Wednesday, August 15, 2012

எங்கே போயின அரசியல் ஆவணப்படங்கள்?




சுயதேடல் ஆவணப்படங்களின் புற்றீசல்

அமுதன் இராமலிங்கம் புஷ்பம்

இந்தியாவின் சுதந்தரமான (இன்டிபென்டன்ட்) ஆவணப்படப் போக்கை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அரசியல் படங்கள். மற்றொன்று கலை அல்லது சுயதேடல் ஆவணப்படங்கள். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அரசியல் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன. ஆனந்த் பட்வர்தன், மஞ்சிரா தத்தா, வசுதா ஜோசி, தீபா தன்ராஜ், கே.பி.சசி, பின்னாட்களின் சஞ்சய் காக், அமர் கன்வர், சரத் சந்திரன், பிஜூ டோப்போ போன்றோர் மக்கள் போராட்டங்களை, மனித உரிமை மீறல்களைப் பற்றி  ஆவணப்படங்கள் எடுத்தனர். மக்களிடம் படங்களைக் கொண்டு போய் சேர்ப்பதை தங்களது பணியின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்த்தனர். பல போராட்டங்களின் அங்கமாக ஆவணப்படங்கள் திகழ்ந்தன. ஆனால் அந்நிலை இரண்டாயிரத்திற்குப் பிறகு படிப்படியாக மாறத்தொடங்கியது.

ஆவணப்படச்சூழலில் உயர்தட்டு மக்களுக்கான பொழுதுபோக்கு அழகியல் அல்லது சுயதேடல் சினிமா என்று ஒரு வகை மேலோங்கியுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதற்கு நிதி கிடைப்பது சுலபமாகியுள்ளது. அப்படிப்பட்ட படங்களே திரைப்படவிழாக்களில் தேர்வு செய்யப்படுகின்றன. அவற்றிற்கே விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்சன் ஒரு புதிய திட்டத்தை பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் பிஎஸ்பிடி. பொதுசேவை ஒளிபரப்பு தொலைக்காட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த நிதியின் கீழ் கார்பரேட் கம்பெனிகள் தூர்தர்சனுக்கு நிதி கொடுக்கின்றன. அந்த நிதியைக்கொண்டு ஒரு சில குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் படம் எடுப்பதற்கு நிதி கொடுக்கப்ப டுகின்றன. குறிப்பாக எயிட்ஸ், பாலியல் வெளிப்பாடுகள், ஓரினப்புணர்ச்சி மற்றும் பாலியல் சிறுபான்மையினர் பற்றிய தலைப்புகளுக்கு அதிகம் பணம் கொடுக்கப்படுகின்றது. ஒரு இயக்குநரின் மனு தேர்வு செய்யப்பட்டால் பிஎஸ்பிடியின் பொறுப்பாளர்கள் படம் எடுக்கப்படும் விதம், படம் எடிட் செய்யப்படும் விதம் ஆகியவற்றில் நேரடியாகத் தலையிட்டு தங்களுக்கு வசதியான தொனியைக் கொண்ட ஒரு ஆவணப்படத்தை அந்த இயக்குநர் உருவாக்குவதை உறுதி செய்கின்றனர். இந்தியாவில் இருநூறு இயக்குநர்கள் தொடர்ந்து படம் எடுக்கிறார்கள் என்றால் பத்தாண்டு காலத்தில் ஏறக்குறைய எல்லா இயக்குநர்களும் இந்த எந்திரத்திற்குள் சென்று வந்து “நேர்த்தி” செய்யப்படுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஆவணப்படங்களில் அதிகமாக படமாக்கப்படும் கதைக்கருக்கள் பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் பற்றியதாக இருப்பது எதேச்சையானதாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை “மென்” திரைப்படங்கள் என்று குறிப்பிடலாம். இவை எந்த அரசியல் நிலைப்பாடும் எடுப்பதில்லை. எதையும் சரி தப்பு என்று சொல்வதில்லை.  தொலைக் காட்சியின் பார்வையாளனுக்கு ஏற்றவகையில் பொழுதுபோக்கு அழகியல் தன்மை கொண்ட, அவனது இருப்பை, வசதியை, மனசாட்சியை கேள்வி கேட்காத மொன்னை அல்லது மலட்டு ஆவணப்படங்கள் எடுத்துத் தள்ளப்படுகின்றன. அரசியல் சினிமா ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது.

ஆனால் இன்று நாடெங்கும் மக்கள் நெருக்கடியில் இருக்கின்றனர். இயற்கை வளங்கள் மக்களிடம் இருந்து துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டு கார்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கப்படுகின்றன. உரிமைக்கான போராட்டங்கள் கிராமங்கள், நகரங்கள் என்ற பாகுபாடின்றி வெடித்தபடி இருக்கின்றன. இப்போதும் இந்த இயக்குநர்கள் சுயதேடல் ஆவணப்படங்களையே எடுப்பார்களா? அல்லது போராடும் மக்களுக்கு ஆதரவாக மறுபடியும் அரசியல் ஆவணப்படங்கள் எடுக்க யார் வருவார்கள்?.

No comments:

Post a Comment