Tuesday, July 28, 2026

திமுக, திமுகவாக இருப்பதே கடினம் !

 திமுக ஆட்சி கொள்கை ரீதியாக, வெளிப்படையாக தலித், இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெண்கள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதால் இந்தப் பட்டியலுக்குள் வராத ஆட்களுக்கு திமுகவைப் பிடிப்பதில்லை.


திமுக ஆட்சியில் மேற்படி பட்டியலில் வருவோருக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கும் இந்த வெறுப்பு தான் காரணம்.

இந்த வழக்குகளில் காவல்துறையினர் கண்டிப்பாக திமுகவிற்கு எதிராக சேம் சைட் கோல் போடுவார்கள். வழக்குகளைப் பதிய மாட்டர்கள். பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பார்கள். முடிந்தால் அவர்களையும் அடிப்பார்கள். ஏனெனில் அவர்களில் பலர் ஜாதியவாதிகளே!

திருப்புறங்குன்ற விவகாரத்தில் நடிகர் கட்சி எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருந்தது, இந்த வெறுப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட் செய்தி தான். நாங்கள் தர்கா அருகே விளக்கு ஏற்றும் முயற்சியைத் தடுக்க மாட்டோம் என்பதே அது. எனவே தான் திருப்பறங்குன்றத்தில் நடிகர் சார்பாக ஒரு சங்கி நிறுத்தப்பட்டு அவரும் வென்றார்.

தமிழ்நாட்டில் அதிகாரச் சமநிலையை (status quo) பாதுகாக்க நினைப்பவர் யாருக்கும் திமுகவைப் பிடிக்காது. எந்தச் சமூகப் பின்னணியிலும் இந்தப் பழமைவாதிகள் இருப்பார்கள்.

பல பேர் கம்யூனிஸ்டாக இருப்பதே பார்ப்பனர்களின் (பார்ப்பனர் வேறு பார்ப்பனியம் வேறு என்று வியாக்கியானமும் தருவார்கள்) மீதான மயக்கத்தினால் தான். வர்க்கம் தான் பிரதான பிரச்சனை அவர்களுக்கு. அதனால் தான் அரிய வகை ஏழைகளுக்கு (EWS) இட ஒதுக்கீடு வேண்டும் என்று ரங்கராஜர் (கம்யூனிஸ்டுகளுக்கு ஜாதி இல்லை என்று நம்புவோம்) மாநிலங்களவையில் வாக்களித்தித்தார். கண்டிப்பாக பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின கம்யூனிஸ்ட் இதை ஆதரித்திருக்க மாட்டார்.

“என்னங்க அநியாயமா இருக்கு” என்று அப்போதே அங்கேயே அய்யங்காருடன் முரண்பட்ட கனிமொழி கருணாநிதியை எந்த ஆதிக்கவாதிக்குத் தான் பிடிக்கும்?

தமிழ்த்தேசியவாதிகள் பலருக்கு கடவுள், மதம், ஜாதி, வர்க்கம் மீதான விமர்சனமே இருக்காது. முரட்டு, வறட்டு மொழி வெறியே பலரை புலி ஆதரவாளர்கள் ஆக்கியது.

தலித்துகள் தமது ஜாதிய விடுதலைக்காகப் போராடுவது நியாயம் தான். ஜாதி ஒழிப்பு பற்றிப் பேசுவதெல்லாம் சரி தான். ஆனால் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரனுக்காகவும் திமுக போராடவேண்டியிருக்கிறதே! அதை தலித்துகள் ஏற்றுக்கொள்வார்களா?

இப்படி திமுக, திமுகவாக இருப்பதே கடினம் தான்.

30 மே 2026

No comments:

Post a Comment

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...