட்டி வழக்கில் இல்லை என்பதை அவர் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் தெரிகிறது.
24பேரை தண்டித்துவிட்டார்களே என்று தோற்றுப் போன வக்கீல் போல நிற்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்காடி, குற்றம் சாட்டப்பட்வர்களுக்கு அதிக பட்ச தண்டனை வாங்கித் தருவது தான் அவர் வேலை.
என்ன அதிசயம் இது?
பாதிக்கப்படவரகள் இஸ்லாமியர்கள் என்பதாலும் குற்றம் சாட்டப்ப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதாலும் இந்துத்துவ சகிதிகள் வருத்தப்படுவார்கள் என்பதாலும் அப்படி நடந்து கொள்கிறாரா?
நீதிமன்றத்தில் அவர் எப்படிப் பம்மியிருப்பார் என்பதை உணரமுடிகிறது.

Tuesday, May 17, 2016

ஆவணப்படம் திரையிடல் - டாலர் சிட்டி

ஆவணப்படம் திரையிடல்

நாள் :18 மே; மாலை 6 மணி
இடம் : கலெடஸ்கோப், அய்யர் பங்களா பேருந்து நிறுத்தம், மதுரை

படம் : டாலர் சிட்டி
77 நிமிடங்கள்; தமிழ் (ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்); 2015
இயக்கம்: அமுதன் ஆர்.பி.
தயாரிப்பு : ராஜ் கஜேந்த்ரா



கோடிக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள பின்னல் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் நகரம் டாலர் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பெரிய, சிறிய பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட, உள்ளூர் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, அந்நியச் செலாவணி என்பதை உறுதிப் படுத்தும் நோக்கில் தொழிலாளர் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கூறுகள் கைவிடப்பட்டு டாலர் சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை அடைய, நிலை நிறுத்த தொழிலாளர், இடைத்தரகர், முதலாளி, ஏற்றுமதியாளர், தொழிற்சங்கம், அரசு அதிகாரி, அரசாங்கம் என எல்லோரிடத்திலும் ஒரு ஒத்த கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அன்டோனியோ கிராம்ஷியின் கூற்றுப்படி ஒடுக்குமுறையும் சுரண்டலும் மன இசைவைக் கொண்டே திருப்பூரில் நடந்தேறுகின்றன.
பலர் பல விதமான புரிதல், லட்சியம், தேவை நிமித்தம் இந்த டாலர் சிட்டி எனும் கனவை அரங்கேற்றி வருகின்றனர்.
அவரவர் நியாயங்களுடன், இலக்கணங்களுடன் இந்தப் படம் பதிவாகியுள்ளது.
இது அமுதன் ஆர்.பி.யின் 19வது ஆவணப்படம்.

ஒளிப்பதிவு : அமுதன் ஆர்.பி.
படத்தொகுப்பு : அமுதன் ஆர்.பி & தங்கராஜ்
இசை : ராகா
ஆய்வு : புஷ்பா அசந்தா
புகைப்படம் : பாரதி வாசன்

மதுரை நண்பர்களை அன்போடு வரவேற்கிறோம்.

பேரா இரா ப்ரபாகர்
அமுதன் ஆர்.பி

Thursday, May 12, 2016

போ மோனே மோடி!

கேரளாவில் ஆதிவாசிகளில் நிலை கவலைக்கிடம் தான். மறுக்கவே முடியாது.
அதை யார் பேசுவது? மோடியா? அவருக்கென்ன தகுதி இருக்கிறது?
அவரிடம் ஆதிவாசிகளைக் காக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா? பாஜகவிடம் ஏதும் திட்டம் இருக்கிறதா?
அவரது ஆட்சியில் குஜராத்தில் ஆதிவாசிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அவர் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆதிவாசிகளில் நிலை படு பரிதாபம்.
யாரிடமும் அதற்கான கொள்கை இல்லை.
இடது, வலது, மத்திய என எந்தக் கட்சியிடமும் இல்லை.
எல்லோரும் ஆதிவாசியை விலக்கிய ஒரு வளர்ச்சிக் கொள்கையையே கடைபிடிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா போல அவர்களது நிலங்களை, காடுகளை, நதிகளை, வீடுகளை, கடவுள்களை, மொழியை, பண்பாட்டை, கதைகளைக் கொன்றே தான் நவீன இந்தியா கட்டபட்டிருக்கிறது.
கேரள மக்கள், கேரளாவை மோடி அவமதித்தார் என்று ஒன்று கூடியதை நாம் வரவேற்போம்.
மோடிக்கு எதிராக கட்சி வித்தியாசம் இல்லாமல் மலையாளிகள் எல்லோரும் இணைந்ததை வரவேற்போம்.
அதே நேரத்தில் ஆதிவாசிகளை நாம் அழித்தோம், அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் இருத்திக்கொள்வோம்.
அதை மாற்றுவோம்!

Wednesday, May 11, 2016

எது தேச துரோகம்? கன்னையா குமார் விவகாரத்தை முன் வைத்து ஒரு பழைய சமாச்சாரம்

இரண்டு விஷயங்கள் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் கனையா கைது விவகாரத்தில் எனக்குத் தோன்றுகின்றன.

1) இந்தியாவைப் பிளக்கும் கோஷங்கள் போட்டது தவறு என்று சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. இந்தியா எனும் நவீன அரசின், தேசத்தின் உருவாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை

அதைப பற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. தமிழர்களாகிய நமக்கு இந்தி எதிர்ப்பு எனும் முழக்கம் இருக்கிறது

அதற்கும் இந்தியாவிற்கும்இன்னும் ஒத்த கருத்து உருவாகவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவை இழந்ததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்

அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழருக்கு வேண்டாத வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நம் மீது திணிக்கிறது. நாம் எதிர்த்தால் நம் மீதும் தேச துரோக வழக்கு போடப்படுகிறது.

இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் பல்வேறு மாநிலஙகளில் இந்தியா (மைய அரசுவுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையில் தீர்க்கப்படாதபிரச்சனைகள் பல உள்ளன.

இந்திய அரசு என்பது பார்ப்பனர்களின் ஏற்பாடு. அதற்கும் பிறருக்கும் இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. பார்ப்பனர்களுக்கு பிடித்த விஷயங்கள் இந்தியாவின் கருத்தாகவும்அதை ஏற்காதவர்கள்தேச துரோகிகளாகவும்கருதப்படுகின்றனர்.

தனியார்மயமாதல், பன்னாடுக் கம்பெனிகளுக்கு இயற்கை வளங்களை வழங்குதல் போன்ற விஷயத்தில் எது சரி என்கிற ஒத்த கருத்து இல்லை

துப்பாக்கி, போலீஸ் வைத்து இந்த விவகாரங்களில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

வடகிழக்கு இந்தியா, காஷ்மீர் ஆகிய பகுதி மக்களுக்கு இந்தியாவுடன் இருக்க மனமில்லை

அவர்களையும் கட்டாயப்படுத்தி, ஆசை காட்டி குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒத்த கருத்து உருவாகவில்லை.

இடஒதுக்கீடு பாப்பனர் அல்லாதாரின் உரிமை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை. ஆனால் பார்ப்பனர்கள் அதைக் கடுமையாக, வெளிப்படையாக எதிர்க்கின்றனர். அதை உடைக்க பல முயற்சிகள் எடுக்கின்றனர்.

ஒரு புறம் இந்திய அரசு இப்படி பல விவகாரங்களில் பலருடன் ஒத்த கருத்து உருவாக்க முடியாமல் இருக்கும் போது எது தேச துரோகம், எது தேச பாசம்?

இன்னும் நாடு முழுமையாக உருவாகவில்லை.

பிறகு எப்படி எல்லாம் சரி என்று வாயை மூடிக்கொண்டு இருக்க முடியும்?

இந்திய அரசின் (பார்ப்பனர்கள்) விருப்பம் ஒன்றாகவும் பிறரின் விருப்பம் ஒன்றாகவும் உள்ளது.

மாற்றுக்கருத்து நிறைய இருக்கிறது.

மாட்டுக்கறி சாப்பிடாதே என்கிறான் பார்ப்பனன். சாப்பிடுவேன்என்கிறான் மற்றவன்.

கோயிலுக்குள் பெண்களை நுழையாதே என்கிறான் பார்ப்பனன். நுழைவேன் என்கிறாள் பெண்.சாதி மறுப்புத் திருமணம் செய்யாதே என்கிறான் ஒருவன். செய்வேன் என்கிறான் மற்றொருவன்.

மாற்றுக்கருத்து இருக்கிறது.

இருக்கும்.

தேச துரோகம் என்று மிரட்டுவது அபத்தம். அநியாயம். அயோக்கியத்தனம்.

தேசம் என்பது அப்போது அதிகாரத்திற்கு வருகிறவர்களின்கையில் இருக்கும் ஒரு அமைப்புஇன்னொருவன் வந்தால் இன்னொரு அமைப்பு.

இந்த லட்சணத்தில் என்ன தேச துரோகம்?

இந்திராவை எதிர்த்தால் தேச துரோகம்.

ராஜீவை எதிர்த்தால் தேச துரோகம்.

விபிசிங்கை எதிர்த்தால் இந்து மதப்பற்று,

வாஜ்பாயின் பொக்ரான் வெடிகுண்டு சோதனையை எதிர்த்தால் தேச துரோகம்.

மோடியை எதிர்த்தால் தேச துரோகம்.

ஆளுக்காள் ஒரு தேசம். ஜால்ரா போடுகிறவன் தேசப் பற்றுள்ளவன்.

மாற்றுக்கருத்துள்ளவன் தேச துரோகி.

என்ன நியாயம் இது?

காந்தியை இந்தியர்கள் தேசப் பிதா என்றார்கள். வழிபட்டார்கள்.  அவரை கோட்சே சுட்டான். கொன்றான்.

உலகமே அதிர்ந்தது. இந்தியாவே வெட்கித் தலை குனிந்தது.

இப்போதும் இந்துத்வ சக்திகள் கோட்சேவை வழிபடுகின்றனர்.

இது என்ன? தேச துரோகமா இல்லையா?

பாபர் மசூதியை இடிப்பேன் என்றார் அத்வானி. அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவேன் என்றார் சிங்கல்.

இது தேச துரோகமா இல்லையா?

நாட்டை மதரீதியாக துண்டாடியது தேச துரோகம் இல்லையாஅப்படியென்றால் தேசம் என்றால் என்ன? பார்ப்பன அக்ரஹாரம் தான் தேசமா?

மற்றவர்கள் எப்போதும் அந்நியர்களா?

இருந்தாலும் அத்வானிக்கு பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு.

மசூதியை இடிக்க உரிமை இல்லை. வன்முறையை உருவாக்க உரிமை இல்லை.

அது குற்றம். அதற்கு அவரையும் அவரது அடியாட்களையும் கைது செய்தார்களா? அதுவும் இல்லை.

காஷ்மீர் தீர்ந்த பிரச்சனையா?

அதைப் பேசக் கூடாதா?

பேசித்தான் ஆகவேண்டும்.

வன்முறை தான் தவறு. விவாதம் தவறு அல்ல.

உனக்குப் பிடிக்காததையும்பேச எனக்கு உரிமை உண்டு.

எனக்குப் பிடிக்காததைப்பேச - எவ்வளவு பொய் ஆனாலும் - சு சாமி, சுயமோகன், சோ, ஜெயா, மோடி கும்பலுக்கு உரிமை உண்டு.

அது தான் ஜனநாயகம்.

இதில் எங்கு வந்தது தேச துரோகம்?

ஆட்சியாளர்கள் அம்பானிக்கு அள்ளிக் கொடுப்பதே தேச துரோகம்.

நாட்டு மக்களின் நலனை அந்நிய முதலீட்டுக்காகஅடகு வைப்பதே துரோகம்.

அப்படிப் பார்த்தால் ஆட்சியாளர்களே - அது யாராக இருந்தாலும் - தேச துரோகிகள்.

எனவே தேச துரோகம் என்கிற வாதம் செல்லாதது. அதை ஏற்க முடியாது.

தேசப் பற்று என்பதே ஒரு ஏமாற்று வேலை.

தேசம் என்பது ஒரு ஏற்பாடு.

குறைந்தபட்ச செயல் திட்டம்.

அவ்வளவு தான். அதற்கு மேல் அதற்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை.

நல்ல தேசம் உருவாக பேச வேண்டும். பல கருத்துக்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.

வன்முறை மட்டுமே தவறு

2) இரண்டாவது அம்சம் என்னவென்றால் இந்தியாவைப் பிளக்கும் கோஷங்களை யார் போட்டார்கள் என்பதே சிக்கலான விஷயமாக இருக்கிறது.

பாஜகவின் மாணவர் அமைப்பினரே, கனையா நடத்திய கூட்டத்தில் இந்தியாவை உடைக்கும் கோஷங்கள் போட்டதாக தகவல்கள் வருகின்றனகாணொளி ஆதாரங்களும் வெளி வந்துள்ளன.

அன்று, காந்தியைச் சுட்ட கோட்சே தம் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்கிற வெறியில் அதைச் செய்தான்.

ஆனால் காந்தியைக் கொன்றவன் ஒரு இஸ்லாமியர் அல்ல, இந்து என்று அன்றைய உள்துறை அமைச்சர் படேல் அறிவித்து கலவரங்களைத் தடுத்தார்.

அதே செயலைத் தான் இன்றைய பாஜகவும் செய்கிறது.

கூட்டத்தில் போய் கோஷம் போட்டது வேறொருவன். கூட்டத்தை நடத்தியவன் மீது இப்போது தேச துரோக வழக்கு. என்ன அநியாயம்?

இதைத் தான் இவர்கள் கொண்டாடும் பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். தீய சக்திகளை அழிக்க எதுவும் செய்யலாம் என்கிறார்

அவர்களைப் பொறுத்தவரை மாற்றுக் கருத்துள்ள்வன் தீய சக்தி. அவனை அழிக்க என்ன சதியும் செய்யலாம்.

இதை சாணக்கியன் செய்தான். கிருஷ்ணன் செய்தான்.

கோட்சே செய்தான்.

இப்போது பாஜக செய்கிறது.

இவர்கள் மாற மாட்டார்கள் பிறர் தமக்கு சமம் என்று ஏற்க மாட்டார்கள்.

பிறரை தமக்குக் கீழே வைத்து நசுக்கவே பார்ப்பார்கள்.

இவர்கள் தம் நலனுக்காக எதையும் செய்வாரகள்.

நாம் தான் விழிப்பாக இருக்கவேண்டும்.

அம்பேத்கரும் பெரியாரும் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கின்றனர்.

வேறு மார்க்கமில்லை.

சுயமரியாதையே விடுதலை.




ஏழைகளுக்கு இலவசங்கள் கொடுக்கலாமா?



ஏழைகளுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதை ஆட்சேபிக்கும் பணக்காரர்கள், ஏழைகளுக்கு கல்வி கொடுங்கள், வேலை வாய்ப்பு கொடுங்கள், தொழில் தொடங்க வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.
அதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால், ஏழைகளுக்கு கல்வி என்றால் என்ன? அரசு நடத்தும் இலவச பள்ளி அல்லது கல்லூரியா? அதை இந்தப் பணக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
எல்லோருக்கும் இலவசக் கல்வி என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது மானியக் கல்வியையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
அரசு பள்ளிகளையும் கல்லூரிகளையும் முறையாக நடத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்படவேண்டும். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் .
அது உங்களுக்கு சம்மதமா?
எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தரவேண்டும் என்றால் அரசாங்கம் தொழில் தொடங்க வேண்டும். அல்லது ஏழைகள் தொழில் தொடங்க நிதி வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
அது உங்களுக்கு சம்மதமா?
படிப்பில் வேலையில் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
அது உங்களுக்கு சம்மதமா?
ஏழைகள் சுகாதாரமாக வாழ வேண்டுமென்றால் அரசு குடிநீர் முறையாகக் கொடுக்க வேண்டும். மருத்துவமனைகள் முறையாக நடக்க வேண்டும்.மருத்துவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
சாலை வசதிகள் முறையாக இருக்க வேண்டும்.
பொது போகுவரத்து முறைகளான பேருந்து ரயில் ஆகியன முறையாக நடத்தப்பட வேண்டும்.
அது உங்களுக்கு சம்மதமா?
இதெல்லாம் நடந்தால் ஒரு சோசலிச அரசு தான் இங்கு இருக்கும்.
அது உங்களுக்கு சம்மதமா?
பணக்காரர்களாகிய உங்களுக்கு சாதகமான அரசும் வேண்டும், ஏழைகளுக்கு ஒன்றும் கிடைக்கக் கூடாது என்றால் அவர்களைச் சாகச் சொல்கிறீர்களா?


இலவசம் என்பவை ஏழைகளை சாந்தப்படுத்த கொடுக்கப்படும் கையூட்டு.
அதுவும் இல்லையென்றால் அவர்கள் உன் கழுத்தில் கத்தி வைப்பார்கள் உணவு கேட்டு.
அது உங்களுக்கு சம்மதமா?
நீ தொழில் தொடங்கி கொள்ளை அடிக்க எல்லா சட்டங்களையும் மாற்ற வேண்டும். தொழிலாளர் உரிமைகள் முடக்கப்ப்பட வேண்டும். சுற்றுச்சூழல் விதிகள் தளர்த்தப்படவேண்டும்.
ஆனால் எனக்கு கொடுக்கப்படும் ஒரு ரூபாய் இட்லி வலிக்கிறதா?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?

திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது? அமுதன் ஆர்.பி.; ஆவணப்பட இயக்குனர், சென்னை தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆ...