Wednesday, June 21, 2017

விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி.

விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி. 

ஒரு பள்ளி மாணவனின் விடுதி காதல் அனுபவங்கள்


நான் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு படித்தது ஒரு கத்தோலிக்க பள்ளியில் . அதுவும் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் வசிக்கும் விடுதியில் தங்கிப் படித்தேன். அங்கு மாணவர்களுக்குள் காதல் கொடி கட்டிப் பறக்கும். கொஞ்சம் பெண்மை கலந்த உடல் மொழி கொண்ட மாணவர்களுக்கு எப்போதும் கவனம் அதிகம் கிடைக்கும். அன்பும் கிடைக்கும். அவர்களின் கண் பார்வை கிடைக்க பிற மாணவர்களுக்குள் போட்டி நடக்கும். போதாக்குறைக்கு கத்தோலிக்க சாமியார்கள் வேறு. அவர்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால் அம்மாணவர்களை  யாரும் கை வைக்க முடியாது.  நெருங்கவே முடியாது. அவர்கள் சாமியார் சொத்து.

விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் கடும் மன உளைச்சலையும் தனிமையையும் உணர்வார்கள். பெற்றோர்கள், தாத்தா பாட்டி,  அண்ணன் தம்பி, அக்கா தங்கை, குடும்பம், நட்பு, சொந்தம், ஊர், தெரு, குளம், மரம், கோயில், திருவிழா ஆகியவற்றை பிரிய முடியாமல் ஏங்கியபடி இருப்பார்கள்.  வந்த இடத்தில் கிடைக்கும் நட்பு, காதல், அரவணைப்பு, கவனம், சுகம் ஆகியன ஆறுதலாக இருக்கும். மேலும் பாலியல் ரீதியான தேடல் பதின் வயதில் தொடங்குவதால் பரிசோதனை, ஆர்வம், விளையாட்டு ஆகிய கூறுகளும் நடக்கும் நாடகத்தின் எல்லையை அதிகரிக்கும்.

என் உடன் படித்த மாணவர்களில் ஒருவன் இன்னொரு மாணவன் மீது கடும் காதல் கொண்டிருந்தான்.  அவன் பின்னால் சுற்றியபடியே இருப்பான். சாப்பாடு வாங்கி வைப்பான். துணி துவைத்துக்கொடுப்பான். படிக்க, எழுத  உதவுவான். பேனா நோட்டு வாங்கிக்கொடுப்பான்.  ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால் தப்பிக்க உதவி செய்வான். எப்படியாவது அவனை அடையவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். காதல் கடிதம் கொடுத்தபடி இருந்தான். என்ன எதிர்பார்த்தான் என்று தெரியவில்லை. புனிதமான காதல் கோஷ்டி என்று நினைக்கிறேன்.  கடும் முயற்சிக்குப் பிறகும் காதல் படியாததால் கழிப்பறை கழுவ வைத்திருந்த பினாயிலைக் குடித்துவிட்டான். பெற்றோர் பதறி அடித்த படி வர விடுதிக் காப்பாளர் பினாயில் குடித்தவனை இடை நீக்கம் செய்தார். அவன் திரும்ப வந்தானா இல்லையா என்று எனக்கு நினைவில்லை. சிலர் காதலுக்காக கைகளைக் கீறிக் கொள்வார்கள். சாப்பிடாமல் போராட்டம் நடத்துவார்கள். ஒரே இடத்தில் நின்றபடி இருப்பார்கள்.

சில சீனியர் மாணவர்கள் தாதாக்கள் போல செயல்படுவார்கள். அடி, உதை, விளையாட்டில் முதலிடம், மானிடர் பொறுப்புகளுடன் உலா வருவார்கள். அவர்களுக்கு காதலிகள் (மாணவர்கள்) இருப்பார்கள். ஓரினச்சேர்க்கை மிகவும் சாதரணமாக நடக்கும். எல்லோரும் ஒன்றாகப் படுக்கும் ஹாலிலேயே நடக்கும். சில சமயம் குளிக்கும் அறையில். யாரும் இல்லாத சாப்பாட்டு அறையில்.

எங்களைப் போன்றவர்கள் (உருப்படாதவர்கள்)  என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க 
போய் உதை வாங்கியிருக்கிறோம்.  ஒருவனது காதலியை  இன்னொருவன் கைப்பற்ற முயற்சித்து சண்டைகள் நடக்கும். சில சமயம் ஒருவனுடைய காதலியுடன் ரெண்டு வார்த்தை அதிகமாகப் பேசினாலே அறைவிழும்.  அந்தக்காதலிகள் மின்னுவார்கள்.  மணப்பார்கள்.  நல்ல செருப்பு அணிந்திருப்பார்கள். ஊக்குக் குத்திய ரப்பர்  செருப்புடன், லைபாய் சோப்பை இரண்டாய் வெட்டிக் குளிக்கும், கதர் வாரிய மஞ்சள் சோப்புப் போட்டுத் துவைக்கும் என்னைப் போன்றோருக்கு எல்லாமே வேடிக்கை தான்.

ஒரு முறை தேர்வு முடிந்த கடைசி நாள். காதலி மாணவன் ஊருக்குப் போகவேண்டும். அவனது அப்பா அழைத்துப்போக  வந்து விடுவார். காதலன் பெரிய வகுப்பு மாணவன்.  காதலி மாணவனை அவசர அவசரமாக  கலவி புரிந்தான். குதப்புனர்ச்சி தான். வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்துகிறான்.  பலாத்காரம் என்றே சொல்லலாம். எல்லாம் முடிந்து அவர்கள் எழுந்து போகையில்  சிறியவன் – காதலி மாணவன் - தொடையில்  ரத்தம் வழிந்து ஓடியது. நாங்கள் மிரண்டு போனோம்.

பாதிரியார்களின் காதல் கதைகள் வேறு ரகம். அவற்றை காதல் வகையில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.  பாதிரியார்கள் வசீகரமானவர்கள். சுத்தமானவர்கள். இனிப்பாகப் பேசுவார்கள். அதிகாரம் மிக்கவர்கள். அவர்களின் கனிவுக்கு பலம் அதிகம். அவர்களுக்கென்று தனி அறைகள் இருக்கும். யாரும் உள்ளே நுழைய முடியாது. உள்ளே என்ன நடக்கிறது என்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு பாதிரியார் பக்கத்தில் போனால் இடுப்பில் கை வைப்பார், தடவுவார், மேலும் கீழும் கை பரவும். முதுகில் படம் வரைவார் விரல்களால். கால்சட்டைக்குள் கை நுழையும். நாங்கள் சிறுவர்கள். தடுமாறுவோம். நெளிவோம். கண்கள் சொருகும். சிறிது நேரத்தில் அவரது கை முன் பகுதிக்கு நகர்ந்து விடும். அதில் மயங்கின மாணவர்கள் அதிகம். அந்த சுகத்திற்கு அடிமையானவர்களும் உண்டு.  ஓடி வந்தவர்களும் உண்டு.

சில மாணவர்கள்  பாதிரியார் பின்னால் சுற்றியபடியே இருப்பார்கள்.  அன்புக்கு கட்டுப்பட்டு சிலர். அதிகாரத்திற்குக் கட்டுபட்டு சிலர்.  அவருடைய கருணை கிடைத்தால் பல சலுகைகள் கிடைக்கும். அடி குறைவாகக்கிடைக்கும். தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம். கத்தொலிக்க சாமியார்கள் அடி / தண்டனை கொடுப்பதில் மன்னர்கள். பெற்றோர்களே அதற்குத்தான் சாமியார் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவார்கள். நல்லா அடிங்க பாதர், முகத்தில மட்டும் அடிக்காதிங்க என்று பெற்றோர்கள் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். என் அப்பாவே அப்படித்தான் சொன்னார். அதே சமயம் சாமியாருக்கு நெருக்கமான மாணவர்கள் கேலிக்கு ஆளாவர்கள்.  இருட்டில் அடி விழும். கழிப்பறை சுவர்களில் பெயர் இடம் பெறும். யாரும் உதவி செய்ய மாட்டார்கள். சாமியாருக்கு நெருக்கமானவர்களை, அவர்களின் ரகசியங்களைக் கண்டு கொண்ட பல சீனியர் மாணவர்கள்  வாய் புணர்ச்சிக்கு கட்டாயப்படுத்துவார்கள். மறுத்தால் உதை விழும். பாதிரியார்கள் மாற்றலாகிப் போய் விட்டால் வருகிறவன் போகிறவனுக்கு எல்லாம் சேவை செய்ய வேண்டும்.

எனக்கும் காதல் அனுபவங்கள் உண்டு. ஒருவன் என் மீது பிரியமாக இருந்தான். அவன் பெண்மை கலந்த பாவனைகள் கொண்டவன். அவனை பலர் சுற்றி வந்தனர். அவனுக்கோ என் மீது நட்பு. அவனது இருக்கை மற்றும் மேசை  எங்கோ இருக்கும். சாப்பிட என் உடன் வருவான். என் உடன் குளிப்பான். படுக்கை மட்டும் தனித்தனி.  எல்லோரும் என்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.  அவனுக்கு காதல் கடிதம் கொடுப்பார்கள். அவன் யாருக்கும் மடியவில்லை. சில மாணவர்கள் நீயாவது அவனை சோலியை முடித்து விடு என்று ஏற்றி விடுவார்கள். நான் பல முயற்சிகள் எடுத்தேன். அவன் தட்டிக்கழித்து விடுவான். அவன் நன்றாகப் படிப்பான். என்னையும் படிக்க வைத்தான். அவன் வசீகரத்தில் மயங்கி நானும் ஒழுங்காகப் படித்து பத்தாவது இறுதித்தேர்வில் கணக்கில் 95 மதிப்பெண் வாங்கினேன் . அவன் இல்லையென்றால் நான் பத்தாவது முடித்திருக்க மாட்டேன்.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது இரண்டு மாணவர்களுடன் படிப்பு தாண்டி நட்பு ஏற்பட்டது. ஒருவன் கால் பந்தாட்ட வீரன். ஒன்னொருவன் மெல்லிய அழகன். அவர்கள் என்னைக் குழப்பி விட்டதோடு சரி. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. என் நிலை அவர்களுக்குப் புரியவில்லை.

ஓரினச்சேர்க்கையில் பலருக்கு தான் காதலனா, காதலியா என்று புரிபடாது. ஆணாக இருப்பதாலேயே ஒருவர் ஆணாக / காதலனாக  இருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் யார் என்றே இன்னும் தெரியவில்லை. பல ஆண்கள் எனக்கு வலை வீசியிருகின்றனர். அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்றே எனக்குத் தெரியாது

பள்ளிக்காலங்களில் என்னை சுற்றி பலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் எனக்கு ஒன்றும் வாய்க்கவில்லை. வேடிக்கை பார்த்தது, தூது போனது, அரைகுறையாய் சூடு போட்டுக்கொண்டதோடு முடிந்தது எனது தன்பால் காதல் வாழ்க்கை.

ஓரினச்சேர்க்கை சிறுவயதில் ஒருவருக்கு அறிமுகமானதாலேயே ஒருவர் அதைத் தொடரவேண்டியதில்லை. தொடரலாம். தொடராமல் போகலாம். அது அவரவர் விருப்பம். மேலும் நம்மில் பலர் கறாரான ஹெட்ரோ செக்சுவல் இல்லை. வேறு வழியில்லாமல் எதிர்பால் இனத்தினருடன் மட்டுமே வாழ்கிறோம். அது தான் இயல்பு என்று நினைக்கிறோம். பலர் அதில்  ஒழுங்காக வாழமுடியாமல் போவதற்கு தமது பாலியல் தேவைப் பற்றி அறியாததால் இருக்கலாம். எனக்கு இன்னும் சில ஆண்களைப் பார்த்தால் தடுமாறும். அவர்கள் கண்களைப் பார்க்க முடியாது. விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம்.

பின்குறிப்பு அ)  கத்தோலிக்கப் பள்ளிகள் / கல்லூரிகள் தமிழ் சமூகத்தை விடுவித்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களின் சேவை அளவிடமுடியாதது. ஆனால் திருமணம் செய்யாத சாமியார்கள் உலகம் முழுக்க  மாணவர்களை பலாத்காரம் செய்கிறனர் என்பது போப் ஆண்டவரே ஒத்துக்கொண்ட செய்தி.

பின்குறிப்பு ஆ) குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல்  பலாத்காரம் என்பதும் அவர்களுக்குள் நிகழும் பாலியல் தேடல்கள், பரிசோதனைகள் மற்றும் விளையாட்டுகள் என்பதும் ஒன்றல்ல. ஒருவர் பலாத்காரம் காரணமாக தனது பாலியல் பாதையைத் தேர்வு செய்வதில்லை.

பின்குறிப்பு இ) நான் இந்த விஷயத்தில் எக்ச்பெர்ர்டும் அல்ல. இது என் அனுபவம், எனது புரிதல். தவறாகவும் இருக்கலாம். சரியாகவும் இருக்கலாம்.


No comments:

Post a Comment