Thursday, September 13, 2012

எதற்கு வேண்டும் மின்சாரம்?



மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்கிற, கொண்டு செல்கிற, பகிர்ந்து கொள்கிற, பயன்படுத்துகிற முறைகளில் தீவிரமான, புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வந்தால் தான் கூடன்குளம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும் என்பது எனது கருத்து! நாம் இது வரை எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்திருக்கிறோம்? அதை யார் பயன்படுத்தினார்கள்? அதற்கு நாம் கொடுத்த விலை என்ன? எவ்வளவு மக்களை, அவர்களின் வாழ்வாதாரத்தை, நம்பிக்கையை, சுயமரியாதையை அழித்து இந்த மின்சாரத்தைத் தயாரித்தோம்? அதற்கு என்ன கணக்கு? பல குடும்பங்களைத் தெருவில் நிற்கதியாக்கி விட்டு உங்களுக்கு சொகுசு வாழ்க்கை வேண்டும் என்றால் அது நீதியல்ல! நியாயமல்ல!

எதற்கு வேண்டும் 24 மணி நேர மின்சாரம்? அதை வைத்து என்ன சாதித்தீர்கள்? நீங்கள் எவ்வளவு மின்சாரக் கட்டணம் கட்டினாலும் அதற்காக அழிக்கப்பட்ட வாழ்க்கையை ஈடு செய்ய முடியுமா?

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பல கிராமங்களில் கருணாநிதி கொடுத்த இலவச தொலைக்காட்சி வந்த பிறகு தான் மின்சாரத்தின் பயன்பாட்டே அதிகரித்தது. அதற்கு முன்பு அதிகாலையில் எழுந்து வேலையைப் பார்ப்பார்கள். சும்மா இருக்கிற சோம்பேறி முதலாளிகள் தான் மின்விசிறியைப் போடு, மின்விளக்கப்போடு என்று பிதற்றுவான். உழைக்கிற மக்கள் மாலையில் சீக்கிரமே உறங்கிவிடுவார்கள். விவசாயத்திற்குத் தான் அதுவும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வந்தால் கூட போதும். அதை வைத்து பம்பு செட்டை இயக்கி வெள்ளாமை போட்டு விடுவான் நம் விவசாயி!

எதற்கு வேண்டும் மின்சாரம்? அது என்ன தண்ணீரா? காற்றா? உணவா? பலரது அடிப்படைத் தேவைகளான தண்ணீர், காற்று மற்றும் உணவை அழித்துத்தான் மின்சாரம் எனும் சொகுசு உற்பத்தி செய்யப்படுகிறது.

அதனால் தான் நகரத்தில் இருக்கும் படித்த தமிழன் கொதிக்கிறான்! கூடன் குளம் வேண்டும் வேண்டும் என்று!

நீ நியாயமான மனிதன் என்றால் நீ உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் ஒவ்வொரு யூனிட்டிற்குப் பின்பும் அழிக்கப்பட்ட, சொந்த ஊர்களை விட்டு விரட்டப்பட்ட, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட பலரது துயரமும், கண்ணீரும் இருக்கிறது என்று நினைத்துப்பார்!

No comments:

Post a Comment