Tuesday, December 22, 2020

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் : சிறப்பு நேர்காணல்

"பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது"
ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன்
===========================
2019 / Peter Durairaj



அமுதன் ராமலிங்கம் புஷ்பம் (1971) ஊடகத்துறையில் ஒரு முக்கியமான ஆளுமை. கடந்த 25 ஆண்டுகளாக ஆவணப்படம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் காக்கைச் சிறகினிலே இதழுக்காக கொடுத்த சிறப்பு நேர்காணல் இது. அவரை நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ்).

கேள்வி : வெகு ஆண்டுகளாக மறுபக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறீர்கள் ? இது பற்றி சொல்லுங்களேன் ?

பதில் : பெரும்பாலான ஊடகங்கள் அரசு சார்பாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளன. நேர்மையாகவும், எளிமையாகவும், குறைந்த செலவிலும் நேரடியாக மக்களிடம் கருத்துச் சொல்லும் சாத்தியம் ஆவணப்படங்களில் உள்ளது. மாற்று ஊடகமாகவும், சரியான வடிவமாகவும் இருப்பது ஆவணப்படங்கள். 'மறுபக்கம்' என்ற அமைப்பை 1994 ல் மதுரையில் சில நண்பர்களோடு தொடங்கினோம். தொலைக்காட்சி,VCP, VCR ஐ பயன்படுத்தி அப்போது படங்களை திரையிட்டோம். இந்த 25 வருடங்களில் நூற்றுக்கணக்கான திரையிடல்கள் நடந்துள்ளன.

கேள்வி:மதுரை திரைப்பட விழாவை வெகு ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள் .இது பற்றி ?

பதில்: 1998 ல் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடந்தன. மதுரையில் 1998 ல் அணுசக்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தினோம். கருத்தரங்குடன் சேர்ந்து திரைப்பட விழாவும் நடந்தது. அப்போது கிடைத்த ஆதரவினால் தொடர்ந்து திரைப்படவிழாக்கள் நடத்தத் தொடங்கினோம். அது வருடாந்தர விழாவாக உருவெடுத்தது.

கேரளாவில் இருந்த ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரன் படங்கள், புராஜெக்ட்டர் போன்றவை தந்து உடன் இருந்து வழிகாட்டுவார். இப்போது அவர் இல்லை;இறந்துவிட்டார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த ஆளுமை.அதற்கு முன்னரே மதுரையில் 'யதார்த்தா','வைகை' போன்ற பிலிம் சொசைட்டிகள் போன்றவை இருந்தன. இன்னும் யதார்த்தா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள் அந்தப் பாரம்பரியத்தை தொடர்ந்து செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தில் மதுரை பன்னாட்டு ஆவணப்படவிழா நடக்கும். இதற்கு பல அமைப்புகள், குழுக்கள், பிலிம் சொசைட்டிகள்,நாடகக்குழுக்கள் உதவி செய்து வருகின்றன.எல்லாவிதமான சாத்தியங்களையும் செய்து பார்த்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசு நடத்துகின்ற விழாவைத் தவிர்த்துப் பார்த்தால்,இந்தியாவில் நடைபெறும் மூத்த திரைப்பட விழா இதுவென்று சொல்ல வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இதில் 50 முதல் 80 வரையிலான ஆவணப்படங்களை திரையிடுவோம்.இதில் நம்நாட்டு ஆவணப்படங்களும் வெளிநாட்டு படங்களும் திரையிடப்படும்.படத்தை இயக்கியவர்கள் குறைந்த பட்சம் ஐந்து பேர் (பத்து பேர் வரை) தங்கள் படங்களை திரையிட்டு பார்வையாளர்களோடு கலந்துரையாடுவர்.அவர்களுக்கும் ஒரு accountability இருக்கும். பார்வையாளர்களும் படத்தை எடுப்பவர்களின் ஆளுமை,புரிதல்,தொடர்பு போன்றவைகளை தெரிந்து கொள்வர்.நண்பர்கள், அமைப்புகள் உதவி செய்வதால் செலவும் பெரிதாக ஆகாது. சில கல்லூரிகள் இடம் தரும்;சிலர் சாதனங்களை இலவசமாக தருவர்;ஒரு சிலர் போக்குவரத்து செலவுகளை ஏற்றுக் கொள்ளுவார்கள்.இப்படி மக்கள் பங்கேற்பு இதில் இருக்கிறது.

இந்த திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதற்கான வேலைகளை மூன்று மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கி விடுவோம்.இதற்காக ஆவணப்படங்களை பெறுவோம்.அவை இரண்டு ஆண்டுகளுக்குள் வெளிவந்தவையாக இருக்க வேண்டும்.100 முதல் 150 வரை படங்கள் வரும்.அதில் 30 படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுவோம்.இதுமட்டுமின்றி திரும்பிப் பார்த்தல் (Retrospective ) என்ற அமர்வில் மூத்த இயக்குநர்களின் படங்கள்; குறிப்பிட்ட நாட்டுப் படங்கள் ,குறிப்பிட்ட தலைப்பில் (சமூக நீதி,சுற்றுச்சூழல், ஆளுமை,மனித உரிமை போல)படங்களை திரையிடுவோம். இது ஒரு முக்கியமான பண்பாட்டு அசைவு நடவடிக்கைதான்.



கேள்வி: ஆவணப்படங்களுக்கு ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் தருகின்றன என்று நினைக்கிறீர்களா ?

பதில் :போதுமான வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை திரைப்படவிழா பற்றி நான்கு,ஐந்து பத்திரிக்கைகளாவது செய்தி வெளியிடுகின்றன.எனக்கு இது குறித்து புகார் ஏதுமில்லை. ஏனெனில் ஆவணப்படங்கள் வெகுசன வடிவம் இல்லை. தீவிர வாசகரை மையமாக வைத்தே இயங்குகின்றன. பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது. பத்திரிகைகள் நான் சொல்லுவதை மேற்கோள் காட்டுகின்றன; செய்தி வெளியிடுகின்றன. எனவே ஊடகங்கள் குறித்து எனக்கு வருத்தமில்லை.

கேள்வி: நீங்கள் 1997 ல் லீலாவதி என்ற முதல் ஆவணப்படத்தை எடுத்து இருக்கிறீர்கள்.'தீவிரவாதிகள்'' பீ','மெர்குரி(Mercury in the Mist),Radiation Stories போன்ற ஆவணப்படங்களை இதுவரை இயக்கி இருக்கிறீர்கள்.இந்தத் துறையில் ஒரு கவனம் கொள்ளத்தக்க ஆளுமையாக இருக்கிறீர்கள்.உங்களுடைய முன்னோடி என்று யாரையும் சொல்ல முடியுமா ?

பதில்:நிறைய பேர் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.ஆனந்த் பட்வர்தன் ,சிலி நாட்டைச் சார்ந்த பேட்ரிசியோ குஸ்மான்(Patricio Guzman) , ஆஸ்திரேலியாவைச் சார்ந்த டென்னிஸ் ஓர்க் (Dennis O' Rourke ),தீபா தன்ராஜ் (பெங்களூர்),கே.பி.சசி(பெங்களூர்), குட்டி ஜப்பானின் குழந்தைகள்(சிவகாசிபற்றி படம் ) எடுத்த சலம் பென்னுராக்கர்(Chalam Bennurkar) போன்றவர்கள் எனக்குள் ஆரம்ப காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்.போலந்து நாட்டைச் சார்ந்த கீஸ்லோவ்ஸ்கி (Krzysztof Kieslowski) எனக்குப் பிடித்தமானவர். நான் தற்போது நெருக்கமாக உணர்வது அமெரிக்கா வைச்சார்த்த பிரெடெரிக் வைஸ்மேன்- தான்.(Frederick Wiseman).அவரது ரசிகர் நான். எனது ஆவணப்பட முயற்சிகள் என்னை அறியாமல் அவரை ஒத்து இருக்கின்றன.



கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகம் 'பெரியார் விருது' கொடுத்துள்ளது .அதைப் பற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில் : தமிழக, இந்திய அரசியலை தீர்மானிக்கிற அம்சமாக திராவிட அரசியல் இருக்கிறது. தமிழக அரசியலில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், அரசியல் போக்குகள்,வளர்ச்சித் திட்டங்கள்,மாநிலம் போகும் திசை,தமிழ்நாட்டின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றை திராவிட அரசியல் தீர்மானிக்கிறது. அதன் ஊற்று திராவிட அரசியல். எனவே தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் எனக்கு 'பெரியார் விருது' வழங்கியதை(2017) மிகுந்த மரியாதையோடு ஏற்றுக் கொள்கிறேன். இதை நான் சரியான திசைவழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதற்கான அடையாளமாக கருதுகிறேன்.

'பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை'யுடன் இணைந்து திரையிடல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.வருகிற ஏப்ரல் 12 முதல் 14 வரை சமூக நீதி திரைப்பட விழா , பெரியார் திடலில் நடத்த உள்ளோம்.

கேள்வி:'என்சாதி' என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறீர்கள்! இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

பதில் : மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவித்த போது நான் திகைப்பு அடைந்தேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். வன்முறை அரசியல் மீதான நம்பிக்கை, சர்வாதிகார குணம் கொண்டவர் மோடி. வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், உரையாடல், நெகிழ்வுத் தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்காதவர்.முரட்டு அரசியலை கடைபிடிப்பவர்.முதலமைச்சராக இருந்தபோது ,கார்ப்பரேட்டுகளுக்காக தன் மாநில பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டவர்.இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட ஒருவரை இந்திய சிவில் சமூகம் பிரதம மந்திரி வேட்பாளராக ஒத்துக் கொண்டதை ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக கருதினேன்.இது எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.'மோடி போல ஒரு நபர் வேண்டும்' என்ற எண்ணம் மக்களுக்கும் உள்ளதோ என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர்ப்பு இல்லாமல் இருக்கிறார். இங்கு நடக்கும் பல குற்றங்களுக்கு குற்றவாளி எண் ஒன்றாக( A.1 ) மோடி இருந்தால் அக்குற்றத்திற்கு துனைநிற்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். அதிகாரவர்க்கம், ஊடகம்,தொழில் அதிபர்கள் என பலர் அதில் உண்டு.அந்தப் பட்டியலில் அக்குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் அடக்கம்.

குற்றத்தை செய்வதை விட அதனை ஆதரிக்கிற,அங்கீகரிக்கிற, பாதுகாக்கிற மனநிலையைப் பற்றித்தான் பேச வேண்டும் என்று தோன்றியது.'Consensus', 'Hegemony' ,என்ற கருதுகோள் களின் அடிப்படையில் குற்றங்கள் நடைபெறுகின்றன.'ஒத்தக் கருத்தை உருவாக்கி ஆதரிக்கச் செய்வது' என்று அந்தோனியா கிராம்சி சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரமும் வன்முறையைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தப்படுவதில்லை.ஒத்தக் கருத்தை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களையே அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் இதன் அடிப்படை. இதைத்தான் 'குஜராத் மாடல்' என்று சொல்லுகிறோம்.இதனுடைய வடிவம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் குஜராத்திற்கு முன்பே இருக்கிறது.திருப்பூரில் அதுதான் நடைபெறுகிறது. அதை வைத்துத்தான் நான் 'டாலர் சிட்டி'(Dollar City) என்ற ஆவணப்படத்தை எடுத்தேன்.தொழிலாளர்களை நசுக்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தொழில் அதிபர்கள் சுரண்டுவதுதான் திருப்பூரில் நடக்கிறது.

இந்த டாலர் சிட்டியின் தொடர்ச்சிதான், இப்போது நான் எடுத்துக் கொண்டு இருக்கும் 'என் சாதி' (My Caste) என்கிற படம் சாதி பற்றி நாம் கொண்டுள்ள மயக்கம்,போலித்தனம்,வேடம்,சமரசம், வெற்று முழக்கம் பற்றி பேசும். ஒடுக்குமுறை வெளியில் தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் சிந்தனை ஆபத்தானது. அது நம் கவனத்துக்கு உரியது. சாதியை காப்பாற்றுகிற,அங்கீகரிக்கிற, கொண்டாடுகிற மனநிலையை அல்லது அதை மெளனமாகக் கடந்து போகும் மனநிலையை இப்போது நான் எடுத்துக் கொண்டு இருக்கிற ஆவணப்படம் பேசும்.



கேள்வி: உங்களுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி கடந்த ஆண்டு 'மகுடம் விருது' கொடுத்ததே ?


பதில்: நியூஸ் 18 எனக்குப் பிடித்த தொலைக்காட்சி. குணசேகரன் போன்ற ஒரு நல்ல ஊடகவியலாளர் அதன் தலைமைப் பொறுப்பில் பணி புரிகிறார். இது போன்ற விருது என்னை பலரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். என் வீட்டில் உள்ளவர்கள் பொறுத்துக் கொண்டு என்னை என் போக்கில் வேலை செய்ய அனுமதிக்கின்றனர்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். ஆகவே இது போன்ற விருதுகள் என் குடும்பத்தாரையும் என்னை ஆதரிப்போரையும் என் தோழர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.


கேள்வி:நீங்கள் எடுக்கும் ஆவணப்படங்களுக்கு தயாரிப்புச் செலவு எப்படி கிடைக்கிறது ?

பதில்:இதுவரை நான் 19 ஆவணப்படங்கள் எடுத்துள்ளேன்.இதில் டாலர் சிட்டி என்ற படத்தை மட்டும் ராஜ் கஜேந்திரா என்ற நண்பர் என் மீது கொண்ட அன்பின் காரணமாக தயாரித்தார். மற்ற படங்களுக்கு நண்பர்கள், தோழமைகள்தான் பங்களிப்பு செய்துள்ளனர். இதை ஒரு கொள்கையாகவே நான் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகிறேன். தனிநபர்களோ நிறுவனங்களோ நிதி உதவி செய்தால் கூட பத்தாயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நன்கொடை பெறுவதில்லை என்பதும் ஒரு கொள்கை முடிவு தான்.

கேள்வி: உங்கள் குடும்பம் பற்றி ?

பதில்: மனைவி தாக்‌ஷா, சினிமா, விளம்பரப் படங்களுக்கான உடை அலங்கார designer ஆக இருக்கிறார்.

கேள்வி: தமிழ்நாட்டில் ஆவணப்படம் எப்படி இருக்கிறது ?

பதில் : மிக நன்றாக இருக்கிறது. அரசியல், கலை,வரலாற்றுப்படம்,ஆளுமைகள் என பன்முகத்தன்மை கொண்ட ஆரோக்கியமான சூழலில் பலரது ஆவணப்படங்கள் உருவாகி வருகின்றன. இது போன்ற ஒரு வெரைட்டி மற்ற மாநிலங்களில் இல்லை. தில்லி,மும்பை,கல்கத்தா போன்ற நகரங்களில் ஆவணப்படங்கள் வெளியாகின்றன. அது வேறு தளம். 



கேள்வி:நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

பதில் : நான் ஒரு Documentary Activist (ஆவணப்பட செயற்பாட்டாளர்) ஆக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.Film Maker (படத்தை எடுப்பவர்),Curator (படங்களைச் சேகரித்து, தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்குபவர்), Organiser (திரையிடல்களை நடத்துபவர்), Teacher(ஆவணப்படங்கள் பற்றி வகுப்பு எடுப்பவர்) ஆக இருக்கிறேன். இதில் எனது நேரம்,கவனம், உழைப்பு,பங்கை கடந்த 25 ஆண்டுகளாக செலுத்தி வருகிறேன்.

தமிழ்நாட்டுக்கு வெளியேயும் இந்தியா முழுக்க பயணம் செய்து ஆவணப்படவிழாக்களை நடத்தி வருகிறேன். நிறைய விழாக்களில் தேர்வுக்குழு உறுப்பினராகவும், நடுவராகவும் பங்காற்றி வருகிறேன். சென்ற ஆண்டு கூட ஜெர்மனியில் ப்ராங்க்பர்ட் நகரில் நடந்த ஒரு பன்னாட்டு ஆவணப்படவிழாவில் நடுவர் குழு உறுப்பினராகக் கலந்து கொண்டேன்.

கேள்வி: நீங்கள் Court,Fandry, ஒழிவு திவசத்தே களி போன்ற புனைவுப்படங்களை(Feature film) திரையிட்டு வருகிறீர்கள் ?

பதில்: மறுபக்கம் சார்பாக புனைவு படங்களையும் அவ்வப்போது திரையிட்டுள்ளோம். சமீபத்தில் 'படப்பெட்டி திரைப்பட இயக்கம்" சார்பாக கவனிக்கப் படாத, திரைக்கு வந்த புனைவுப் படங்களை திரையிட்டு வருகிறோம்.கடந்த மாதம் கூட மதுபானக் கடை ,கடைசி தரிப்பிடம் (The last Halt - இலங்கை) என்ற படங்களை திரையிட்டோம். இந்நிகழ்வுகளில் அந்தப் படங்களின் இயக்குநர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு கலந்துரையாடல் நடத்துவதுதான் இந்நிகழ்வுகளின் முக்கிய அம்சம்.

கேள்வி: மாதாந்திர திரையிடல் செய்து வந்தீர்களே ?

பதில்: மதுரையிலிருந்து 2008 ல் சென்னைக்கு வந்தேன். தொடக்கத்தில் முனைவர் எம்.டி.முத்துக்குமாரசாமி தாம் பணியாற்றும் National Folklore Support Centreல் மாதாந்தர திரையிடல் நடத்த இடம் கொடுத்தார். பின்பு அண்ணாசாலை புக்பாயிண்ட்டில் திரையிடல் செய்தோம். பேரா வீ.அரசு உதவியால் சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் திரையிட்டோம். பிறகு பனுவல் புத்தக நிலையம், டிஸ்கவரி புக் பேலஸ், பெரியார் திடல் என தொடர்ந்து திரையிட்டு வருகிறோம். பேரா மணிவண்ணன், பேரா ரவீந்திரன் ஆகியோர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர். அவர்களது துறைகளிலும் திரையிடல்கள் நடத்துகிறோம். சமீப காலமாக மாக்ஸ் முல்லர் பவனிலும் திரையிடல்கள் நடத்துகிறோம்.

இது மட்டுமின்றி சமூகநீதி, காடு, இசை போன்ற தலைப்புகளின் கீழ் சிறப்புத் திரைப்படவிழாக்களும் சென்னைப் பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழாவையும் (ஏழாவது ஆண்டாக) பல்வேறு கல்லூரிகள், தோழமை அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தி வருகிறோம்.

கேள்வி: உங்களது ஆவணப்படத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் ஒருவர் பெற்றுள்ளாராமே ?

பதில்: ஸ்வேதா கிஷோர்(Shweta Kishore) என்ற பெண்மணி , இந்தியாவில் எடுக்கப்பட்ட மூன்று ஆவணப்படங்களை தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அதில் ஒன்று நான் எடுத்த 'செருப்பு'(தலீத் கிறிஸ்தவர் பற்றியது) என்ற ஆவணப்படம். இதற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.அது நூலாகவும்(Indian Documentary and Film Makers- Oxford University) வந்துள்ளது.எனது ஊடகப் பயணத்தில் இது ஒரு மைல் கல் எனலாம்.இது தவிர நிறைய பேர் ஆய்வு செய்துள்ளனர்.நான் எடுத்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு படத்தைப் பற்றி ஒரு ஆய்வுமாணவர் எழுதிஉள்ளார்.இதிலுள்ள பல விஷயங்கள் எனக்கே புதிதாக இருந்தது. நமது வேலையின் முக்கியத்துவத்தை இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.


கேள்வி:வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில்: இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள் எல்லாவிதமான ஜனநாயக அமைப்புகளையும் சீர்குலைத்து விட்டார்கள்.திமுக,காங்கிரஸ் மீது நமக்குள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பாஜகவுடன் பேசவே முடியாது. பாஜக பேசுவது வெறுப்பு அரசியல், வன்முறை அரசியல், கார்ப்பரேட் அரசியல் மற்றும் சனாதன அரசியல். ஜனநாயகம் இருக்குமா என்ற அச்சமே இப்போது எழுகிறது. அது காப்பாற்றப்பட வேண்டும்.


2019 / Peter Durairaj


No comments:

Post a Comment