Monday, September 24, 2012

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1,2,3


எனது சமீபத்திய ஆவணப்படங்கள்:


2007ல் படப்பிடிப்பு தொடங்கி மணவாளக்குறிச்சி, கல்பாக்கம் மற்றும் கூடன்குளம் ஆகிய பகுதிகளைப் பற்றி நான் எடுத்த ஆவணப்படங்களை கதிர்வீச்சுக்கதைகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளேன்.

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 1: மணவாளக்குறிச்சி
54 நிமிடங்கள்; 2010 


அணுசக்தியின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசும் போது அணு உலைக்குத் தேவையான யுரேனியம் அல்லது தோரியம் தோண்டி/பிரித்தெடுப்பது பற்றி விவாதிப்பது அவசியம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை, பெரியவிளை உட்பட்ட ஆறு கடற்கரையோர கிராமங்களில் இந்திய அணுசக்தித் துறையின் இந்திய அருமணல் ஆலை கடற்கரை மணலில் இருந்து தோரியம் எடுக்கிறது. 1964ல் இருந்து நடத்தப்படும் இந்த ஆலையால் கடல் அரிப்பும், கடல் அடியும், கதிர்வீச்சும் அதிகரிக்கவே மீனவர்கள் அதை எதிர்த்துப் போராடினர். மீனவர்களையே மணல் அள்ள வைத்து அவர்களுக்கு மாதச் சம்பளமும் கொடுத்து இந்திய அருமணல் ஆலை அவர்களையும் மணல் அள்ளும் பணிக்கு பாதுகாவலாக்கியது. இது வரை இப்பகுதியில் அதிகரித்த கதிர்வீச்சால் நூற்றுக்கணக்கானவர்கள் விதம் விதமான புற்று நோயால் பாதிக்கப்பட்டு மடிந்து போயிருக்கின்றனர். அப்பகுதியில் ஊனமுற்றவர்களும், மூளை வளர்ச்சியற்ற பிள்ளைகளும் அதிகம். குறைப்பிரசவமும், தோல் நோயும் கதிர்வீச்சால் என்ன விளையும் என்பதற்கு வெளிப்படையான எடுத்துக் காட்டாக விளங்குகிறது மணவாளக்குறிச்சி.

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 2: கல்பாக்கம்
28 நிமிடங்கள்; 2011


கல்பாக்கத்தில் இருப்பவை சிறிய அணு உலைகள் தான் என்றாலும் அங்கிருக்கும் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் அணுக்கழிவு மறுசுழற்சி வேலைகள் மிகுந்த ஆபத்தானவை.  அதிகக் கதிர்வீச்சு வெளியிடும் தன்மை கொண்டவை. இவை புளுட்டோனியம் அணு உலைகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அங்கு அணுசக்தியால் இயங்கும் நீர்முழ்கிக் கப்பலும் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. தோரியத்தைப் பயன்படுத்தும் இந்திய  சுதேசி அணு உலைகள் தயாரிக்கும் ஆராய்ச்சி வேலைகளும் நடைபெறுகின்றன. இதனால் கல்பாக்கம் பகுதியில் கதிர்வீச்சால் பாதிப்பு அதிகம் என்கிறார் மருத்துவர் புகழேந்தி. சட்ராஸ்குப்பத்தில் அந்நியர்கள் நுழைந்தாலே உளவுத்துறையினர் தேடி வந்து விடுகின்றனர். நான் படம் எடுக்க ஆரம்பித்த பிறகும் நிறையப் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டும் இறந்திருக்கின்றனர். அதில் ஒருவன் தான் நீங்கள் பார்க்கும் எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூர்யா. நான் அவனைப் படம் பிடித்த சில நாட்களிலேயே அவன் இறந்து விட்டான்.

கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்
80 நிமிடங்கள்: 2012


கூடன்குளம் போராட்டம் சமகால இந்திய வரலாற்றிலேயே இல்லாத அபூர்வமான போராட்டம் என்று எனது படத்தைப் பார்த்த பூனாவின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் பாலசந்திர கேர்க்கர் கூறியது மிகையல்ல. எத்தனை தயாரிப்பு வேலைகள் நடந்திருக்க வேண்டும் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடைபெறுவதற்கு என்று பல தமிழர் அல்லாத சிந்தனையாளர்கள் பாராட்டுகின்றனர். போராட்டத்தை நான் படம் பிடிக்கையில் பலரிடம் நான் இதைப் பற்றிக் கேட்ட போது தலைமை தான் காரணம் என்று மனதாரப் புகழ்ந்தனர் உள்ளூர் மக்கள். நாடார்களையும் மீனவர்களையும் பிரிக்கும் சக்திகளைத் தூக்கி எறிந்தது தான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றனர். இந்தப் போராட்டம் ஒரு அணு  உலைக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த வளர்ச்சி மாதிரிக்கே எதிரானது.

No comments:

Post a Comment