நாங்கள் சமீபத்தில் நடத்திய ஒரு திரைப்பட விழாவிற்கு வந்திருந்த ஒரு இளைஞர், விழா முடிந்ததும் "நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு சடங்காகத் தெரிந்தன, ஏதோ ஒரு கடமைக்கு நீங்கள் திரையிட்டது போல இருந்தது. எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது" என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் அவரை அழைத்து என்னவென்று விசாரித்தேன்.
"திரையிட்ட படங்கள் அருமையாக இருந்தன. ஆனால் நிகழ்ச்சி நிறைவில் அவற்றைப் பற்றி விவாதம் நடத்தியிருக்கலாம், எனக்கு ஏமாற்றமாக இருந்தது" என்றார்.
"நேரம் கருதி, நிகழ்ச்சியை விரைந்து முடித்து விட்டோம், ஏனெனில் அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். சரியாக 1 மணிக்கு அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அரங்கிற்கு வெளியே நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்டிருக்கலாம்" என்றேன்.
கூடுதலாக "திரை அரங்கிற்குள் விவாதம் நடத்தும் போது, யார் என்ன பேசுவார்கள் என்று தெரியாது. யார் வந்திருக்கிறார்கள் என்றும் தெரியாது. எனவே சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் வந்தால் தவிர அநாவசியமான பேச்சுக்கள் ஆபத்தானவை, அவற்றுக்கு நாம் தான் பொறுப்பேற்கவேண்டும்" என்றும் சொன்னேன்.
அவர் சரியென்று ஒத்துக்கொண்டார். அடுத்த திரையிடலுக்கு இன்னும் சிலரை அழைத்துவருகிறேன் என்றார்.
இந்நிகழ்வை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம்.
1) இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மூத்தோர்கள் (நிகழ்ச்சி நடத்தியவர்கள் எல்லோரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்) நாம் தெளிவில்லாமல் இருக்கிறோம். அல்லது கூடுதல் கவனமாக இருக்கிறோம். அல்லது தயங்குகிறோம். அவர்கள் எதையுமே நிறைவாக, முழுமையாக நிகழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். அரைகுறையாக இருப்பது இளைஞர்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது.
2) இளைஞர்கள் உரிமையோடு இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறார்கள். தங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கிறார்கள். நாங்கள் திரையிடலுக்கு வந்துவிட்டோம். எங்களைத் திருப்திப் படுத்துங்கள் என்கிறார்கள். எங்களுக்கு இன்னும் ஊட்டுங்கள் என்கிறார்கள். நாங்கள் அந்தப் படங்களைப் பற்றிப் போய்ப் படிக்க மாட்டோம் என்கிறார்கள். எங்களுக்கு எல்லாமே இங்கேயே, இப்போதே வேண்டும் என்கிறார்கள்.
ஆர்வமிருந்தால் எங்களிடம் வந்து பேசியிருப்பார் அந்த இளைஞர். அல்லது இணையத்தளத்தில் தேடிப்படித்திருப்பார். ஆனால் 'எல்லாமே சடங்காக இருக்கிறது, ஏதோ கடமைக்குச் செய்கிறீர்கள்" என்று தாக்குதலை நடத்தியிருக்கமாட்டார். அதன் பொருள் 'entitlement". செல்லக்குழந்தைகளின் அடம் (tantrum).
இதை சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
இருபது வருடங்களுக்கு முன்பு வரை நாம் மிகுந்த வறுமையில் இருந்த மாநிலம். ஆனால் இப்போது ஒரு வளர்ந்த மாநிலம். இந்த மாற்றம் எப்படி நடந்தது? அதை நடத்தியவர்கள் யார்? அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து, அந்த வரலாற்றைப் பெருமையோடு நினைத்துப் பார்க்கவேண்டிய இளைய தலைமுறை, அந்த மாற்றங்களை நிகழ்த்தியவர்களின் பங்களிப்பை, தியாகத்தை புறந்தள்ளி, எள்ளி நகையாடி, இப்படித் தற்குறிகளாக மாறியது ஏன்?
எல்லாவற்றையும் புரட்டிப் போட நினைத்து ஒரு நடிகருக்கு (அவர் அழகாக இருக்கிறார். சினிமாவில் நன்றாக நடனமாடுகிறார். ஸ்டைலாக சண்டை போடுகிறார். வசனம் பேசுகிறார் என்பதைத் தவிர அவரிடம் என்ன தகுதியைக் கண்டார்கள்?) அவர் கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் ஆட்சியைக் கொடுத்தது ஏன்?
இவர்களுக்கு, இவர்களின் பெற்றோர்கள் ( வாழ்க்கையில், பொருளாதாரத்தில் வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்கள்) ஏன் இந்த வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கவில்லை?
ஏன் இவர்களைப் பொத்தி பொத்தி வளர்த்தார்கள்? தனக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகள் தமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏன் கடன் வாங்கி, அரைப் பட்டினி கிடந்து, துன்பப்பட்டு, துயரப்பட்டு ஆளாக்குவதோடு நிறுத்திக்கொண்டார்கள்?
மிகுந்த ஏழைக்குடும்பத்தில் கூட விலை உயர்ந்த மோட்டர் பைக் வேண்டும், இல்லையென்றால் செத்துப் போவேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். தமது பெற்றோர்கள் படும் துயரம் அவர்களை ஒன்றுமே செய்வதில்லை.
இப்படி ஒரு பொறுப்பற்ற சமூகத்தை நாம் ஏன் உருவாக்கினோம்?
தமிழ்நாட்டின் தொழில் அமைச்சர் கொடுத்த ரீல்ஸ் வீடியோவைப் பார்த்தும் உங்களுக்குப் பதறவில்லையா?
நமது வளர்ச்சியே நம்மை அழித்துவிட்டது.
(மூத்தோர்களிடம் இருக்கும் திமுக வெறுப்பு, அக்கட்சியை எப்படியாவது எவனாவது தோற்கடித்தால் போதும் என்று நினைக்க வைத்தது இந்த வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவிட்டது).
அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை
28 மே 2026
No comments:
Post a Comment