Tuesday, July 28, 2026

பெண்ணுரிமையும் கலைஞரும்!

 2006 - 2011 காலத்தில் கலைஞர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் மதுரையில் பெண்கள் தின விழா நடந்தது. அப்போது தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் தலைவராக இருந்த கவிஞர் சல்மா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்து அந்த நிகழ்வில் பேசும் போது, பெண்கள் உரிமை என்று பேசும் போது கலைஞரின் பங்களிப்பைப் பேசாமல் இருக்கமுடியாது என்றார்.

ஏற்கனவே 1989ல் பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் சமஉரிமை வழங்கும் சட்டத்தை கலைஞர் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல 1989ல் அரசுப் பணியில் பெண்களுக்குக் கலைஞர் தான் 30 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.

1989ல் கலைஞர், பெண்களுக்கான் சுய உதவிக்குழுக்களை அரசு உதவியிடன் தொடங்கினார்.

அதற்கு முன்பு 1973ல் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் தான் கலைஞர் ஆட்சியில் பெண்கள் காவல் படை உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்தக்கூட்டத்தில் வந்திருந்த எழுத்தாளர் வ கீதா உள்ளிட்ட பெண்ணியவாதிகள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. கலைஞரைப் பற்றி கட்டாயம் பேசவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா என்று சிலர் முணுமுணுத்தனர்.

இப்படி எல்லாத் தரப்பிலும் கலைஞருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.

சனாதனத்தின் வழியில் சூத்திரர்களுக்கு புகழ் கிடையாது. தண்டனை மட்டும் தான். அதுவும் மிகையான தண்டனை மட்டும் தான்.

நாம் என்றுமே தண்டனைக்கு உரியவர்கள். நமக்குப் புகழும் பெருமையும் வந்தால் அது பிழையாவோ, ஊழலாகவோ, அவமானமாகவோ, வெற்று முழக்கமாகவோ, அதிகப் பிரசங்கித் தனமாகவோ தான் கருதப்படும்!

சமீபத்தில் மு.க.ஸ்டாலினுக்கும் அதே நிலை தான். தாம் செய்த வேலைகளை எடுத்துச் சொன்னால் அது விளம்பர ஆட்சி என்றார்கள். திமிர், ஆட்டம் என்றும் வசை பாடினார்கள்.

தமது ஆட்சியில் மு.க.ஸ்டாலின் பெரிய விருந்தே வைத்து விட்டார். தொழில் வளர்ச்சியிலிருந்து, சமூகநலம் வரை அவரது சாதனைகளைச் சொல்லி முடியாது.

எதிரிகளை விட்டுவிடுங்கள். அவர்களுக்குத் திமுகவைக் கண்டாலே ஆகாது.

ஆனால் சிவில் சமூகத்தினருக்கு திமுகவின் மீது எப்போதும் குறை இருப்பது இந்த சனாதனத்தின் வெளிப்பாடு தான்.

படித்த இளைஞர்கள் ஏன் தவெகவின் பொய்களை நம்பினார்கள்? அவர்களிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஏன் உண்மைகளைக் கண்டறியவில்லை? அவர்களுக்கு அந்தப் பொறுப்பில்லையா?

அவர்களைப் படிக்கவைத்து ஆளாக்கியது, அவர்களை வளர்த்துக் கொள்ள மட்டும் தானா? தமிழ்நாட்டின் வரலாற்றை அவர்கள் ஏன் படிக்கவில்லை?

இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன! நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் இதற்குக் காரணம்.

நமக்கு ஒரு நன்மை நடந்தால் அதைக் கொண்டாடும் அறிவும் இல்லை, துணிச்சலும் இல்லை. எப்போதும் 'மேன்மக்களின்' ஒப்புதலுக்காக ஏங்குகிறோம். 'அவர்கள்' ஏற்றுக்கொண்டால் அது சரி, அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் என் தலையையும் நான் வெட்டிக்கொடுத்து என் விசுவாசத்தை வெளிப்படுத்துவேன் என்கிற அடிமை குணம் தான் காரணம்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

18 மே 2026

No comments:

Post a Comment

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...