Thursday, September 27, 2012

சர்வதேச அணு மின் உலை வியாபாரிகளும் உள்ளூர் தரகர்களும்!

நான் உனக்குத் துணை! நீ எனக்குத் துணை!

மின்சாரம், பெட்ரோல் போன்ற எரிசக்தி அல்லது ஆற்றல் உற்பத்தி முறைகளைக் கட்டுப்படுத்தி வைப்பது ஒரு அரசியல். அதனால் தான் வளைகுடா நாடுகளில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அத்தனை ஆட்டம் போடுகின்றனர். ஆட்சிகளை உருவாக்குகின்றனர். அதிபர்களைக் கொலை செய்கின்றனர். அதை நம்பி லட்சக்கணக்கான கோடிகளில் வியாபாரமும் முதலீடுகளும் செய்யப்படுகின்றன. அதே போல் தான் அணு மின்சாரமும்.

வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாதலினால் உருவாகியிருக்கும் புதிய பணக்காரர்கள் ஒரு மயக்கத்தில் இருக்கின்றனர். தொழிற் சாலைகளை கண்டபடி திறந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வெறித்தனமான நுகர்வுக் கலாச்சாரத்தைத் தழுவியுள்ளனர். அந்த மயக்கத்தைப் பயன்படுத்தி மின் தேவையை மிகைப்படுத்தும் கூட்டமும் இருக்கிறது. சொகுசாக வாழவேண்டும் எனில் இவ்வளவு மின்சாரம் வேண்டும் என்கிற பதட்டம் அவர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. 

அதைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் அணு மின் திட்டங்களை விற்று காசு பார்க்கின்றனர். அதனால் தான்  ஃபுகுசிமாவில் பாதிக்கப்பட்ட ஜப்பான் கூட கம்போடியாவிலும், தாய்லாந்திலும், வியட்நாமிலும் அணு உலைகளை விற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் உள்நாட்டு அரசியல் வாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், நிபுணர்களுக்கும், ஊடகங்களுக்கும், அதிகாரிகளுக்கும் நிறைய கமிசன்கள் கிடைக்கும். இந்த அரசியல் தான் இப்போது நடக்கிறது. 

இதற்கு மாற்றாக காற்று மூலமாகவோ, சூரிய வெப்பம் மூலமாகவோ மின்சாரம் தயாரிப்பது இந்த மையப்படுத்தப்பட்ட மோசடி அரசியலுக்கு எதிரானது. மக்களே அவரவர் ஊர்களில் மின்சாரம் தயாரித்துக் கொண்டால் அவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? திமுக அரசு தொலைக்காட்சியை இலவசமாகக் கொடுத்ததும் இந்தப் பின்னணியில் தான். அதனால் தான் தினமலர், சன் டிவி போன்ற முதலாளிகள் சம்பந்தம் இல்லாமல் உதயக்குமாரைப் பற்றி கண்டபடி பேசுகின்றனர்.

பின்குறிப்பு: பசிபிக் கடலில் உள்ள யாப் தீவுகளுக்கு அமெரிக்கா "விடுதலை" கொடுத்த போது அன்பளிப்பாக தொலைக்காட்சி நிலையங்களை நிறுவியது என்பதும் அதன் மூலம் ஒரு கலாச்சார காலனியத்தைத் தொடர்ந்தது என்பதும் வரலாறு. இதைப் பற்றி டென்னிஸ் ஓ ரூர்க் ஒரு ஆவணப்படமும் எடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment