Thursday, September 13, 2012

அறிவியல் கல்விக்கு நாம் கொடுத்த விலை!



கடந்த முப்பது ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருக்கும் போது செய்த சிறந்த கல்விச் சேவைகளில் ஒன்று வரலாறு, மொழி, தத்துவம், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற "மானிடவியல்" படிப்புகளை திட்டமிட்டு கல்லூரி, பல்கலைக்கழக வட்டாரங்களில் அழித்தொழித்தது. அவை வேலை வாய்ப்புத் தரும் பட்டங்கள் அல்ல என்ற கருத்து ஊக்குவிக்கப்பட்டது. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவேயில்லை. மாணவர்கள் சேர்க்கையும் இல்லை. பல மானிடவியல் பட்டப்படிப்புகள் காணாமல் போய்விட்டன.

அதே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொறியியில் கல்லூரிகள் முளைத்தன. புதிய அறிவியல் பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. அடிமாட்டு சம்பளத்துக்காவது ஆசிரியர்களை பணியில் அமர்த்தினார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளை தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்கிறது. அதில் பலருக்கு வேலை கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம்.

இதனால் ஏற்பட்ட ஆபத்துக்களில் ஒன்று தமிழ்நாட்டில் படித்தவர்களினால் கூடன்குளம் போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த போராட்டம் எவ்வளவு தூரத்திற்கு அறிவியல் பூர்வமாகத் தவறு என்று நிரூபிப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எவ்வளவு தூரத்திற்கு தாம் மனிதத் தன்மை அற்றவர்களாகி விட்டோம் என்பதை உணர மறுக்கின்றனர்.

அறிவியல் மீதான மோகம் அவர்களின் கண்களை, அறிவை மறைக்கிறது. "விஞ்ஞானி" அப்துல் கலாம் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் படித்தவர்களின் ஆதர்சமான ஆளாகியிருப்பது எதேச்சையாக நடந்தது அல்ல. அதன் விளைவு சமூக அக்கறை அற்ற, சுரணையற்ற, தன் வரலாறு தெரியாத ஒரு படித்த வர்க்கத்தை உற்பத்தி செய்திருக்கிறோம். அரசின் மீதும் அதிகாரிகள் மீதும் ஊடகங்கள் மீதும் விஞ்ஞானிகள் மீது கண்மூடித்தனமான, பகுத்தறிவற்ற நம்பிக்கை வைத்திருக்கும் இக்கூட்டம், ஏழைகள் போராட்டம் நடத்தினால் அதன் நோக்கத்தை உடனடியாக சந்தேகப்படுகின்றனர். தட்டிக்கழிப்பதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

படிப்பு வெறும் வேலைக்கே என்று ஒரு சமூகம் நினைக்க ஆரம்பித்தால் என்ன விளையும் என்பதற்கு தமிழ்நாடு ஒரு சான்று!

No comments:

Post a Comment